Saturday, January 13, 2018

தூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 2

வணக்கம்.


பாண்டிய நாடு முத்துடைத்து என்கின்ற மிக நீண்ட கால பழமொழியின் ஆணிவேர் இன்றைக்கும் இருக்கின்ற இடம் தூத்துக்குடி. பாண்டியநாட்டின் முத்துக்கள் எகிப்திய, ரோமானிய நகரம் வரை வணிகம் செய்யப்பட்டன என்கின்ற வரலாற்றுப் பெருமைக்கு சொந்தமான இடம் அன்றைய பாண்டிய நாட்டின் மிக முக்கியமான துறைமுகப்பகுதியாக இருந்த கொற்கை, தொண்டி, தூத்துக்குடி எனலாம். நெய்தல் நில மக்களில் கடலோரக் குடிகளின் மீன்பிடிப்பவர்களைப்போல ஆழ்கடலில் முத்தும், சங்கும் எடுப்பதில் தூத்துக்குடி கடலோர மக்கள் அன்றும் இன்றும் முன்னணியில் இருக்கின்றார்கள்.

ஆனால் வரலாற்றுப் பெருமையையும் பொருளாதார வளத்தையும் ஒரு சேர உருவாக்கித் தந்த இக்கடல் குடிகளின் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. தூத்துக்குடியில் தெரேஸ்புரம் மற்றும் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் முதன்மைத் தொழில் மீன் பிடித்தலும் கடலில் மூழ்கி சங்கெடுத்தலுமே. இந்தச் சங்குகள் அழகு சாதனப்பொருட்களாகவும் வழிபாட்டுப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இத்தகைய பொருட்களை எடுப்பதற்காக ஆழ்கடலில் மூழ்கிப் பணி செய்யும் இந்த முக்குளிப்பவர்கள் படும் துன்பமும் துயரங்களும் கணக்கில் அடங்காதவை. தொடர்ந்து கடல் நீரில் மூழ்கி இருப்பதினால் கடலின் அழுத்தத்தினாலும் கடல் உப்பு நீரின் அரிப்பினாலும் அவர்களின் உடல் விரைவிலேயே நசிந்து முதுமையடைந்து விடுகிறார்கள். 40 வயதிற்குமேல் அவர்கள் நடமாடத்தகுந்த மனிதர்களாக இருக்க முடியவில்லை. இயற்கை தரும் தண்டனை இதுவென்றாலும் செயற்கையாக அவர்களுக்குத் துன்பம் நேர்கின்றது . முக்குளிக்கும் போது அவர்கள் பயன்படுத்துகின்ற நீர் மூழ்கி உபகரணங்கள் போதிய பாதுகாப்போடு இல்லை. தரமற்றவையாகவும் பாதுகாப்பு அற்றவையாகவும் இருப்பதினால் கடலிலேயே மாண்டவர்களும் உண்டு . மீண்டவர்களில் பலர் உடல் உறுப்புக்களை இழந்து ஊனமுற்றோராக வாழும் நிலையும் இருக்கின்றது.

கடலின் தாக்கத்தினால் நிரந்தர நோயாளிகளாக மாறியிருக்கின்ற இக்கிராம மக்களுக்குப் போதிய மருத்துவ உதவி அளிக்க வேண்டிய அமைப்புகளோ இவர்களைக் கண்டு கொள்வதில்லை. தன்னார்வத்தோடு உதவக்கூடிய ஒரு சில அமைப்புக்களை இவர்கள் நாடுகிறார்கள். ஆயினும் அதுவும் எட்டாக்கனியாகவே உள்ளது

விழியப் பதிவைக் காண: 
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=IwGDUPR0hmY&feature=youtu.be

இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய    சாயர்புரத்தைச் சேர்ந்த சகோதரர் மைக்கல், நண்பர் ஒரிசா பாலு ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

3 comments:

PV said...

திரேஸ்புரமா? தெரேஸ்புரமா? அலங்காரத்தட்டுவா? அல்ங்காரத்திட்டுவா? கடல் குடிகளா? கடலோடிகளா?

''தூத்துக்குடி அதைச்சுற்றி கடலோர கிராமங்களில் சங்கு குளிக்கிறார்கள்''

ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். தற்காலத்தில் சங்கு குளித்தல் என்பது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில். அரசு குறிப்பிடும் இடங்களில், குறிப்பிடும் கால அளவில் மட்டும்தான் குளிக்கவேண்டும். பவளப்பாறைகள் போன்றவை மன்னார் குடாவில் அழிந்துகொண்டிருப்பதாகவும். ஆண்டாண்டுதோறும் சங்கு குளித்தால் சங்குகள் வளராமல் குறைந்து போய்விடும் என்ற ஆராய்ச்சியின் விளைவாக ஒவ்வொரு வருடமும் ச்ங்கு குளிக்கக்கூடாது என்று ஆணையிட்டுவிட்டது. சங்கில் இருந்து முத்து வருவதால் சங்கு குளித்தலே. முத்து குளித்தலாகும். அது தூத்துக்குடியில் மட்டும்தான். அதைச்சுற்றியுள்ள கிராமங்கள் என்றால் அலங்காரத்தட்டு வரும். ஆனால் தூத்துக்குடி மாநகராட்சி ஆனபின் அலங்காரத்தட்டு மாநகராட்சியின் கீழ் வந்து தூத்துக்குடியே ஆகிவிட்டது.

தொண்டி பாண்டியநாட்டில் வரலாற்றில் குறிப்பிடப்படும் துறைமுகம். ஆனால் அது எங்கே இன்று? இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி என்ற பெயரில் கடலோர ஊரொன்று உண்டு. ஆனால் கொல்லமே பாண்டியரின் தொண்டி என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

கொற்கை, தூத்துக்குடிக்கு அடுத்த கடலோரக்கிராமமான புன்னைக்காயலே என்கிறார்கள். அவ்வூர்க்காரர்களும் கொற்கை என்று பதாகை வைத்திருக்கிறார்கள். நீங்கள் அங்கேயும் போயிருக்க வேண்டும். 18யே மைல்கள்தான் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து. உள்ளூர்ப்பேருந்தகள் அரைமணிக்கொருதர்ம் செல்லும். திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் பத்து நிமிடத்துக்கொருதரம் செல்லும். புன்னைக்காயல் எனக் கேட்டு சீட்டு வங்கவும்.

மின் தமிழில் நுரைக்கற்கள் பற்றி எழுதியிருக்கிறீர்கள். எங்கள் வீடு அக்கறகளினாலேயே கட்டப்பட்டது. பிறந்ததிலிருந்து அங்குதான் வாசகம். என் பெற்றோர் மரித்தபின் என் தம்பி அவ்வீட்டை இடித்து செங்கறகளினால் கட்டினான்.

நுரைக்கற்கள் தேயா. அப்படியே இருக்கும் வலிமை படைத்தவை.

க்டலோர மக்களின் வாழ்க்கையை கரிசனத்தோடு காட்டியதற்கு நன்றி.. அடுத்தமுறை அதே கடலோர மக்கள் கடலை வைத்துப்பிழைக்கும் உப்பளங்களில் வேலை பார்க்கும் உப்பளத்தொழிலாளர்களாக ஆயிரக்கணக்கில் தூத்துக்குடி, அலங்காரத்தட்டு. திரேஸ்புரம். புன்னைக்காயல். பழைய காயல், தருவைக்குளம், முள்ளக்காடு, முத்தையபுரம், போன்ற க்டலோர ஊர்களில் வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையைப்பற்றியும் தெரிந்தெழுங்கள்.

சிறப்பான முயற்சி. நன்றி. வணக்கம்.

மின் தமிழில் படித்தபின் இப்பதிவிலும் படித்தேன். மின் தமிழில் என் மேற்கண்ட கருத்துக்களை நீங்கள் வெளியிட்டால் அது சரியே.

PV said...

//சங்கில் இருந்து முத்து வருவதால் சங்கு குளித்தலே. முத்து குளித்தலாகும்.//

This sentence is wrong. Sorry. I change it to say Pearls grow in shells, not conches. (sangkus). However, Government link both and allows both pearl fishing and conch fishing at one and the same period. Further, the fishermen don't go for conches only; they dive for shells. The shells are brough ashor in gunnysacks. They are auctioned or sold. People (fishing families) buy them and bring the sacks home where the women of the house sit around and pierce open the shells to search for pearls. In a sack, hardly a few small pearls are found. If a big pearl is found, it'll be a sensational news.

You've noted that conches (sangkus) are used for spiritual items also. That is valampuri sangku. Hindus buy and use it as a puja item. For Vaishnavas, it is mandatory to have it at their puja room.

BTW, all the fisherfolk in Tuticorin, Nellai and Kumar district are catholic fishermen.

PV said...

தூத்துக்குடியிலிருந்து குமரி வரை உள்ள கடலோரக்கிராமங்களில் வாழும் மீனவர்கள் நாம் பரதவர்கள் என்கிறோம். தூத்துக்குடி முறையே டச்சு, டேனிஸ், ஃப்ரென்சு, போர்த்துககீசியர், ஆங்கிலேயர் காலனி ஆதிக்கத்தில் கீழ் வந்தது.
ஃப்ரென்சுக்காரர்கள் விட்டுச்சென்ற்து ஒரு சிறிய தேவாலயம். அது CSI (Church of South India) விடம் இன்றிருக்கிறது. அங்கே ஆங்கிலத்தில்தான் இன்றும் மாஸ். தமிழ்தெரியாதோருக்காக. அது இருக்கும் தெரு (பீச் ரோட்) இன்று ஃப்ரென்ச் சாப்பல் ரோட் என்றழைக்க்ப்படுகிறது.

வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற நெல்லை கலெக்டர் ஆஷ், முதலில் தூத்துக்குடியில்தான் சப் கலெகடர். அவர் அலுவலகம் இந்த சாப்பல் அருகில். இன்று கஸ்டம்ஸ் ஆஃபிஸ். தூத்துக்குடியில் அவர் வேலை பார்த்த போது மக்களால் பெரிதும் போற்றப்பட்டார். அவர் இறந்ததைக் கேட்ட தூத்துக்குடி மக்கள் இந்த சாப்பலுக்கு அடுத்த இடத்தை ஆஷ் மெம்மோரியல் ஆக்கினர். சுதந்தர போராட்ட காலத்திலோ அதற்கு பின்னரோ, இன்று வரை அந்நினைவுச் சின்னத்தை யாரும் சிதைக்கவில்லை.

இக்கிராமங்களில் ஃபரான்சிஸ் சேவியருக்குப்பின் அனைத்து பரதவகுடும்பங்களும் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப்பட்டன. பின்னர், இவர்களுக்கும் இசுலாமியர்க்கும் புகைச்சல் போராக மாற, கொச்சியிலிருந்த போர்த்துக்கீசியர் தங்கள் ஆதரவை கொடுத்து காப்பாற்றினர். பல போர்த்துக்கீசியர்கள் பரதவர் பெண்களை மணந்தனர். போர்த்துக்கீசியர் தங்கள் குடும்பப்பெயர்களை இவர்க்ளுக்களித்துச் சென்றுவிட இன்று வரை இவ்ர்கள் போர்த்துக்கீசிய துணைப்பெயர்களோடு வாழ்கிறார்கள். சில : Ferndando; Pereira, Missier, Ronaldo, Machodo, Cardoza, D'vottaa, Roche.

இறுதிப்பெயரில் உள்ள ரோச் விக்டோரியா எனப்வர் காமராஜர் மந்திரிசபையில் பங்கு பெற்றார். இவர் பெயரால் தூத்துக்குடி கடற்கரையில் ஒரு பெரிய பூங்கா உண்டது. தூத்துக்குடிக்கு தாமிரபரணித்தண்ணீரை வல்லநாடு தேக்கத்தில்ருந்து கொண்டுவரலாமென்ற திட்டத்தைப் போட்டு அதைச் செயல்படுத்தியவர் க்ரூஸ் பர்ணாண்டோ. அவர் செய்த தொண்டின் காரணமாக தூத்துக்குடி நகராட்சி மண்டபத்துக்குப் பெயர் கரூஸ் பர்நாந்து மண்டபம்.

சாகித்ய அகாடமி தன் கொற்கை நாவலுக்காகப் பெற்ற ஜோ டி க்ரூஸ் உவரியைச்சார்ந்தவர். தூத்துக்குடி கடலோரக்க்கிராமம். இதே ஊரைச்சார்ந்தவர் அரசியல்வாதி; பேச்சாளரான மறைந்த வலம்புரி ஜான். எம் ஜீ ஆர் மந்திரிசபையில் இருந்த ஜி ஆர் எட்மண்ட், தி மு க மந்திரிசபையிலிருந்த ஜெனிஃபர் சந்திர்ன், ஓவியர் ஜெயராஜ தூத்துக்குடி மற்றம் கடலோரக்கிராமத்து பரதவர்கள்.

நான் சிறுவயதில் பல பரதவர் குடும்பங்களில் போர்த்துக்கீசியர்களைப்போலிருக்கும் வெள்ளையர்களைப் பார்த்திருக்கிறேன். போர்த்துக்கீசிய முறை வீடுகள் இன்னும் இருக்கின்றன. போர்த்துக்கீசியர் ஆண்ட கோவாவில் பெரிய வீடுகள்; டாமன், டயூவில் சிறிய வீடுகள். இவை இங்குள்ள பரதவர் வீடுகளும் போர்த்துக்கீசிய முறையில் கட்டப்பட்டவை. இன்னும் பல வீடுகள் அப்படியே இருக்கின்றன.

தூத்துக்குடியில் மற்றம் கடலோரக்கிராமங்கள் மக்கள் பேச்சு வழக்கில் புளங்கும் போர்த்துக்கீசிய சொற்கள்:

ரோதை, அல்லது பைதா - சக்கரம்.
வசி - சாப்பிடும் பாத்திரம்; ப்ளேட்
ஏனம் - சமையலறைப் பாத்திரம். சாப்பிடும் பாத்திரம்
லோட்டா - மக். MUG
பஸ்தேல் - சமோசா; சமோசா போன்ற மற்ற உணவு வகைகள்
சப்பாத்து - சூ Shoe
லாந்தன் அல்லது லாந்தர் விளக்கு - ஹரிக்கேன் விளக்கு. என் அம்மா அந்த லாந்தரை எடுத்துவா என்றுதான் சொல்வது வழக்கம்.
வீதர் - பார்த்து நட; தரையில் வீதர் கிடக்கும். வீதர் என்றால் உடைந்த கண்ணாடிதுகள்கள்.
கொஸ்தப் - போலீஸ்.
சுங்கான் - பைப் சிகார். குறிப்பாக பெண்கள் புகைப்பது.
வாக்கி, போக்கி எனபன வாடி, போடி
அங்கன நிக்கி - எனபது அங்கே நிற்கிறது
அங்கிட்டு இங்கிட்டு என்பன அங்கே இங்கே



''மெய்யாய் இருந்தது நாட்செல நாட்செல வெட்ட வெறும்.
பொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே1". - பட்டனத்தடிகள்.