Saturday, September 30, 2017

மருங்கூர் - சங்ககால நகரம்

வணக்கம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊர் மருங்கூர். இங்கு 1 ஏக்கர் நிலப்பகுதியில் மக்கள் வாழ்விடமும் அதற்கு மறுபக்கத்தில்  இறந்தோரைப் புதைத்து ஈமக்கிரியைகள் செய்த  பகுதியும் உள்ளன.


2007ல் முதலில் இப்பகுதியில் தொல்லியல் தடயங்கள் இருப்பது தமிழக தொல்லியல் துறையின் ஆய்வாலர்களால் அடையாளப்படுத்தப்பட்டது.

இங்கு கண்டறியப்பட்டுள்ள மக்கள் வாழ்விடத்தின் காலம் கி.மு3ம் நூற்றாண்டு என அறியப்படுகின்றது. தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் இங்கு கிடைக்கப்பெற்றன. சங்க காலத்து செங்கல் அமைப்புக்கள் இங்கு தென்படுகின்றன. முறையான அகழ்வாராய்ச்சி இன்னமும் இப்பகுதியில் செய்யப்படாத நிலையில் இது தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் பகுதியாகவே இருக்கின்றது.

மருங்கூர் பண்டைய காலத்தில் வளர்ச்சியடைந்த ஒரு நகரமாகத் திகழ்ந்துள்ளது. ஏறக்குறைய 2500 ஆண்டுகள் பழமையான செங்கற்களால் உருவாக்கப்பட்ட கட்டிட அமைப்புக்களின் எச்சங்களை இன்னமும் இங்கே காணமுடிகின்றது.

அழகன்குளம் ஆய்வு போல இப்பகுதியிலும் முறையான தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு இங்கு வாழ்ந்த மக்களின் நாகரிகம் தொடர்பான செய்திகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

இந்த விழியப் பதிவில் பேரா.சிவராம கிருஷ்ணன் இப்பகுதியின் முக்கியத்துவத்தை விளக்குகின்றார்.


இப்பதிவினைச் செய்ய உதவிய டாக்டர்.சிவராமகிருஷ்ணன், திரு.வடலூர்.சேகர். திரு.சரவணன், வடலூர் நாட்டாமை திரு.சேகர் ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments: