Saturday, January 26, 2019

நோர்வே தமிழரின் ஆவணச் சேகரிப்புகள்



வரலாற்றுச் சான்றுகளைச் சேகரித்து வைக்கும் ஆவணப்பாதுகப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பற்றி அறிந்திருப்போம். அரசுகளும் தனியார் நிறுவனங்களும் செய்யும் இவ்வகை முயற்சிகளைப் போல வரலாற்றுத் தரவுகளில் ஆர்வம் கொண்ட சில தனிநபர்களும் ஆவணங்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் இலங்கை, இலங்கைத் தமிழர்கள் தொடர்பான ஆவணங்களைத் தன் சொந்த பணத்தைச் செலவிட்டு இணையத்தின் வழி ஏலத்தில் எடுத்து சேகரித்து வைத்துப் பாதுகாக்கின்றார் திரு.முருகையா வேலழகன். இவர் 1980களின் வாக்கில் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழகத்தில் சில ஆண்டுகள் இருந்து பின்னர் நோர்வே நாட்டிற்கு வந்து குடியேறியவர். இன்று தமது குடும்பத்தினருடன் ஓஸ்லோ நகரில் வசித்து வருகின்றார். நோர்வேஜியன் மொழியைக் கற்றுக் கொண்டு தமிழ்ச்சங்கத்திலும் பொறுப்புமிக்க பணியை மேற்கொண்டுள்ளவர்களில் ஒருவர் இவர்.

இவரது சேகரிப்பில் உள்ள

-நூறு வருடங்களுக்கு மேற்பட்ட யாழ்ப்பாணம், மலையகத் தமிழ் மக்கள் தொடர்பான அஞ்சல் அட்டைகள்
-இலங்கை நில வரைபடங்கள்
-பாரம்பரிய ஈய, பித்தளை, வெண்கல பாத்திரங்கள்
-வித்தியாசமான எழுத்தாணி
-புகைப்படங்கள்

ஆகியனவற்றை இந்த விழியப் பதிவில் காட்சி படுத்துகின்றார்.

இவர் சேகரிப்பில் உள்ள இந்த அரும்பொருட்களின் மின்னாக்க வடிவங்களைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காவும் வழங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவற்றோடு தான் நோர்வே நாட்டிற்கு வந்த போது நோர்வே தனக்கு அளித்த ஆதரவு, பாதுகாப்பு உதவிகள், தமது ஆரம்பகால வாழ்க்கை நிலை பற்றிய செய்திகளையும் இப்பதிவில் பகிர்கின்றார்.

இலங்கைத் தமிழ் மரபுரிமையின் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருக்கும் திரு.வேலழகன், யசோதா மற்றும் அவர்களது மகள் சுராதி ஆகியோரை வாழ்த்துகின்றோம்.

யூடியூபில் காண: https://youtu.be/ETLDVUPYd1s

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, January 24, 2019

நோர்வே வந்த முதல் தமிழர்


தமிழர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து புதிய நிலங்களில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் சூழலை கடந்த நூற்றாண்டில் பெருவாரியாகக் காண்கின்றோம். ஐரோப்பாவிற்கானத் தமிழர்களின் புலம்பெயர்வு நீண்ட கால பின்னனி கொண்டது. இந்திய, இலங்கை நாடுகளில் வணிக நோக்கத்துடனும், பின்னர் கடந்த ஐநூறு ஆண்டுகள் காலப்பின்னனியிலும் வணிகத்துடன், சமயம் பரப்புதல், பின்னர் அரசியல் ஆளுமையைச் செலுத்தியமை என்ற வகையிலும் ஐரோப்பியரின் செயல்பாடுகளைக் காண்கின்றோம். இக்காலகட்டங்களில் ஐரோப்பியர் ஆசியா வந்தது போல தமிழர்கள் ஐரோப்பிய நிலப்பகுதிகளுக்குச் சென்றமையைப் பற்றிய தரவுகள் குறைவாகவே கிடைத்தாலும் அவற்றை ஆராய வேண்டியதும்,  குறிப்பிட வேண்டியதும் அவசியமாகின்றது.

கடந்த நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கானத் தமிழர் புலம்பெயர்வு என்பது இலங்கையில் நடைபெற்ற போரின் காரணத்தாலும், உயர் கல்வி ஆய்வுகள் என்ற நோக்கத்தினாலும் ஏற்பட்டதைக் காண்கின்றோம். அப்படி தமிழர் பெருவாரியாகப் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நோர்வே குறிப்பிடத்தக்க ஒரு நாடு.

நோர்வே நாட்டிற்கு கடந்த நூற்றாண்டில்  இன்று நமக்குக் கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் முதலில் வந்த தமிழர் என அழைக்கப்படுபவர் ”குட்டி மாமா” என அன்புடன் அழைக்கப்படும் திரு.ஆண்டனி ராஜேந்திரன்.  இலங்கையிலிருந்து தனது நண்பர் ஒருவருடன் புறப்பட்டு இந்தியா வந்து, பின்னர் ஒரு மோட்டார்சைக்கிளில் தரைவழியாகப் பயணத்தைத் தொடர்ந்தார். லெபனான் மற்றும் ஏனைய நாடுகளை மோட்டார் சைக்கிள் பயணத்திலேயே கடந்து பின்னர் இங்கிலாந்து சென்றிருக்கின்றார். பின்னர் அங்கு சில மாதங்கள் பணி புரிந்தபின்னர் 1956ம் ஆண்டு நோர்வே நாட்டிற்குச் சென்றிருக்கின்றார். 

மீன்பிடித்தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்ற தொழிலுக்கு நோர்வே பிரசித்திபெற்ற நாடு என்பதை அறிந்து கொண்டார். ஒரு நோர்வே இன பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள். இலங்கைக்கு தனது மனைவி, குழந்தையுடன் வந்து தங்கியிருந்ததோடு இலங்கை-நோர்வே இரு நாடுகளுக்குமிடையிலான வணிக உறவுகளைத் தொடங்கியிருக்கின்றார்.

இலங்கை அரசின் அனுமதியுடன் ஒரு தொழிற்சாலையை இலங்கையில் உருவாக்கியிருக்கின்றார். இந்தத் தொழிற்சாலை  நெகிழி கப்பல்களை உருவாக்கும் முயற்சியுடன் தொடங்கப்பட்டது. முதலில் யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலுமாக இந்தத் தொழிற்சாலை இயங்கி வருகின்றது.  இன்று திரு.ஆண்டனி ராஜேந்திரன் மறைந்து விட்டார். ஆனாலும் நோர்வே தமிழர்கள் எனும் போது வரலாறு படைத்தவராக இவர் திகழ்கின்றார். இவர் பயணத்தில் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் இன்றும் இலங்கையில் அவரது மனைவியின் வீட்டில் இருப்பதாகவும், அவரது மனைவி சில மாதங்கள் இலங்கையிலும் சில மாதங்கள் நோர்வே நாட்டிலும் வாழ்கின்றார் என்று அறிகின்றோம்.

இச்செய்திகளை நமக்காக இப்பேட்டியில் வழி வழங்குகின்றார் அவரது உறவினர் திரு.ஜெயநாதன்.

திரு.ஜெயநாதன் நோர்வே நாட்டில் இன்று நாற்பது ஆண்டுகளாகச் சிறப்புடன் செயல்பட்டு வரும் நோர்வே தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இத்தமிழ்ச்சங்கத்தைப் பற்றிய சில தகவல்களும் இப்பேட்டியில் இணைகின்றது.


இப்பதிவினைச் செய்ய ஏற்பாட்டினைச் செய்த நோர்வே தோழர் திரு.முருகையா வேலழகன் அவர்களுக்கு நமது நன்றி.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, January 12, 2019

திருவள்ளுவர் மற்றும் வீரராகுல பௌத்த விகார்



திருவள்ளுவர் பற்றிய வரலாற்றுக் கதைகளாகச் சில புனைகதைகள் உலவுகின்றன. திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை ஆராய முற்படும் போது அதற்கு வரலாற்றுச் சான்றுகளை முன் வைத்து ஆய்வுகளை அலச வேண்டிய தேவை உள்ளது. இதனை இந்தப் பதிவில் விளக்குகின்றார் ஆய்வாளர் திரு.கௌதம சன்னா.

திருவள்ளுவர் எங்கு பிறந்தார் என்பதற்கான ஆதாரம், களப்பணியின் மூலம் தாம்சேகரித்த தகவல்களின் வழி திருவள்ளுவர் பிறந்த வாழ்ந்த இடத்தைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துபவர் அயோத்திதாசப் பண்டிதர்.  அதன் அடிப்படையில் திருவள்ளுவரின் காலம், அவரது வாழ்க்கை பின்புலம், அவரது மறைவு உள்ளிட்டவற்றை ஆதாரங்களுடன் அலசுகின்றது இப்பதிவு.

அயோத்திதாசரின் தாத்தாவிடம் இருந்த திருக்குறள் மூலச்சுவடி F.W.எல்லிஸிடம் சென்று பின்னர் அச்சுபதிப்பு கண்டது.  திருவள்ளுவரின் வரலாறு கூறும் திருவள்ளுவமாலை எனும் நூலில்   இடைச்சேர்க்கைகள் இணைக்கப்பட்டதால் பல புராணக்கதைகளாக அவரது வரலாறு திரிக்கப்பட்டது.

திருவள்ளூரில் உள்ள வீரராகவபெருமாள் கோயில், வீரராகுல விகார் எனும் பௌத்த ஆலயம் என்ற தகவல்கள்.. இப்படி பல செய்திகளோடு வருகின்றது இப்பதிவு.



யூடியூபில் காண:   



அன்புடன்

முனைவர்.சுபாஷிணி

[தமிழ் மரபு அறக்கட்டளை]