Saturday, April 13, 2019

ஆற்காடு டெல்லி கேட்

17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் ஆற்காடுக்கான பயணமும் இடம் பெற்றிருந்தது.

ஆற்காடு நகர் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  பாலாற்றின் தென்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெறும் நகரங்களுள் ஒன்று ஆற்காடு. இன்று ஆற்காடு என்றால் மக்கன் பேடாவும் ஆற்காடு பிரியாணியும் நம்மில் பலருக்கு நினைவுக்கு வரலாம். 

கி.பி. 17ம் நூற்றாண்டில் மொகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீப் தனது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் நவாப் மன்னர்களை நியமித்திருந்தார். அந்த வகையில் ஆற்காடு பகுதியில் முதலில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் நவாப் சுல்பிக்கார் அலி. இவருக்குப் பின் தொடர்ச்சியாக நவாப் தோஸ்த் அலி கான் மதுரை வரை தனது ஆட்சியை விரிவு படுத்தினார். அதன் பின்னர் 1749ம் ஆண்டு முகமது அலி கான் வாலாஜா ஆட்சிக்கு வந்தார். இவர் ஆட்சிகாலமான 1765ல் மொகலாய அரசுக்குக் கப்பம் கட்டுவதை நிறுத்தி நவாப் மன்னர்களின் ஆட்சியை சுதந்திர ஆட்சியாகப் பிரகடனப் படுத்திக் கொண்டார். இவர் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் பிரெஞ்சுப் படைகளுக்குமிடையே நிகழ்ந்த போர் முக்கியமானது. கிழக்கிந்த கம்பெனியாரிடம் படிப்படியாக ஆற்காடு ஆட்சி சென்றடைந்தது. இன்று நவாப் மன்னர் பரம்பரையினர் சென்னையில் ஆற்காடு இலவரசர் என்ற பட்டம் தாங்கி வாழ்கின்றனர். 

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் வெற்றியை வெளிப்படுத்தும் வகையில் வடக்கே மொகலாயா சாம்ராஜ்யம் அமைந்துள்ள டெல்லியை நோக்கியவாறு ஆற்காடு டெல்லி கேட் அமைக்கப்பட்டது. 

டெல்லி கேட் பகுதியில் 1783ம் ஆண்டு திப்பு சுல்தானால் தாக்கி அழிக்கப்பட்ட முதன்மை பாதுகாப்பு அரண்களின் அடித்தளப்பகுதிகள் அப்படியே காணக்கிடைக்கின்றன.   
இந்தப் பதிவில் ஆற்காடு நவாப்களின் வரலாறு பற்றிய விளக்கங்களை தொல்லியல் அறிஞர் திரு.ஸ்ரீதரன் வழங்குவதை இப்பதிவில் காணலாம்.

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)




அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments: