Saturday, May 20, 2017

திருமலை நாயக்கர் மகால் கட்டிடக் கலையும் அருங்காட்சியகச் சேகரிப்புக்களும்

வணக்கம்.



திருமலை நாயக்கர் மகால் அல்லது அரண்மனை 1971ம் ஆண்டு தமிழ் நாடு அரசுக்குக் கீழ் வந்தது. அரண்மனை தானே, என நினைப்பவர்கள் பலருக்கு இங்கே உள்ளே உள்ள அருங்காட்சியகத்தைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம்.  இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்ற அரும்பொருட்கள் வெவ்வேறு வகையானவை.  திண்டுக்கல், தேனி, மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட முதுமக்கள் தாழிகள் சில இங்குள்ளன. முதுமக்கள் தாழிகளில் இத்தனை வேறுபாடுகளா என யோசிக்க வைக்கும் தன்மையுடன் இவை திகழ்கின்றன. உதாரணமாக மதுரைக்கு அருகில் தங்கச்சியம்மாபட்டியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு முதுமக்கள் தாழியை இப்படிக் குறிப்பிடலாம்.

இந்த விழியப் பதிவில்

  • எப்படி முதுமக்கள் தாழியில் இறந்தவர் உடலை வைத்து புதைப்பர் என்ற விளக்கம்
  • சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் பற்றிய விளக்கங்கள்
  • தேனி மாவட்டத்தின் வடுகப்பட்டி பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட  வட்டெழுத்துக்கல்வெட்டுடன் அமைந்த தீர்த்தங்கரர் சிற்பம்
  •  சிற்பங்கள் எதிர் மதத்தோரால் சிதைக்கப்படும் போது முகமும் அதில் குறிப்பாக ஏன மூக்குப் பகுதி சிதைக்கப்படுகின்றது என்ற செய்தி
  • நவகண்ட சிற்பம் - நவகண்ட பலி என்பதன் விளக்கம்
  • ஜேஸ்டா தேவி சிற்பம் பற்றிய செய்திகள்
  • அத்திரம்பாக்கம் பெருங்கற்கால கருவிகள்
  • பழங்கருவிகள் பற்றிய விளக்கம்
  • கங்காளர் சிலை விளக்கம்
  • திருமலை நாயக்கர் மகால், மண்டபங்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகள்

என விரிவாகச் செல்கிறது இந்தப் பதிவு.


திருமலை நாயக்கர் மகால்  மதுரையை ஆண்ட   திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. அந்த நாளிலேயே   இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டது இந்த அரண்மனை. இந்து, முஸ்லிம் கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த இந்தோ சரசானிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்டுள்ளது இந்த அரண்மனை,

இந்த அரண்மனையில் தற்சமயம் மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம் இங்கே நாடகசாலை பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத் தொல்லியல் துறையின் மதுரை பகுதி அலுவலகம் இதே கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.



இப்பதிவைச் செய்வதில் எனக்கு உதவிய முனைவர்.பசும்பொன், முனைவர்.ரேணுகா ஆகியோருக்கும், பதிவில் விளக்கமளித்து உதவிய தமிழகத்  தொல்லியல் துறை அலுவலகத்தின் காப்பாட்சியர் திரு.சக்திவேல் அவர்களுக்கும். என்னுடன் வந்து இணைந்து கொண்ட முனைவர் பத்மாவதி, முனைவர் மலர்விழி மங்கை ஆகியோருக்கும் எனது நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Saturday, May 6, 2017

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

வணக்கம்.

நீண்ட காலப் பழமையும் வரலாறும் கொண்ட ஒரு கோயில் மதுரையில் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில். சங்ககால தொண்மைச் சிறப்புக்கள் அமைந்த ஒரு கோயில் இது.


சங்ககாலத்தில் பழையன் என்று சுட்டப்படும்  குறுநில மன்னன் ஒருவன் திருமோகூரை ஆண்டு வந்துள்ள செய்தியை மதுரைக்காஞ்சி வரிகள் இப்படிப் பாடுகின்றன.

பழையன் கோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக்கோசர் தோன்றியன்ன

இந்த வரிகளில் குறிப்பிடப்படும் நான்மொழிக்கோசர், குறுந்தொகையில் குறிப்பிடப்படும் நாலூர்க்கோசரே எனக்கருதப்படுகின்றது.  வம்ப மோரியர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த போது பழையன் கோசரின் துணையால், வம்ப மோரியரை வென்றதாக அகநானூறு(261) குறிப்பிடுகின்றது. இச்செய்திகளின் அடிப்படையில் காணும் போது பழையரால் ஆட்சி செய்யப்பட்ட கோகூர், மௌரியர் காலத்துக்கு முந்திய பழமை வாய்ந்த ஓர் ஊர் எனத் தெரிகின்றது.

சங்ககாலம் தொடங்கி மாயோன் வழிவாட்டில் புகழ்பெற்றிருந்த இக்கோயில் ஏறக்குறைய எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் கற்கோயிலாக எழுப்பப்பட்டு வழிபாட்டில் இருந்து வந்துள்ளது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம்  செய்யப்பட்டுள்ளார் இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் காளமேகப்பெருமாள் சாமி. மணவாளமாமுனிகளும் காளமேகப்பெருமாளைப் பணிந்து பாடியுள்ளார்.

இக்கோயிலின் முன் வாசலில் மருது மண்டபம் என அழைக்கப்படும் கம்பத்தடி மண்டபத்தைக் காணலாம். இங்கு சின்னமருது, பெரியமருது சிற்பங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியை மருது சகோதரகள் கட்டி விரிவு செய்துள்ளனர்.

இதற்கு அடுத்து வரும் மகாமண்டபம் விஜயநகர கலைப்பாணி கட்டுமானம் கொண்டது.

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தாயாருக்கு மோகனவல்லி, திருமோகூர் வல்லி நாச்சியார், மேகவல்லி நாச்சியார் என்ற பெயர்கள் வழக்கில் உள்ளன.

இக்கோயிலிலுள்ள சுதர்சனர் சிற்பம் 4 அடி உயரத்தில் அமைந்தது. இங்குள்ள பாண்டியன் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டில், காங்கேயன் என்பவரால் இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள திருவாழி ஆழ்வாருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் திருவாழி ஆழ்வாராகச் சக்கரத்தாழ்வாரை அதாவது சுதர்சனரை குறிப்பிடலாம்.

காளமேகப் புலவரும் காளமேகப் பெருமாள் மீது ஒரு தனிப்பாடல் பாடியிருப்பதாக அறியமுடிகின்றது.

இக்கோயிலின் திருச்சுற்றுச்சுவர் கி.பி.1699-1700 வாக்கில் மதுரை மங்கம்மாள் அரசியின் தளவாயாக விளங்கிய நரசப்பையரின் அனுமதியின் பேரில் வெங்கப்பையர் என்பவரால் கட்டப்பட்டுள்ளமையை இக்கோயிலின் கல்வெட்டிலிருந்து அறிய முடிகின்றது.

ஏராளமான நீண்ட வாசகங்களில் தமிழ் எழுத்து கல்வெட்டுக்கள் இக்கோயிலில் நிறைந்திருக்கின்றன. ஒரு வரலாற்றுச் சின்னமாக  இந்தத் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் திகழ்கின்றது.


துணை நூல்:
மாமதுரை,பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம், -  பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வெளியீடு.


விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=uzVPMmnPN_o&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​