Tuesday, December 30, 2014

ஸ்ரீ மாணிக்கவாசகர் திருக்கோவில் - திருவாதவூர்



வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவுஒன்று   இன்று வெளியீடு காண்கின்றது. திருவாதவூர் திருமறைநாதர் ஆலயத்துக்கு அருகில்,  சுமார் 200 மீட்டர் தொலைவில்


அமைந்துள்ளது அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோவில். இது தனி ஆலயமாகவே  உள்ளது. இக்கோயில் இருக்கும் இடமே மாணிக்கவாசகர்  அவதரித்த பகுதி.

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் என போற்றப்படுபவர் இவர்
இவர் பாடியவை திருவாசகம், திருக்கோவை. ஆகியவை. சிவபுராணத்தை அறியாத சைவர் இல்லை எனலாம்.

எளிமையான அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தில்  நின்ற நிலையில் மாணிக்கவாசகர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.

யூடியூபில் இப்பதிவைக் காண:    https://www.youtube.com/watch?v=CSW6JDL-e8E&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 8  நிமிடங்கள் கொண்டது.


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, December 28, 2014

பெறமண்டூர் சமண மகாமுனிவர் பேட்டி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

இன்றைய வெளியீட்டில் இடம் பெறுவது பெறமண்டூர் சமண  மகாமுனிவர் விஷேஷாகர முனி மகராஜ் அவருடன் நடத்தப்பட்ட பேட்டி.


இவர் மத்திய பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்டவர். கர்நாடகா வழியாக மேல் சித்தாமூர் வந்து அங்கு கடுமையான தவ அனுஷ்டாங்களை மேற்கொண்டு தவக்கோலம் பூண்டவர். ​2006ம் ஆண்டிலிருந்து இவர் தமிழகத்தில் இருக்கின்றார்.

குழந்தைகளுக்கு ஜைன சமய சிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்றும் இல்லறத்தார் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களைக் கொண்ட தமிழ் நூல்களையும் இவர் எழுதியிருக்கின்றார்.​

பெறமண்டூர் மடம் சித்தாமூர் கிராமத்திற்கு தாய் கிராமம் என்ற பெருமையைக் கொண்டது.  மேல்சித்தாமூர் சைன மடத்தின் எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கும் மடமாகத் திகழ்வன இரண்டு மடங்கள். ஒன்று இந்தப் பெறமண்டூர் ஜைன மடம், அடுத்தது விழுக்கம் ஜைன மடம்.

இந்தப் பேட்டியில் மிகத் தெளிவான உச்சரிப்பு என்றில்லாத போதிலும் தம்மால் இயன்ற அளவிற்குப் பேசுகின்றார் இத்திகம்பர சுவாமிகள். மிகத் தெளிவாக மிக அழகான தமிழில் பிழையின்று சரளமாக எழுதக் கூடியவர் என மேல்சித்தாமூர் மடாதிபதி அவர்களே பாராட்டுரை தருகின்றார்.

இந்தப் பேட்டியில் ...

  • எது தர்மம்? 
  • உலக உயிர்கள் அனைத்தின் மேலும் அன்பு காட்ட வேண்டும்.
  • இல்லறம்-துறவரம் இரண்டிற்குமான வித்தியாசங்கள்
  • முனிவர்கள் கடைபிடிக்க வேண்டிய அனுஷ்டாங்கள் 
  • கடமைகள்
  • நீதிகள்


என விளக்கம் அளிக்கின்றார். பேட்டியின் முதலில் மேல்சித்தாமூர் மடாதிபதி அவர்கள் சிறிய அறிமுக உரை வழங்குகின்றார். அதன் பின்னர் இப்பேட்டி தொடர்கின்றது.



யூடியூபில் இப்பதிவைக் காண:  

இப்பதிவு ஏறக்குறைய 29  நிமிடங்கள் கொண்டது.

சில படங்கள்...





அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, December 24, 2014

கிறிஸ்மஸ் தின சிறப்பு வெளியீடு - மேல்சித்தாமூர் சமண மடம்

வணக்கம்.

கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.

இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரத்தில் ஒரு விழியப் பதிவு இணைகின்றது.

மேல்சித்தாமூர் எனும் சிற்றூர் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கின்றது. ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்னரான பழமையான சமண பீடம் அமைந்திருக்கும் பகுதி இது.  இந்த மாவட்டத்திற்கு மட்டுமன்றி  தமிழகத்தில் மிக முக்கியமான சமண மடமாகத் திகழ்வது மேல்சித்தாமூர் சமண மடம். இந்த மேல்சித்தாமூர் சமண மடம் ஜின காஞ்சிமடம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது. மடத்தோடு அமைந்திருக்கும் கோயிலில் பார்சுவநாதர் நேமிதார், ஆதிநாதர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில் பின்னர் சோழ மன்னர்களால் மிக விரிவாக்கப்பட்டது.

தற்சமயம் ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் இந்த மடத்தின் தலைமைப் பொறுப்பேற்று மடத்தின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து வருகின்றார்கள். மடத்தைச் சார்ந்து பள்ளிகளும் சில ஜிநாலயங்களும் இருக்கின்றன. கல்விச் சேவைக்கும் ஜிநாலாயங்கள் பாதுகாப்புக்கும் இந்த மடம் சிறந்த தொண்டாற்றி வருகின்றது.

2014 ஜூன் மாதம் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக இம்மடத்தின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் விரிவான ஒரு பேட்டியினை அளித்தார்கள்.  அப்பேட்டியின் விழியப் பதிவே இன்றைய சிறப்பு வெளியீடாக மலர்கின்றது.

மடத்தின் வரலாறு, தீர்த்தங்கரர்கள், காவி உடையின் பொருள், தமிழுக்கு சமணம் ஆற்றிய தொண்டு என மிக விரிவாக தெள்ளிய தமிழில் பேசுகின்றார் மடத்தின் தலைவர்.

சமணம் என்பது ஒரு சமயம் அல்ல.. அது வாழ்வியல் நெறி எனக் குறிப்பிட்டு மத நல்லிணக்கத்திற்கு இந்த ஜினகாஞ்சி மடம் உதாரணமாகத் திகழ்வதையும் இப்பேட்டியில் குறிப்பிடுகின்றார்.


யூடியூப் பதிவாக:https://www.youtube.com/watch?v=f7ZA_eW_DZ8&feature=youtu.be

இப்பேட்டி ஏறக்குறைய 1 மணி நேரப் பதிவு. இதனை நான் கடந்த ஜூன் மாதம் தமிழகம் சென்றிருந்த வேளையில் மேல்சித்தாமூருக்கு மேற்கொண்ட பயணத்தில் பதிவாக்கினேன்.

என்னுடம் உடன் வந்து பல்வேறு வகையில் உதவிகள் புரிந்த ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, டாக்டர்.பத்மாவதி ஆகியோருக்கும், இப்பதிவின்பை நான் செய்ய ஒத்துழைப்பு நல்கிய மேல்சித்தாமூர் சமண மடத்தின் நிர்வாகத்திற்கும் மடாதிபதி ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி மடத்தின் வலைப்பக்கம் http://jinakanchi.com/

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

Saturday, December 20, 2014

அயலகத் தமிழ் - சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு *டாக்டர்.நா.கண்ணன்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

ஜூன் மாதம் எனது தமிழகத்திற்கான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணியின் போது ஒரு நாள் மாலை நிகழ்வாக சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அயலகத் தமிழ் என்ற தலைப்பில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் சாகித்ய அகாதெமியின் சென்னைக் குழுவினர் அந்த நிகழ்வில் இடம்பெற்ற சொற்பொழிவுகளை வரும் நாட்களில் தொடர்ந்து பகிர்ந்து வந்தேன். மொத்தம் நான்கு விழியப் பதிவுகள் உள்ளன. அதில்   இன்று வெளியிடப்படுவது டாக்டர்.கண்ணன் வழங்கும் உரை.


யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=2To9W-w0qtk&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 18 நிமிடங்கள் கொண்டது.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, December 5, 2014

புவியியல் அருங்காட்சியகம் - பெசண்ட் நகர்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

அருங்காட்சிகங்கள் பல வகை. புவியல் ஆய்வுகள், அதன் சான்றுகள் ஆகியனவற்றை உள்ளடக்கிய அருங்காட்சியகங்கள் உலகின் பல நாடுகளில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்குப் புவியல் தொடர்பான ஆய்வுத் தகவல்களை வழங்கும் சேவையைச் செய்கின்றன.

தமிழகத்தில் பெசண்ட் நகரில் அமைந்திருப்பது Geological Survey of India. இதன் டைரக்டராகப் பணிபுரிந்து வரும் திரு.எஸ்.சிங்காநெஞ்சன் அவர்கள் நம் மின்தமிழ் குழுமத்திலும் இருப்பது நமக்கு பெருமை.

இவரது கடின உழைப்பின் பலனாக இந்தஅருங்காட்சியகம் மிகச் சிறப்பாக வடிவம் கொண்டிருப்பதை நேரில் இங்கு சென்று காண்பவர்கள் உணரலாம்.

இவ்வாண்டு ஜூன் மாதம் நான் தமிழகத்தில் இருந்த சமயம் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களோடு இணைந்து இந்த அருங்காட்சியகம் சென்றிருந்தோம். அங்கு திரு. சிங்காநெஞ்சன் அவர்கள் இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் சேகரங்களைப் பற்றிய முழு தகவல்களை வழங்கினார்கள். நண்பர் ஒரிசா பாலுவும் எங்களோடு இணைந்திருந்ததால் மேலும் கடலாய்வு தொடர்பான தகவல்களும் இந்தப் பதிவில் இணைந்தன.

நான் முதற்பகுதி வீடியோவை பதிவாக்கம் செய்ய, ஏனைய பகுதிகளை எனக்காக உதயன் பதிவு செய்தார்.

புகைப்படங்களைத் தொடர்ந்து இதே இழையில் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்த விழியப் பதிவில் திரு. சிங்காநெஞ்சன் அவர்கள் தரும் விளக்கம் மிகச் சிறப்பாக உள்ளது. அனைவரும் கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்.

இந்த அருங்காட்சியகம்செல்ல விரும்புவோருக்குக் கீழ்க்காணும் முகவரி உதவும்.

S.SINGANENJAM,
DIRECTOR,
GEOLOGICAL SURVEY OF INDIA,
A-2-B, RAJAJI BHAVAN, BESNAT NAGAR,
CHENNAI-600 090


யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=-ijymfDxPBk&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 18 நிமிடங்கள் கொண்டது.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]