Saturday, September 30, 2017

மருங்கூர் - சங்ககால நகரம்

வணக்கம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊர் மருங்கூர். இங்கு 1 ஏக்கர் நிலப்பகுதியில் மக்கள் வாழ்விடமும் அதற்கு மறுபக்கத்தில்  இறந்தோரைப் புதைத்து ஈமக்கிரியைகள் செய்த  பகுதியும் உள்ளன.


2007ல் முதலில் இப்பகுதியில் தொல்லியல் தடயங்கள் இருப்பது தமிழக தொல்லியல் துறையின் ஆய்வாலர்களால் அடையாளப்படுத்தப்பட்டது.

இங்கு கண்டறியப்பட்டுள்ள மக்கள் வாழ்விடத்தின் காலம் கி.மு3ம் நூற்றாண்டு என அறியப்படுகின்றது. தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் இங்கு கிடைக்கப்பெற்றன. சங்க காலத்து செங்கல் அமைப்புக்கள் இங்கு தென்படுகின்றன. முறையான அகழ்வாராய்ச்சி இன்னமும் இப்பகுதியில் செய்யப்படாத நிலையில் இது தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் பகுதியாகவே இருக்கின்றது.

மருங்கூர் பண்டைய காலத்தில் வளர்ச்சியடைந்த ஒரு நகரமாகத் திகழ்ந்துள்ளது. ஏறக்குறைய 2500 ஆண்டுகள் பழமையான செங்கற்களால் உருவாக்கப்பட்ட கட்டிட அமைப்புக்களின் எச்சங்களை இன்னமும் இங்கே காணமுடிகின்றது.

அழகன்குளம் ஆய்வு போல இப்பகுதியிலும் முறையான தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு இங்கு வாழ்ந்த மக்களின் நாகரிகம் தொடர்பான செய்திகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

இந்த விழியப் பதிவில் பேரா.சிவராம கிருஷ்ணன் இப்பகுதியின் முக்கியத்துவத்தை விளக்குகின்றார்.


இப்பதிவினைச் செய்ய உதவிய டாக்டர்.சிவராமகிருஷ்ணன், திரு.வடலூர்.சேகர். திரு.சரவணன், வடலூர் நாட்டாமை திரு.சேகர் ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, September 16, 2017

மறுதால்தலை பிராமி கல்வெட்டும் சமணர் கற்படுக்கைகளும்

வணக்கம்.


​திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைக்கு வடகிழக்கே 9 கி.மீ தொலைவில் சீவலப்பேரி என்ற ஊரில் மறுகால்தலை என்ற சிறு குன்று உள்ளது. தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு ஆகிய மூன்று நதிகள் இவ்வூரின் அருகில் இணைகின்றன. இவ்வூரில்  உள்ள சிறு குன்றுகளில் ஒன்றில் மேற்குப் பகுதியில் பஞ்சபாண்டவர் படுக்கை என்றழைக்கப்படும் இயற்கையாய் அமைந்த குகைத்தளம் ஒன்றுள்ளது.    இதில் சமண முனிவர்களுக்கென்று அமைக்கப்பட்ட கற்படுக்கைகள்  காணப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டை முதன் முதலாக 1906ம் ஆண்டில் அப்போதைய நெல்லை மாவட்டக் கலெக்டர் ஹெமைடு என்பவர் கண்டறிந்தார்.

குகைத்தளத்துப் பாறையின் நெற்றிப் பகுதியில் பெரிய எழுத்துக்களில் ஒருவரியில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சில எழுத்துக்கள் ஏறக்குறைய40 செ.மீ உயரம் உள்ளவை. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1ம் நூற்றாண்டாகும்.




"வெண்காஸிபன் கொடுபித கல்கஞ்சனம்"

வெண்காசிபன் என்பவன் இங்குள்ள குகைத்தளத்தில் ஒரு கட்டட அமைப்பு அமைத்துக் கொடுத்துள்ளான் என்பது இதன் பொருளாகும்.


சமஸ்கிருதத்தில் "கஞ்சணம்" என்பது ஒருவகை கோயில் அமைப்பைக் குறிக்கும். பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத் தகட்டையும் குறிக்கும். இக்கல்வெட்டில் படுக்கை அல்லது ஏதோ ஒரு கட்டடப் பகுதியைக் குறிக்கிறது எனக் கொள்ளலாம். காசிபன் என்ற சொல்லில் உள்ள "சி" என்ற எழுத்து அசோகன் பிராமி எழுத்தாகும்.

இத்தொடரில் உள்ள எழுத்துக்கள் ஒரே சீராக இல்லாமல் பெரிதாகவும் ஒழுங்கற்ற முறையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. தரைப்பகுதிக்கும்கல்வெட்டுப் பகுதிக்குமிடையில் சுமார் 40 அடி இடைவெளி அமைந்துள்ளது.

இந்த சிறு குன்றின் அருகிலேயே உள்ள மலைப்பகுதியில் பாகுபலியின் சிற்பம் ஒன்றும் உள்ளது. பாகுபலியின் சிற்பம் இன்று சாஸ்தாவாக மாற்றம் கண்டு சாஸ்தா தெய்வ வழிபாடு இன்று நடைபெறுகின்றது. இப்பகுதி மக்கள் குலதெய்வ வழிபாடு செய்யும் இடமாகவும் இப்பகுதி அமைந்திருக்கின்றது.

இந்தப் பதிவில் கொற்கையிலும் தற்சமயம் புதுக்கோட்டையிலும்தொல்லியல் ஆய்வாளராகப் பணியாற்றும் திரு.சந்திரவானன் அவர்கள் இக்கல்வெட்டு பற்றி விரிவாக நமக்கு விளக்கமளிக்கின்றார்.



இப்பதிவினைச் செய்ய உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் முனைவர்.கட்டலை கைலாசம்,  சகோதரர் விஜய் (தீக்கதிர்) ஆகியோருக்கு எனது நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, September 9, 2017

வரலாற்று ஆய்வறிஞர் திவான்

வணக்கம்.

அறிஞர்கள் நம்முடன் வாழும் போதே அவர்களது ஆய்வுகளைப் பற்றி அறிந்து கொள்வதும், அவர்களது ஆய்வுப் பணிக்காக அவர்களைப் போற்றிச் சிறப்பிப்பதும் அவசியம். நம்மோடு வாழ்பவர்களில் தம் வாழ்நாட்களையே ஆய்வுப் பணிக்காக அர்ப்பணித்து வாழும் சிலர் இருக்கின்றனர். மிகக் கடுமையான ஆய்வு நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் களப்பணிகளை மேற்கொண்டு தகவல்களைச் சேகரித்து அவற்றை நூல்களாக வெளியிட்டு  இத்தகையோர் தொடர்ந்து சமுதாயத்திற்கானப் பங்கினை மிகச் சீரிய வகையில் ஆற்றி வருகின்றனர். அத்தகையோரை அடையாளம் கண்டு போற்றும் பண்பு நம் சூழலில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.

போலிகளைப் புகழும் கலாச்சாரம் தான் பெரும்பாலான தளங்களில் விரிவாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அத்தகைய நிகழ்வுகளுக்கு மத்தியில் தரமான ஆய்வுகளைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டு வரும் நல்லறிஞர்களை இனம் கண்டு பாராட்டுவதைத் தமிழ் மரபு அறக்கட்டளை முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளது.

இலக்கியமும் வரலாறும் தனது இரு கண்கள், என்கின்றார் தமிழகத்தின் நெல்லையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வறிஞர் திவான் அவர்கள்.


  • தமிழ் நாட்டின் மிகச் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவர்...
  • சுமார் 100 அறிய நூல்களுக்கும் மேல் எழுதியவர் ​
  • இன்றும் தொடர்ந்து ஆவணச் சேகரிப்பில் ஈடுபட்டு களப்பணிகளின் வழி தகவல்களைச் சேகரித்து அவற்றை ஆய்வு செய்து வெளியிட்டு வருபவர்
  • 50,000க்கும் குறையாத  நூல்களுடன் தன் இல்லத்தில் வாழ்பவர்


அவரது பேட்டியைத் தாங்கிய விழியப் பதிவே இன்றைய தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது.

தனது முதல் நூலாகிய​ தென்காசி தந்த தவப்புலவர் என்ற நூல் தொடங்கி இவரது ஆய்வுகள் நூல்களாகப் பிரசவிக்கப்பட்டுக்கொண்டே உள்ளன.

குறிப்பிட்டு சொல்வதற்குச் சில உதாரணங்களாக

  • ஆஷ் கொலை வழக்கு
  • மாலிக் கபூர் பற்றிய தகவல்
  • ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள்
  • கொற்கை துறைமுகம்
  • இந்திய விடுதலைப் போரின் போது இஸ்லாமியர்களின் பங்கு
  • ​மருதநாயகம்​ ஆய்வுகள்



..​களப்பணி அனுபவங்கள்
..ஆய்வு மாணவர்களளுக்கானக் குறிப்புக்கள்
..ஆவணப் பாதுகாப்பு பற்றிய தேவைகள்
எனப் பல தகவல்களை இந்தப் பேட்டியில் பகிர்ந்து கொள்கின்றார்.

 ​அவர் வீட்டிலேயே இந்தப் பேட்டியின் பதிவு செய்யப்பட்டது



இப்பதிவினைச் செய்ய உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் முனைவர்.சௌந்தர மகாதேவன், திரு.நாறும்பூ நாதன், சகோதரர் விஜய் (தீக்கதிர்) ஆகியோருக்கு எனது நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]