Saturday, October 21, 2017

கொங்கர்புளியங்குளம் தமிழி கல்வெட்டுக்களும் சமணர் சின்னங்களும் மாயன் வாழிபாடும்

வணக்கம்.


மதுரையின் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் கொங்கர்புளியங்குளம். தேனிக்குச் செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை அடுத்து அமைந்துள்ளது இந்தச் சிற்றூர். மதுரையிலிருந்து ஏறக்குறைய 15 கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வூர்.

நாகமலைத் தொடரின் பாறைப்பகுதிகளை இங்கு காணலாம்.  பாறை உடைப்புப் பணிகள் இங்கு நடக்கத்தொடங்கியமையால் முன்பகுதியில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. பின்னர் பொதுமக்களின் கோரிக்கையினால் அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இங்கு குவாரிப் பணிகள் நிறுத்தட்டன.

பசுமை மாறாத வகையில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. இங்கு வாழும் மக்கள் சிறிய வகையில் பயிர் விவசாயம் செய்து வாழும் விவசாயிகள். நாகமலை பாறை பகுதிக்குச் செல்வதற்குக் கீழே நாட்டுப்புர வழிபாடு நடைபெறும் மாயன் கோயில் ஒன்று இங்குள்ளது. உருவங்கள் அற்ற வகையில் செங்குத்தான ஒரு  கல்லினை மட்டுமே வைத்து வழிபடும் மரபு இங்குள்ளது. மிகப் பழமையான வழிபாட்டுக் கூறுகள் மாற்றமடையாத நிலையில் இன்றும் தொடர்வதாக இந்த வழிபடு தலம் அமைந்திருக்கின்றது.

இக்கோயிலை அடுத்தாற்போல் மேல்பகுதியில் உள்ள நாகமலைத்தொடர் பாறைகளின் மேற்பகுதியில் 60க்கும் மேற்பட்ட சமண கற்படுக்கைகள் உள்ளன. அங்கு செல்வதற்குக் கீழ்ப்பகுதியிலிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள படிகளில் ஏறிச்செல்லவேண்டும்.

இங்கு அப்பாறையினைச் செதுக்கி வரிசை வரிசையாக படுக்கைகளை அமைத்திருக்கின்றனர்.  இது இயற்கையான குகைத்தளமாகும்.  இக்குகையின் முகப்புப் பகுதியில் காடி என அழைக்கப்படும்  நீர்வடி விளிம்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேர் சுவற்றுப் பகுதியில் பெரிய அளவில் செதுக்கப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் கொண்ட வாசகங்கள் உள்ளன.

முதல் கல்வெட்டின் பாடம்

குறகொடு பிதவன் உபச அன் உபறுவ(ன்)

இதன் பொருள், உபசன் ஆகிய உபறுவன் என்பவரால் இக்குகை கொடுக்கப்பட்டது. உபசன் என்பது சமய ஆசாரியன் என்னும் பொருள்படும். உபறுவன் என்பது ஆட்பெயர். குற என்னும் சொல் கூறை என்னும் பொருளில்  இக்குகையைக் குறிப்பது. கொடுபிதவன் என்பதைக் க் கொடுப்பித்தவன் என்று கொள்ளல் வேண்டும்.

2ம் கல்வெட்டு முதல் கல்வெட்டிலிருந்து இரண்டடி தூரத்தில் அதே பாறைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. அதன் பாடம்

குறு கொடல்கு ஈத்தவன் செற் அதன் ஒன்

குறு என்பது கூரை என்றும், கொடல் என்பது கொடுத்தல் என்றும், குஈத்தவன் என்பதை குயித்தவன் எனக் கொண்டு குகையைச் செதுக்கியவன் எனப் பொருள் கொள்ளல் வேண்டும். இறுதியில் உள்ள இரண்டு குறியீடுகள்  பொன் என்பதைக் குறிப்பன.

மூன்றாவது கல்வெட்டுப் பாடம்

பாகன் ஊர் பேராதன் பிடன் இத்தவேபொன்

பாகனூரைச் சேர்ந்த பேராதன் பி(ட்)டன் கொடுத்த பொன் என்பது இதன் பொருள். வே பொன் என்பதை வெண்பொன் எனக் கொள்ளலாம். பாகனூர் என்பது இம்மலையின் பின்புறம் உள்ள நிலப்பகுதியாகும். பிடன் என்பது பிட்டன் என்னும் ஆள் பெயராகக் கொள்ளல் வேண்டும்.பாகனூரே இன்றைய சோழவந்தான் எனவும் கொள்ளலாம்.

இக்கல்வெட்டுக்கள் மூன்றும் கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

இக்கல்வெட்டின் மேற்குப் பகுதியில் பாறையின் மேல் சிறிய தீர்த்தங்கரர் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செயல் எனும் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. இது கி.பி. 9-10ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

கொங்கர்புளியங்குளம் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலகட்டத்தில் சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்து கல்விச்சாலைகளை அமைத்து சமண நெறி தழைக்கச்செய்த ஒரு முக்கிய இடமாகும். பக்திகாலத்தில் சமண சமய வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அச்சணந்தி முனிவர் ஏற்படுத்திய சீரிய நடவடிக்கைகளினால் இப்பகுதியில் மீண்டும் சமணம் தழைத்தோங்கியது. அதன் சான்றாக இருப்பது தான் நாம் இன்று காணும் தீர்த்தங்கரர் சிற்பமும் அதன் கீழ் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுகளுமாகும்.

குறிப்பு- மாமதுரை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்


இப்பதிவினைச் செய்ய உதவிய   முனைவர்.பசும்பொன் (மதுரைத் தமிழ்ச்சங்கம்), தொல்லியல் அறிஞர் முனைவர்.சாந்தலிங்கம்  ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, October 7, 2017

நெசவுத்தொழிலும் கைத்தறியும்

வணக்கம்.



நெசவுத்தொழில் தமிழர் பண்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் கலை. இன்றோ பல்வேறு காரணங்களினால் நெசவுத்தொழில் புகழ் மங்கி வருகின்றது. இளம் தலைமுறையினர் வெவ்வேறு துறைகளில் தங்கள் ஆர்வத்தைத் செலுத்தத் தொடங்கி விட்டமையால் கைத்தறி போடுதல் என்னும் கலை இன்று படிப்படியாகக் குறைந்து மறைந்து போவது நிகழ்கின்றது.

சாயர்புரத்தில் உள்ள ஓரிரு நெசவுத் தொழிற்சாலைகள் மட்டும் சில தறி இயந்திரங்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. ஆண்களும் பெண்களுமாக பாகுபாடினிறி இத்தொழிலைச் செய்கின்றனர். கையால் போடும் தறி மட்டுமன்றி இன்று இயந்திரத்துடன் இயங்கும் நெசவு இயந்திரங்களும் வந்து விட்டன. இவை ஒரு கைத்தறி சேலையோ கலியோ துண்டோ தயாரிக்கப்படும் நேரத்தை விரைவாக்குகின்றன.

சாயர்புரத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் முன்னர் ஒரு நெசவுத்தறி இருந்திருக்கின்றது. ஆனால் இன்றோ ஒரு சில வீடுகளில் அவை செயல்படுத்தப்படாத சூழல் இருப்பதால் குழியை மூடி நெசவு இயந்திரத்தை எடுத்து விட்டனர். ஒரு சில இல்லங்களில் வாசல் பகுதிகளில் இன்றும் நெசவுத் தறிகள் உள்ளன.

கைத்தறி ஆடைகள் நவநாகரிக உலகிற்குப் பொருந்தாது என நினைப்பதும் தவறு. உடலுக்கு ஏற்ற ஆடையாக கத்தறி ஆடைகள் திகழ்கின்றன. பார்ப்பதற்குக் கவர்ச்சியான வர்ணங்களில் கைத்தறி சேலைகளும் ஏனைய துணி வகைகளும் இன்று நமக்குக் கிடைக்கின்றன.

கைத்தறி ஆடைகளை வாங்கி அணிவோம்.

நெசவுத் தொழில் கிராமங்களில் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இதனைத் தக்க வைப்பதற்கும் இக்கலை மீண்டு புத்துணர்ச்சி பெற்று வளர்வதற்கும் வழி வகைகளைச் செய்வோம்.



இப்பதிவினைச் செய்ய உதவிய சாயர்புரம் திரு.மைக்கல், ஐயா வாரியார், அவர் துணைவியார் மற்றும் சாயர்புரத்தைச் சேர்ந்த அன்பர்கள் அனைவருக்கும்   தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, September 30, 2017

மருங்கூர் - சங்ககால நகரம்

வணக்கம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊர் மருங்கூர். இங்கு 1 ஏக்கர் நிலப்பகுதியில் மக்கள் வாழ்விடமும் அதற்கு மறுபக்கத்தில்  இறந்தோரைப் புதைத்து ஈமக்கிரியைகள் செய்த  பகுதியும் உள்ளன.


2007ல் முதலில் இப்பகுதியில் தொல்லியல் தடயங்கள் இருப்பது தமிழக தொல்லியல் துறையின் ஆய்வாலர்களால் அடையாளப்படுத்தப்பட்டது.

இங்கு கண்டறியப்பட்டுள்ள மக்கள் வாழ்விடத்தின் காலம் கி.மு3ம் நூற்றாண்டு என அறியப்படுகின்றது. தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் இங்கு கிடைக்கப்பெற்றன. சங்க காலத்து செங்கல் அமைப்புக்கள் இங்கு தென்படுகின்றன. முறையான அகழ்வாராய்ச்சி இன்னமும் இப்பகுதியில் செய்யப்படாத நிலையில் இது தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் பகுதியாகவே இருக்கின்றது.

மருங்கூர் பண்டைய காலத்தில் வளர்ச்சியடைந்த ஒரு நகரமாகத் திகழ்ந்துள்ளது. ஏறக்குறைய 2500 ஆண்டுகள் பழமையான செங்கற்களால் உருவாக்கப்பட்ட கட்டிட அமைப்புக்களின் எச்சங்களை இன்னமும் இங்கே காணமுடிகின்றது.

அழகன்குளம் ஆய்வு போல இப்பகுதியிலும் முறையான தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு இங்கு வாழ்ந்த மக்களின் நாகரிகம் தொடர்பான செய்திகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

இந்த விழியப் பதிவில் பேரா.சிவராம கிருஷ்ணன் இப்பகுதியின் முக்கியத்துவத்தை விளக்குகின்றார்.


இப்பதிவினைச் செய்ய உதவிய டாக்டர்.சிவராமகிருஷ்ணன், திரு.வடலூர்.சேகர். திரு.சரவணன், வடலூர் நாட்டாமை திரு.சேகர் ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, September 16, 2017

மறுதால்தலை பிராமி கல்வெட்டும் சமணர் கற்படுக்கைகளும்

வணக்கம்.


​திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைக்கு வடகிழக்கே 9 கி.மீ தொலைவில் சீவலப்பேரி என்ற ஊரில் மறுகால்தலை என்ற சிறு குன்று உள்ளது. தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு ஆகிய மூன்று நதிகள் இவ்வூரின் அருகில் இணைகின்றன. இவ்வூரில்  உள்ள சிறு குன்றுகளில் ஒன்றில் மேற்குப் பகுதியில் பஞ்சபாண்டவர் படுக்கை என்றழைக்கப்படும் இயற்கையாய் அமைந்த குகைத்தளம் ஒன்றுள்ளது.    இதில் சமண முனிவர்களுக்கென்று அமைக்கப்பட்ட கற்படுக்கைகள்  காணப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டை முதன் முதலாக 1906ம் ஆண்டில் அப்போதைய நெல்லை மாவட்டக் கலெக்டர் ஹெமைடு என்பவர் கண்டறிந்தார்.

குகைத்தளத்துப் பாறையின் நெற்றிப் பகுதியில் பெரிய எழுத்துக்களில் ஒருவரியில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சில எழுத்துக்கள் ஏறக்குறைய40 செ.மீ உயரம் உள்ளவை. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1ம் நூற்றாண்டாகும்.




"வெண்காஸிபன் கொடுபித கல்கஞ்சனம்"

வெண்காசிபன் என்பவன் இங்குள்ள குகைத்தளத்தில் ஒரு கட்டட அமைப்பு அமைத்துக் கொடுத்துள்ளான் என்பது இதன் பொருளாகும்.


சமஸ்கிருதத்தில் "கஞ்சணம்" என்பது ஒருவகை கோயில் அமைப்பைக் குறிக்கும். பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத் தகட்டையும் குறிக்கும். இக்கல்வெட்டில் படுக்கை அல்லது ஏதோ ஒரு கட்டடப் பகுதியைக் குறிக்கிறது எனக் கொள்ளலாம். காசிபன் என்ற சொல்லில் உள்ள "சி" என்ற எழுத்து அசோகன் பிராமி எழுத்தாகும்.

இத்தொடரில் உள்ள எழுத்துக்கள் ஒரே சீராக இல்லாமல் பெரிதாகவும் ஒழுங்கற்ற முறையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. தரைப்பகுதிக்கும்கல்வெட்டுப் பகுதிக்குமிடையில் சுமார் 40 அடி இடைவெளி அமைந்துள்ளது.

இந்த சிறு குன்றின் அருகிலேயே உள்ள மலைப்பகுதியில் பாகுபலியின் சிற்பம் ஒன்றும் உள்ளது. பாகுபலியின் சிற்பம் இன்று சாஸ்தாவாக மாற்றம் கண்டு சாஸ்தா தெய்வ வழிபாடு இன்று நடைபெறுகின்றது. இப்பகுதி மக்கள் குலதெய்வ வழிபாடு செய்யும் இடமாகவும் இப்பகுதி அமைந்திருக்கின்றது.

இந்தப் பதிவில் கொற்கையிலும் தற்சமயம் புதுக்கோட்டையிலும்தொல்லியல் ஆய்வாளராகப் பணியாற்றும் திரு.சந்திரவானன் அவர்கள் இக்கல்வெட்டு பற்றி விரிவாக நமக்கு விளக்கமளிக்கின்றார்.



இப்பதிவினைச் செய்ய உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் முனைவர்.கட்டலை கைலாசம்,  சகோதரர் விஜய் (தீக்கதிர்) ஆகியோருக்கு எனது நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, September 9, 2017

வரலாற்று ஆய்வறிஞர் திவான்

வணக்கம்.

அறிஞர்கள் நம்முடன் வாழும் போதே அவர்களது ஆய்வுகளைப் பற்றி அறிந்து கொள்வதும், அவர்களது ஆய்வுப் பணிக்காக அவர்களைப் போற்றிச் சிறப்பிப்பதும் அவசியம். நம்மோடு வாழ்பவர்களில் தம் வாழ்நாட்களையே ஆய்வுப் பணிக்காக அர்ப்பணித்து வாழும் சிலர் இருக்கின்றனர். மிகக் கடுமையான ஆய்வு நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் களப்பணிகளை மேற்கொண்டு தகவல்களைச் சேகரித்து அவற்றை நூல்களாக வெளியிட்டு  இத்தகையோர் தொடர்ந்து சமுதாயத்திற்கானப் பங்கினை மிகச் சீரிய வகையில் ஆற்றி வருகின்றனர். அத்தகையோரை அடையாளம் கண்டு போற்றும் பண்பு நம் சூழலில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.

போலிகளைப் புகழும் கலாச்சாரம் தான் பெரும்பாலான தளங்களில் விரிவாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அத்தகைய நிகழ்வுகளுக்கு மத்தியில் தரமான ஆய்வுகளைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டு வரும் நல்லறிஞர்களை இனம் கண்டு பாராட்டுவதைத் தமிழ் மரபு அறக்கட்டளை முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளது.

இலக்கியமும் வரலாறும் தனது இரு கண்கள், என்கின்றார் தமிழகத்தின் நெல்லையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வறிஞர் திவான் அவர்கள்.


  • தமிழ் நாட்டின் மிகச் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவர்...
  • சுமார் 100 அறிய நூல்களுக்கும் மேல் எழுதியவர் ​
  • இன்றும் தொடர்ந்து ஆவணச் சேகரிப்பில் ஈடுபட்டு களப்பணிகளின் வழி தகவல்களைச் சேகரித்து அவற்றை ஆய்வு செய்து வெளியிட்டு வருபவர்
  • 50,000க்கும் குறையாத  நூல்களுடன் தன் இல்லத்தில் வாழ்பவர்


அவரது பேட்டியைத் தாங்கிய விழியப் பதிவே இன்றைய தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது.

தனது முதல் நூலாகிய​ தென்காசி தந்த தவப்புலவர் என்ற நூல் தொடங்கி இவரது ஆய்வுகள் நூல்களாகப் பிரசவிக்கப்பட்டுக்கொண்டே உள்ளன.

குறிப்பிட்டு சொல்வதற்குச் சில உதாரணங்களாக

  • ஆஷ் கொலை வழக்கு
  • மாலிக் கபூர் பற்றிய தகவல்
  • ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள்
  • கொற்கை துறைமுகம்
  • இந்திய விடுதலைப் போரின் போது இஸ்லாமியர்களின் பங்கு
  • ​மருதநாயகம்​ ஆய்வுகள்



..​களப்பணி அனுபவங்கள்
..ஆய்வு மாணவர்களளுக்கானக் குறிப்புக்கள்
..ஆவணப் பாதுகாப்பு பற்றிய தேவைகள்
எனப் பல தகவல்களை இந்தப் பேட்டியில் பகிர்ந்து கொள்கின்றார்.

 ​அவர் வீட்டிலேயே இந்தப் பேட்டியின் பதிவு செய்யப்பட்டது



இப்பதிவினைச் செய்ய உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் முனைவர்.சௌந்தர மகாதேவன், திரு.நாறும்பூ நாதன், சகோதரர் விஜய் (தீக்கதிர்) ஆகியோருக்கு எனது நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, July 29, 2017

பெருமுக்கல் கல்வெட்டுக்களும் பெருங்கற்கால குறியீடுகளும்

வணக்கம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் மலைப்பாங்கான பகுதி ஒன்றுள்ளது. பெருமுக்கல் என்பது இப்பகுதியின் பெயர். குன்றின் மேல் நடந்து செல்ல படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வழியில் செல்லும் போதே ஆங்காங்கே பாறைகளில் சில கல்வெட்டுக்களைக் காணமுடிகின்றது. 


இங்கு அமைந்துள்ள சோழர்காலக் கோயில் முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கோயில் இன்று பெருமளவில் சிதலமடைந்த நிலையில் உள்ளது என்ற போதிலும் அதன் சுவற் கல்வெட்டுக்கள் வாசிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன. இக்கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகள் தமிழக மன்னர்களின் வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்வதில்  நமக்குத் துணை புரிகின்றன.  

இம்மலைக் கோயிலிலும் கீழுள்ள கோயிலிலும் உள்ள கல்வெட்டுக்களை வாசித்து அதனைத் தமிழக தொல்லியல் துறை ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. இந்த நூலில் 60 கல்வெட்டுக்கள் வாசிக்கப்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக்கள் சோழர், பாண்டியர், காடவராயர், சம்புவரையர், விஜய நகர மன்னர்கள் ஆகியோர் காலத்தில் செதுக்கப்பட்டவை. இவற்றில் மிகப் பழமையானதாக உள்ள கல்வெட்டு உத்தம சோழன் காலத்துக் கல்வெட்டாகும்.  அதோடு  முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டுக்களையும் குறிப்பிடலாம். விக்கிரமசோழ மன்னன் காலத்துக் கல்வெட்டுக்களே அதிகமாகக் கிடைக்கின்றன. 

இம்மன்னனின் காலத்தில் தான் இன்று இங்கு காணப்படும் மலைக்கோயிலான  திருவான்மிகை ஈசுரம் உடையார் கோயில் கற்றளியாகக் கட்டப் பெற்றது . இக்கோயிலைக் கட்டுவதற்கு பொருளுதவி செய்த  காக்குநாயகனின் உருவமும், அவனது கட்டளையை ஏற்றுக் கோயிலைக் கட்டிய பெரியான் திருவனான சிறுத்தொண்டனது உருவமும், கோயில் சைவாசாரியான் திருச்சிற்றம்பலமுடையான் அன்பர்க்கரசு பட்டனது உருவமும் சிற்பங்களாக காணப்படுகின்றன.

பெருமுக்கல் எனும் இவ்வூர் சோழர் காலத்தில் சயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மா நாடான விசையராசேந்திர வள நாட்டுப் பெருமுக்கிலான கங்கை கொண்டநல்லூர் என்று வழங்கப்பட்டது. பின்னர் பெருமுக்கல் கங்கை கொண்ட நல்லூர் என்று வழங்கப்பெற்றது. இது அனேகமாக மாமன்னன் ராஜேந்திர சோழன் காலத்தில் நிகழ்ந்திருக்கலாம்.

இந்தக் கல்வெட்டுக்கள் வழி பல அரிய தகவல்களை அறிய முடிகின்றது. அன்றைய சமுதாயத்தில் நில விற்பனை முறை, நிலத்தை அளக்கும் முறை,  நிலத்தை அளக்கும் அளவு கோல்கள் எத்தனை அடி நீளத்தில் இருந்தன, கோயில் வழிபாட்டு முறை,  வழிபாட்டில் சிறப்பிடம் பெற்றோர்,  வீதி உலாவுக்குச் சென்ற தெய்வங்கள்,  போன்ற செய்திகள் உள்ளன.  ஒருகல்வெட்டில் இராஜராஜ சம்புவராயனுக்குத் தொற்றிய வியாதி  குணமாவதற்காகப் பணிப்பெண் ஒருவர் உயிர்விட்டமைக்காக அவர் குடும்பதாருக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிய செய்தியும் சொல்லப்படுகின்றது. அரச குலப் பெண்ணுக்கும் வைசிய குல ஆணுக்கும் பிறந்தவர்களை உத்க்ருஷ்ட ஆயோகவர் என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. நாட்டில் அறம் குறையக்கூடாது என்பதற்காகக் கோயிலில் அறமிறங்கா நாட்டுச் சந்தி என்ற ஒரு வழிபாடு திருமலைமேல் ஆளுடைய நாயனாருக்கு ஏற்படுத்தியமை பற்றியும் ஒரு கல்வெட்டு சொல்கின்றது.


குன்றின் மேலேறி உச்சியை வந்தடைந்த பின்னர் அங்கிருந்து செங்குத்தாக கீழ்நோக்கிச்செல்ல இருக்கும் பாதையில் சென்றால் குகை ஒன்று இருப்பதைக் காணலாம். இந்தக் குகைப் பகுதியில் உள்ள கீறல்கள் பழங்கற்கால கீறல் குறியீடுகள். இவை கி.மு.4000ல் வழக்கிலிருந்த எகிப்திய ஹீரோக்ளிப்ஸ் எழுத்தின் சமகாலத்தவை என சிலரும், பெருங்கற்காலத்தைச் சார்ந்தவை என சில ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். 

இத்தகைய அறிய கல்வெட்டுக்கள் உள்ள பகுதியில் பாறை உடைப்பு நடந்துள்ளது. பாறைகளின் சில பகுதிகள் செதுக்கப்பட்டு அதன் சீரழிந்து காணப்படுகின்றது.  ஆயினும் சில தன்னார்வலர்களின் முயற்சியால் இந்தப் பாறை உடைப்பு தடை செய்யப்பட்டு தற்சமயம் இது பாதுகாக்கப்படும் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருமுக்கல் மலையில் இருக்கும்  சுனையில்  வறட்சிக் காலத்திலும் நீர் வற்றியதில்லை என்றும்,  கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவிய காலத்தில் கூட இப்பகுதி மக்களின் தண்ணீர்த்தேவையைத் தீர்த்து வைத்திருக்கிறது இந்தச் சுனை என்றும் இப்பதிவின் போது தோழர் ராஜேஷும் அவர் நண்பர்  பொறியியலாளர் வேங்கட சுப்பிரமணியன் ஆகியோரும் பெருமுக்கல் மலையைச் சுற்றிக் காட்டி விளக்கினர்.  

இந்தப் பெருமுக்கல் மலைக்காகவும் மலை மீது இருக்கும் கோயிலைக் காப்பாற்றவும்,  இந்த மலை மீது இருக்கும் சிவன் கோயில் சீதா குகையில் உள்ள ஏராளமான தமிழ்க்கல்வெட்டுக்களும் தமிழி,வட்டெழுத்துக்களும் சட்ட விரோதமாகக் கல் உடைப்போரால் அரசு அனுமதியின்றி  சேதப்படுத்தப்பட்ட போது அதனை எதிர்த்துப் போராடியவர்களில் தோழர் ராஜேஷும் ஒருவர்.   பண்டைய  வரலாற்றுச் செய்திகளைக் கல்லிலே தாங்கிய இந்த மலையைக் காப்பாற்ற இவரும் மற்றும் சில தோழர்களும் போராட்டத்தில் இறங்கி அதற்காகச் சிறையும் சென்றனர். அப் போராட்டத்தில்   வெற்றி பெற்று ,நிரந்தரத் தடையுத்தரவு பெற்று, இப்பகுதி தொல்பெருள் துறையின் கட்டுப்பாட்டில் வரச் செய்தததில் பெரும் பங்காற்றியுள்ளனர்.   

இன்று இந்த பெருமுக்கல் பகுதியில் ஆங்காங்கே உடைந்த சிற்பங்களும் கற்பாதங்களும் தென்படுகின்றன. குகைக்குள் உள்ள எழுத்துக்கள் அடையாளம் காணப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட்டு  வாசிக்கப்பட வேண்டும்.  தமிழகப் புராதனச் சின்னங்களில் குறிப்பிடத்தக்க மிகப் பழமையான வரலாற்றுச் சான்றுகள் உள்ள ஒரு பகுதி பெருமுக்கல். இப்பகுதியில் இதன் சுற்றுவட்டாரப் பகுதியும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவையே.



இப்பதிவினைச் செய்வதில் உதவிகளை வழங்கிய
​ தோழர்கள்​
 
​திரு.திருமதி ராஜேஷ், தோழர் 
வேங்கட
​ ​
சுப்பிரமணியன்
 
 ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, July 22, 2017

திருஆனைக்கா - சிவப்புச்சேலை தாய்தெய்வ வழிபாடு

வணக்கம்


​திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவிலாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்.  தேவார திருப்பதிகங்களைப் பாடிய அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரோடு அருணகிரிநாதர், தாயுமானவர்,   ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புடன் விளங்கும் கோயில் இது. இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது என்றும் சைவ சமயத்தைப் பின்பற்றுவோரால் வணங்கப்படுகின்றது.

இன்று முக்கிய சிவாலயங்களில் ஒன்றாக அறியப்படும் இக்கோயில் தாய்தெய்வ வழிபாட்டுக் கோயிலாக இருந்த கோயில்களில் ஒன்று என்பதற்கான சில சான்றுகள் இக்கோயிலில் கிடைக்கின்றன. இக்கோயிலில் அமைந்திருக்கும் அம்பிகைப்பற்றிய பழமையான செய்திகள் இன்று நமக்குக் கிடைப்பது அரிதாகிவிட்ட போதிலும் இக்கோயிலில் இன்றும் தொடரும் ஒரு சடங்கு சிவப்புச்சேலை மதிய பூசை. இப்பூசை இக்கோயில்  தாய்தெய்வக் கோயில் என்பதை வலியுறுத்தும் வண்ணம் அமைந்திருக்கின்றது.

இதனை வலியுறுத்தும் கருத்துக்களை தனது தெய்வம் என்பதோர்.. என்ற நூலில் முன் வைக்கின்றார் பேரா.முனைவர்.தொ.பரமசிவன் அவர்கள்.

தமிழ்நாட்டுத் தாய்த்தெய்வம் பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் இலக்கியங்களில் இருந்துதான் நமக்குக் கிடைக்கின்றன. வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல், தலையில் பெரும்பாலும் அக்கினி (தீச்சுவாலை) மகுடம் கொண்டிருத்தல், கழுத்தில் காறையும் பொட்டும் அணிந்திருத்தல், நிமிர்ந்த முகம் ஆகியவை தாய்த் தெய்வத்தின் தனி அடையாளங்களாகும். வழிபாட்டு முறைகளில் பொங்கலும் முளைப்பாரியும் சாமியாட்டமும் இரத்தப் பலியும் தாய்த்தெய்வத்தை அடையாளம் காட்டும் தனிக்கூறுகளாகும்.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு தாய்த்தெய்வம் திருஆனைக்கா அகிலாண்டேசுவரி ஆகும். இக்கோயில் மதிற் சுவர்களில், இக்கோயிலில் தன் தலையைத் தானே அரிந்து (நவகண்டம்) கொடுக்கும் வழக்கம் இருப்பதைக் காட்டும் சிற்பச் சான்றுகள் உள்ளன. (இவ்வகைச் சான்றுகள் தொல்லெச்சங்களாகத் தமிழ்நாட்டில் பல கோயில்களில் காணக்கிடைக்கின்றன) இக்கோயிலில் நண்பகல் ஒரு வேளையில் ஆண் பூசாரி சேலையைத் தன் உடம்பில் சுற்றிக் கொண்டு தான் பெண்ணாக மாறியதாகப் பாவனை செய்து கொண்டு  பூசை செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதன் பொருள் இக்கோயில், ஒரு காலத்தில் நரபலி பெறும் உக்கிரமான தாய்த்தெய்வக் கோயிலாகத் தோன்றியிருக்க வேண்டும் என்பதுதான். இக்கோயிலை வைதீகமயப்படுத்தி பிற்காலத்தில் தந்தை தெய்வக் கோயிலாக ஆக்கியுள்ளார்கள். வைதீகமயப்படுத்தும் முறைகளில் ஒன்று ஸ்ரீஸக்கர பிரதிஷ்டை செய்தல் (தெய்வத்தின் அடங்கா சினத்தைக் குறைக்கும் மந்திரங்களைச் செப்புத்தகட்டில் எழுதி தலைவாசலில் பதித்தல்) ஆகும்.  
- தொ.பரமசிவன்



இப்பதிவினைச் செய்வதில் உதவிய பேரா.சூசை, பேரா.முனைவர்.விஜயராணி  ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, July 15, 2017

திருவாலீஸ்வரம் : சிற்பக் கலையும் சோழப்பேரரசும்

வணக்கம்.


பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்து அருள்மொழிவர்மரின் வீரச் செயல்களை வியந்து சோழர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்கள் நம்மில் பலர். பொதுவாகவே ராஜராஜன் என்றால் உடனே நம் மனதில் நினைவுக்கு வருவது அவன் கட்டுவித்த ராஜராஜேச்சுவரம் தான். இதுவே தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும், பேச்சு வழக்கில் தஞ்சை பெருங்கோயில் என்றும் வழங்கப்படுகின்றது. இந்தக் கோயிலை மாமன்னன் ராஜராஜன் கட்டுவதற்கு முன்னர் அவன் கட்டிய கோயில் சோழ நாட்டில் இல்லை. மாறாகப் பாண்டிய நாட்டில் அம்பாசமுத்திரத்திற்கு அருகே பிரமதேசம் என்ற சிற்றூரில் கடனா நதியின் தென்கரையில் அமைந்திருக்கின்றது திருவாலீஸ்வரம். இக்கோயிலின் சிற்பங்கள் அற்புதமான வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. கருங்கல்லினால் எழுப்பப்பட்ட இக்கோயில் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு முன் மாதிரியாக அமைக்கப்பட்ட கோயில் என்பதுடன் இக்கோயிலின் சுற்றுச் சுவர்கள் அனைத்திலும் ஏராளமான கல்வெட்டுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் ராஜராஜன் காலத்து அரசியல் நிகழ்வுகளின் ஆவணங்களாக அமைந்து தன் ஆட்சியில் ராஜராஜன் செயல்படுத்திய நீர்மேலாண்மை, நில மேலாண்மை, வரிவசூலிப்பு, தானங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய தகவல் பெட்டகமாக அமைந்திருக்கின்றது.

ராஜராஜ சோழன் இளவரசராக நெடுங்காலம் பல போர்களில் பங்கெடுத்து அரசாட்சி பற்றிய பயிற்சி பெற்று அரியணையில் ஏறியவன். இரண்டாம் சுந்தர சோழனுக்கும் அவனது பட்டத்தரசியான வானவன் மாதேவிக்கும் பிறந்தவன். சோழர் வரலாற்றில் ராஜராஜன் அரியணையில் ஏறிய நாள் முதல் அடுத்த 100 ஆண்டுகள் என்பவை சோழ மன்னர் பரம்பரையினரின் பொற்காலம் என கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தமது சோழர்கள் எனும் நூலில் குறிப்பிடுகின்றார். ராஜராஜனின் முதலாம் மகன் ராஜேந்திரன் தன் ஆட்சிக் காலத்தில், சோழ ராஜ்ஜியத்தை இலங்கை மட்டுமன்றி சுவர்ணபூமியாகிய கடாரத்தையும் கைப்பற்றி சோழர்களின் ராஜ்ஜியத்தை விரிவாக்கினான்.

ராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பெயர் பெற்றவன் என்பது இவனுக்கு அமைந்த தனிச்சிறப்பு. இவனது போர் பற்றிய வெற்றிச் செய்திகளை தெளிவாகக் கூறும் செப்பேடு திருவாலங்காட்டுச் செப்பேடு.

பாண்டிய மன்னர்களும். பல்லவ மன்னர்களும் தாம் பிறருக்கு அளித்த தானங்களைப் பற்றிய ஆவணக்குறிப்புக்களைச் செப்பேடுகளில் பொறித்தனர். அதில் தமது முன்னோர் வரலாற்றினையும் எழுத வைத்தனர். அந்த வகையில் சோழப்பாரம்பரியத்தில், தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து அதனை விளக்கும் மெய்க்கீர்த்திகளைத் தமிழில் செய்திக்கு முன் தொடக்கத்தில் கல்வெட்டுக்களில் பொறிக்கும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியவன் ராஜராஜன். ராஜராஜனின் அதே முறையையே ஏனைய பிற சோழ மன்னர்களும் தமது கல்வெட்டுக்களில் பின்பற்றினர். இந்த மெய்க்கீர்த்திகள் வரலாற்றுச் செய்திகளையும் அக்காலத்தில் அம்மன்னனின் ஆட்சியில் நிகழ்ந்த போர் பற்றிய செய்தியையும் உட்படுத்திய வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இவையே இன்று இம்மன்னர்களின் காலத்தில் நிகழ்ந்த முக்கிய அரசியல் மற்றும் போர் தொடர்பான செய்திகளை ஆராய்ந்து அறிய உதவுவனவாக உள்ளன.

ராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த படைபெடுப்பு போர் நிகழ்வுகள் பற்றி சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. ஈழத்தைக் கைப்பற்றிய ராஜராஜன் சிவனுக்கு அங்கு ஒரு கற்றளியை அமைத்தான். பொலன்னறுவை நகரில் இன்றும் இக்கோயில் இருக்கின்றது. ராஜராஜனின் அரசியல் நிர்வாகத்திறன் இன்றும் வரலாற்றறிஞர்களால் சிறப்பித்துக் கூறப்படுகின்றது.

நிலவரியை ஏற்படுத்தி, அதற்காக நாடெங்கிலும் நிலங்களை அளந்து , நிலத்திற்கேற்ப வரி அமைத்து நிர்வாகத்தை நடத்தினான். நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை மேற்பார்வைக்காக அமைத்து கிராம சபைகளை அமைத்தான், தனது நிலப்படையையும், கடற்படையையும் வலுவாக்கினான்.

இந்தப்பதிவில்

  • கோயிலில் உள்ள வட்டெழுத்துக்கள், தமிழ் எழுத்துக்கள்.. 
  • ராஜராஜ பாண்டியமண்டலம் என ராஜராஜன் தான் வெற்றி கொண்ட பகுதிக்குப் பெயர் சூட்டி பாண்டி நாட்டு மக்கள் நன்கறிந்த வட்டெழுத்திலேயே தனது கோயிலின் கல்வெட்டுக்களை அமைந்த விபரங்கள், அதன் காரணம் 
  • அந்தணர்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுத்து அவர்கள் அந்த நிலத்தினை வரிகளுடனோ அல்லது வரிகளே இல்லாமல் அதனை அனுபவிக்கலாம் என்ற வகையில் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் 
  • ஒரே காலகட்டத்தில் இரண்டு எழுத்துருக்கள் மக்கள் புழக்கத்தில் இருந்தமைக்கான காரணம் 
  • வட்டெழுத்து கல்வெட்டுக்களைத் தமிழ் எழுத்தில் படியெடுத்து சிதிலமடைந்த கோயிலின் தகவலை புதுப்பித்து தமிழ் கல்வெட்டுக்களைச் செதுக்கிய செய்தி 
  • வட்டெழுத்தின் தொடர்ச்சியாக மலையாள லிபியின் பரிணாம வளர்ச்சி 
  • சிற்பங்கள் உருவாக்கப்படும் அறிவியல் 
  • சோழவந்தான் என்ற ஊரின் பெயர்க்காரணம் 

..
இப்படிப்பட்ட தகவல்கள் வழங்கப்படுகின்றன.

ஜப்பானில் நடைபெற்ற பனிச்சிற்ப கண்காட்சியில் உலக அளவில் 2ம் இடத்தைப் பிடித்த ஒரே இந்தியர். இலங்கையில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கிடையேயான கண்காட்சியில் தம் கலைத்திறனுக்காக முதல் இடத்தைப் பிடித்தார்..
எழுத்தாளர், கவிஞர், ஓவியர் சிற்பி, பேராசிரியர்..இந்தியா முழுதும் கோயில்கள், கலைக்கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த பெருமைக்குரியவராகிய ஓவியர் சந்துரு அவர்களும், தமிழக தொல்லியல் துறையின் கல்வெட்டியல் அறிஞர் டாக்டர். பத்மாவதி அவர்களும், பாண்டிய நாட்டில் ராஜராஜன் அமைத்த இக்கோயிலைப் பற்றிய பல செய்திகளை இப்பதிவில் வழங்குகின்றனர்.



விழியப் பதிவைக் காண:  ​
யூடியூபில் காண:  

இப்பதிவினைச் செய்வதில் உதவிகளை வழங்கிய முன்னாள் நெல்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர். கருணாகரன், சகோதரர் விஜய், நெல்லை மாவட்ட அரசு தாசில்தார், திரு.கௌதம சன்னா  ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, July 8, 2017

சுடுமண் வடிவங்கள்

வணக்கம்.

தமிழர் கலைகளில் ஒன்றான சுடுமண் சிற்பம் பற்றிய விழியப் பதிவு ஒன்று  இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது.


சுடுமண் கலைச்சிற்ப அமைப்பு இன்று வழக்கொழிந்த ஒன்றாகி அருகி விட்டது. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட வகையில் கைதேர்ந்த கலைஞர்கள் தான் இந்த வடிவங்களை உருவாக்கியிருக்க வேண்டும். இதே போன்ற சுடுமண் சிற்பங்கள் இன்று தமிழகத்தின் ஓரிரண்டு இடங்களில் மட்டும் தான் காணக்கிடைக்கலாம்.

இன்றைய பதிவில் இடம்பெறும் சுடுமண் சிலைகள் 2 குதிரைகளும் ஒரு யானையும் என்ற வகையில் ஒரு மேடை மேல் நின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பண்ருட்டிக்கு அருகே சேமக்கோட்டை என்ற சிற்றூரில் இந்த சிற்பங்கள் உள்ளன.  ஒரு ஐயனார் கோயிலைச் சார்ந்த நிலையில் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன.   ஐயனார் கோயில் சற்று புதுப்பிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது. இந்த சிலைகள் இருக்கும் இடத்தைச் சுற்றி புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.

இவை நம் கண் முன்னே சிறிது சிறிதாக அழிந்து வருகின்றன. கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சுடுமண் குதிரைகள் வடிவத்தை நாம் பாதுகாக்க வேண்டாமா?

இந்த அரிய கலைச்சிற்பத்தைப் பாதுகாக்க இப்பகுதியின் தொல்லியல் துறையும் மாநில அரசும் தக்க  நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக்கொள்கின்றது.



இப்பதிவினைச் செய்ய உதவிய டாக்டர்.சிவராமகிருஷ்ணன், திரு.வடலூர்.சேகர். திரு.சரவணன், வடலூர் நாட்டாமை திரு.சேகர் ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, June 25, 2017

கரந்தை சமணப்பள்ளி

வணக்கம்.

சுதைச் சிற்பக் கலையின் பிரமாண்டத்தைப்பார்க்க வேண்டுமா?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரந்தை ஜினாலயத்திற்குத் தான்  வரவேண்டும். சமண சமயத்தைப் பின்பற்றுவோர் இன்றும் வாழும் ஒரு ஊர் கரந்தை.


இங்குள்ள சமணக்கோயிலில் தனித் தனிக் கோயிலாக

  • குந்துநாதர் ஆலயம்
  • மகாவீரர் ஆலயம்
  • பிரம்ம தேவர் ஆலயம்
  • மேற்றிசைப் பெருமாள் சன்னிதி
  • ரிஷ்பநாதர் ஆலயம்
  • தருமதேவி ஆலயம்

ஆகிய சன்னிதிகளோடு தீர்த்தங்கரர்களின் பாதங்கள், அகளங்க தேவரின் நினைவாக ஒரு அமைப்பு ஆகியனவும் அமைக்கப்பட்டுள்ளன.

அகளங்கதேவர், அழிபடைதாங்கி ஹிமசீதள மன்னன் அரசவையில் பௌத்தர்களை வாதில்வென்று அவர்களை  இலங்கையிலுள்ள கண்டிக்குச் செல்ல வழிசெய்தனர் எனக் கூறப்படுகின்றது.

இக்கோவிலில் உள்ள குந்துநாதர் ஆலயம் தான் காலத்தால் முந்தியது.  பல்லவ மன்னன் 3ம் நந்திவர்வம் (கி.பி.846 - 869) காலத்தைச் சேர்ந்தது.  சோழமன்னன் வீர ராஜேந்திரன் காலத்தில் இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு வீர ராஜேந்திரப் பெரும்பள்ளி எனப் பெயர் பெற்றது.

இந்தச் சன்னிதி மட்டுமன்றி ஏனைய சன்னிதிகளில் கல்வெட்டுக்கள் நிறைந்திருக்கின்றன.  அவை இக்கோவிலின் படிப்படியான வளர்ச்சி, வழங்கப்பட்ட தானங்கள் ஆகியவற்றை விவரிப்பதாக உள்ளன.

இவ்வாலயத்தின் குந்து நாதர், மகாவீரர் சன்னிதிகளும் தருமதேவி சன்னிதியும் மிகப் பிரமாண்டமான வடிவில் அமைக்கப்பட்டவை. சுதைச்ச்சிற்பங்களின் அழகையும் கலை வடிவின் திறனையும் ஒருங்கே இக்கோவிலில்  காண முடிகின்றது.

விழியப் பதிவைக் காண:  ​
யூடியூபில் காண:    



அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, June 11, 2017

சேர்மன் மாணிக்கம் அரசு நடுநிலைப்பள்ளி - த.ம.அ நிகழ்வு

​வணக்கம்.

​கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கம் அரசு நடுநிலைப்பள்ளிக்குப் பரிசாக ஒரு கணினி வழங்கினேன். இந்த நிகழ்வில் என்னுடன் நம் த.ம.அ நண்பர்கள் திரு.சொ.வினைதீர்த்தான், முனைவர். சந்திரமோகன், முனைவர் காளைராசன் ஆகியோர் உடன்வந்து பள்ளி மாணவர்களுடன் கலந்து பேசி மகிழ்ந்தனர்.


இந்த நிகழ்வின் விழியப் பதிவினை இன்று வெளியிடுகின்றேன்.
பள்ளி மாணவியரின் திருக்குறள் நடனம், அபிராமி அந்தாதி நடனம், மூதுரை பேச்சு, திருவாய்மொழி ஒப்புவித்தல் ஆகியவற்றோடு தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கம் அவர்களின் உரை, எனது உரை அதன் பின் மாணவர்களின் கேள்விகள், மற்றும் போட்டிகளில் பரிசு பெற்றோருக்கானப் பரிசுகளை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளை இந்த விழியப் பதிவில் காணலாம்.


யூடியூபில் காண:     ​ https://www.youtube.com/watch?v=OlE8bc8I8BE&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!



அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, June 4, 2017

அரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் - லகுலீசர் சிற்பம்

வணக்கம்.

அரிட்டாபட்டி மதுரையில் நரசிங்கம்பட்டிக்கு வடக்காக சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் ஊர்.  மேற்கில் கழிஞ்சமலை என அழைக்கப்படும் மலைத்தொடர்களால் சூழப்பட்டிருக்கின்றது அரிட்டாபட்டி. விவசாயிகள் நிறைந்திருக்கும் இப்பகுதி நெற்பயிற்கள் நிறைந்து பசுமையாகக் காட்சியளிக்கின்றது. இப்பகுதியில் தான் அமைந்திருக்கின்றது அரிட்டாபட்டி குடைவரைக் கோயில்.  வாகனத்தைச் சாலையில் தூரத்தே நிறுத்தி விட்டு வயல் வரப்பில் நடந்து வரும்போது தூரத்தே செங்குத்தான  பாறைகளைப் பார்த்துக் கொண்டே வந்தால் அதன் பின்னால் பாறைகளைக் குடைந்த வகையில் இக்குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.



இக்குடைவரையைப் பற்றிய கல்வெட்டுக்கள் இங்கு காணப்பட்டவில்லையெனினும், இக்குடைவரைக்கோயிலின் அமைப்பைக் கொண்டு இது  கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்கள் குடைவித்த கோயில்தான் என்பதை தொல்லியல், கல்வெட்டியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.  தெளிவான கல்வெட்டுக்கள் இல்லாத போதிலும், இக்கோயிலின் முன்புறத்தில்  முற்கால தமிழ் எழுத்துக்களின் சில வரிகள் எழுதப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது. கல்வெட்டாகச் செதுக்குவதற்காக எழுதப்பட்டு பின்னர் முழுமைப்படுத்தப்படாமல் போன நிலையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இந்தக் கோயிலின் சிறப்பு இங்கிருக்கும் லகுலீசர் சிற்பம். தலையில் கரண்ட மகுடத்துடனும், மார்பில்  பட்டையான யக்ஞோப வீதத்துடனும் லகுலீசர் சிற்ப வடிவில் காட்சி தருகின்றார்.

லகுலீசர் கி.பி.2ம் நூற்றாண்டு வாக்கில் குஜராத் மாநிலத்தின் காரோஹணம் என்ற ஊரில் பிறந்தவர். பவுத்தமும், சமணமும் விரிவாகப் பரவியிருந்த காலகட்டத்தில் லிங்க வழிபாட்டைப் புதுப்பித்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.  லகுலீசர் உருவாக்கிய சைவ சமத்தின் பிரிவு பாசுபத சைவம் என அழைக்கப்படுவது.  சிவபெருமானே லகுலீசராக அவதாரம் செய்தார் என்று ஏகலிங்கி என்ற ஊரில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. லகுலீசரின் பாசுபத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு  லிங்க வழிபாடு தொடங்கப்பட்ட இடங்கள் காரோஹணம் என்றே வழங்கப்பட்டன. தமிழகத்தில் பக்தி இயக்கக் காலத்தில் காரோஹண சைவம் நிலை பெற்றிருந்தது.  நாகைக் காரோஹணம், குடந்தைக் காரோஹணம், கச்சிக் காரோஹணம் ஆகிய மூன்றுமே அவை.  இறைவனே இறங்கி மானுட வடிவில் வந்து அவதரிப்பதையே காரோஹணம், அதாவது காயமாகிய உடல் கீழே இறங்கி வருதல் என்ற பொருளாகின்றது.

தமிழகத்தில் சிவலிங்க வழிபாடு பக்தி இயக்கக் காலத்தில் கோயில்களில் விரிவடைந்தமைக்கு பாசுபத கொள்கை அடிப்படையாக அமைந்தது. சைவத்தை அரசியல் மதமாக ஏற்ற பாண்டியர்களும் பின்னர் சோழர்களும் சிவ வழிபாட்டினை விரிவாக்கும் வகையில் தமிழகத்தின் பல பகுதிகளில் சிவாலயங்களை நிர்மானித்தார்கள். பெரிய கற்கோயில்கள் தொடங்கப்பட்ட காலமாகிய கி.பி  8ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திற்கு முன்னர் குடைவரைக்கோயில்களில் சைவசமயத்தின் குறியீடாகிய சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்த இடங்களாக அமைந்தன. தமிழக வரலாற்றில் சைவ சமய வரலாற்றிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குடைவரைக் கோயிலாக இந்த அரிட்டாபட்டி குடைவரைக் கோயில் திகழ்கின்றது.

குறிப்பு: 
சைவத்தின் தோற்றம், டாக்டர்.ஆ.பத்மாவதி
மாமதுரை,  பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்


யூடியூபில் காண:      https://www.youtube.com/watch?v=wbACsWp5Uxs&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, May 20, 2017

திருமலை நாயக்கர் மகால் கட்டிடக் கலையும் அருங்காட்சியகச் சேகரிப்புக்களும்

வணக்கம்.



திருமலை நாயக்கர் மகால் அல்லது அரண்மனை 1971ம் ஆண்டு தமிழ் நாடு அரசுக்குக் கீழ் வந்தது. அரண்மனை தானே, என நினைப்பவர்கள் பலருக்கு இங்கே உள்ளே உள்ள அருங்காட்சியகத்தைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம்.  இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்ற அரும்பொருட்கள் வெவ்வேறு வகையானவை.  திண்டுக்கல், தேனி, மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட முதுமக்கள் தாழிகள் சில இங்குள்ளன. முதுமக்கள் தாழிகளில் இத்தனை வேறுபாடுகளா என யோசிக்க வைக்கும் தன்மையுடன் இவை திகழ்கின்றன. உதாரணமாக மதுரைக்கு அருகில் தங்கச்சியம்மாபட்டியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு முதுமக்கள் தாழியை இப்படிக் குறிப்பிடலாம்.

இந்த விழியப் பதிவில்

  • எப்படி முதுமக்கள் தாழியில் இறந்தவர் உடலை வைத்து புதைப்பர் என்ற விளக்கம்
  • சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் பற்றிய விளக்கங்கள்
  • தேனி மாவட்டத்தின் வடுகப்பட்டி பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட  வட்டெழுத்துக்கல்வெட்டுடன் அமைந்த தீர்த்தங்கரர் சிற்பம்
  •  சிற்பங்கள் எதிர் மதத்தோரால் சிதைக்கப்படும் போது முகமும் அதில் குறிப்பாக ஏன மூக்குப் பகுதி சிதைக்கப்படுகின்றது என்ற செய்தி
  • நவகண்ட சிற்பம் - நவகண்ட பலி என்பதன் விளக்கம்
  • ஜேஸ்டா தேவி சிற்பம் பற்றிய செய்திகள்
  • அத்திரம்பாக்கம் பெருங்கற்கால கருவிகள்
  • பழங்கருவிகள் பற்றிய விளக்கம்
  • கங்காளர் சிலை விளக்கம்
  • திருமலை நாயக்கர் மகால், மண்டபங்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகள்

என விரிவாகச் செல்கிறது இந்தப் பதிவு.


திருமலை நாயக்கர் மகால்  மதுரையை ஆண்ட   திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. அந்த நாளிலேயே   இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டது இந்த அரண்மனை. இந்து, முஸ்லிம் கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த இந்தோ சரசானிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்டுள்ளது இந்த அரண்மனை,

இந்த அரண்மனையில் தற்சமயம் மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம் இங்கே நாடகசாலை பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத் தொல்லியல் துறையின் மதுரை பகுதி அலுவலகம் இதே கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.



இப்பதிவைச் செய்வதில் எனக்கு உதவிய முனைவர்.பசும்பொன், முனைவர்.ரேணுகா ஆகியோருக்கும், பதிவில் விளக்கமளித்து உதவிய தமிழகத்  தொல்லியல் துறை அலுவலகத்தின் காப்பாட்சியர் திரு.சக்திவேல் அவர்களுக்கும். என்னுடன் வந்து இணைந்து கொண்ட முனைவர் பத்மாவதி, முனைவர் மலர்விழி மங்கை ஆகியோருக்கும் எனது நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Saturday, May 6, 2017

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

வணக்கம்.

நீண்ட காலப் பழமையும் வரலாறும் கொண்ட ஒரு கோயில் மதுரையில் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில். சங்ககால தொண்மைச் சிறப்புக்கள் அமைந்த ஒரு கோயில் இது.


சங்ககாலத்தில் பழையன் என்று சுட்டப்படும்  குறுநில மன்னன் ஒருவன் திருமோகூரை ஆண்டு வந்துள்ள செய்தியை மதுரைக்காஞ்சி வரிகள் இப்படிப் பாடுகின்றன.

பழையன் கோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக்கோசர் தோன்றியன்ன

இந்த வரிகளில் குறிப்பிடப்படும் நான்மொழிக்கோசர், குறுந்தொகையில் குறிப்பிடப்படும் நாலூர்க்கோசரே எனக்கருதப்படுகின்றது.  வம்ப மோரியர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த போது பழையன் கோசரின் துணையால், வம்ப மோரியரை வென்றதாக அகநானூறு(261) குறிப்பிடுகின்றது. இச்செய்திகளின் அடிப்படையில் காணும் போது பழையரால் ஆட்சி செய்யப்பட்ட கோகூர், மௌரியர் காலத்துக்கு முந்திய பழமை வாய்ந்த ஓர் ஊர் எனத் தெரிகின்றது.

சங்ககாலம் தொடங்கி மாயோன் வழிவாட்டில் புகழ்பெற்றிருந்த இக்கோயில் ஏறக்குறைய எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் கற்கோயிலாக எழுப்பப்பட்டு வழிபாட்டில் இருந்து வந்துள்ளது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம்  செய்யப்பட்டுள்ளார் இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் காளமேகப்பெருமாள் சாமி. மணவாளமாமுனிகளும் காளமேகப்பெருமாளைப் பணிந்து பாடியுள்ளார்.

இக்கோயிலின் முன் வாசலில் மருது மண்டபம் என அழைக்கப்படும் கம்பத்தடி மண்டபத்தைக் காணலாம். இங்கு சின்னமருது, பெரியமருது சிற்பங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியை மருது சகோதரகள் கட்டி விரிவு செய்துள்ளனர்.

இதற்கு அடுத்து வரும் மகாமண்டபம் விஜயநகர கலைப்பாணி கட்டுமானம் கொண்டது.

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தாயாருக்கு மோகனவல்லி, திருமோகூர் வல்லி நாச்சியார், மேகவல்லி நாச்சியார் என்ற பெயர்கள் வழக்கில் உள்ளன.

இக்கோயிலிலுள்ள சுதர்சனர் சிற்பம் 4 அடி உயரத்தில் அமைந்தது. இங்குள்ள பாண்டியன் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டில், காங்கேயன் என்பவரால் இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள திருவாழி ஆழ்வாருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் திருவாழி ஆழ்வாராகச் சக்கரத்தாழ்வாரை அதாவது சுதர்சனரை குறிப்பிடலாம்.

காளமேகப் புலவரும் காளமேகப் பெருமாள் மீது ஒரு தனிப்பாடல் பாடியிருப்பதாக அறியமுடிகின்றது.

இக்கோயிலின் திருச்சுற்றுச்சுவர் கி.பி.1699-1700 வாக்கில் மதுரை மங்கம்மாள் அரசியின் தளவாயாக விளங்கிய நரசப்பையரின் அனுமதியின் பேரில் வெங்கப்பையர் என்பவரால் கட்டப்பட்டுள்ளமையை இக்கோயிலின் கல்வெட்டிலிருந்து அறிய முடிகின்றது.

ஏராளமான நீண்ட வாசகங்களில் தமிழ் எழுத்து கல்வெட்டுக்கள் இக்கோயிலில் நிறைந்திருக்கின்றன. ஒரு வரலாற்றுச் சின்னமாக  இந்தத் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் திகழ்கின்றது.


துணை நூல்:
மாமதுரை,பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம், -  பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வெளியீடு.


விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=uzVPMmnPN_o&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Saturday, April 29, 2017

குன்னத்தூர் குடைவரை - உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்

வணக்கம்.

​மதுரை வடக்கு வட்டத்திற்குள் அடங்கிய சிற்றூர் குன்னத்தூர்.  முற்காலப் பாண்டியர் காலத்தில் ஏறக்குறைய ஒன்பது அல்லது 10ம் நூ. வாக்கில் இவ்வூர் குன்றத்தூர்க் குளக்கீழ் என்ற நாட்டுப் பிரிவுக்குட்பட்ட பிரமதேய  கிராமமாகத் திகழ்ந்துள்ளது. இன்று குன்னத்தூர்   மலை என்று அழைக்கப்படும் குன்றில் இந்தக் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது.

குன்றின் கிழக்குப் பகுதியில் சூரியன் உதிக்கும் கிழக்குத் திக்கை நோக்கியதாக அமைக்கப்பட்டுள்ளமையால் உதயகிரீசுவரர் என்ற பெயர் இந்த சிவாலயத்திற்கு வழக்கில் உள்ளது.

வித்தியாசமான வடிவில்  தெற்கு நோக்கிய பாறையில் நின்ற நிலையில் இருக்கும் விநாயகர் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது.

பிற்கால நந்தி சிற்பம் ஒன்றும் கோயிலுக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளது.


துணை நூல்:
மாமதுரை,பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம், -  பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வெளியீடு.




பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Monday, April 24, 2017

குறத்தியாறு - கௌதம சன்னா பேட்டி


குறத்தியாறு  நூலாசிரியர் கௌதம சன்னாவின் நூல் பற்றிய பேட்டி.

இதில்
ஆறுகள்
நாட்டார் வழக்காற்றியல்
கொற்றலை ஆறு
... இப்படி  இந்த நூலின் அடிப்படைகள் விளக்கபப்டுகின்றன.


Saturday, April 22, 2017

தமிழக நாட்டுப்புறப் பாடல்கள்

வணக்கம்.


இசையும் சொல்லும் கலந்து வருவதுதான் பாடல். தமிழர் பாரம்பரியத்தில் வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் பாடல்களை இட்டுக் கட்டிப் பாடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. தமிழர் நாட்டாற் வழக்காற்றியலில் உள்ள பாடல்கள் தான் எத்தனை எத்தனை?  அவற்றை எல்லாம் நாம் இன்று விரும்பி ரசிக்காமல் ஒதுக்கி விட்டோம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கின்றது.

நாட்டார் வழக்காற்றியல் என்பது ஒரு தனித்துறை. தமிழகத்தைப் பொறுத்தவரை பேராசிரியர் வானமாமலை, பேரா.ஆ.சிவசுப்பிரமணியன், பேரா.தொ.பரமசிவன் போன்றோரின் ஆய்வுகள் இத்துறைக்கு பலமும் வளமும் சேர்ப்பனவாக இருக்கின்றன. மேலும் சில சிறந்த ஆய்வுகளும் அவ்வப்போது வெளிவருகின்றன  என்றாலும் கூட, விரிவான வகையில் பதிவு செய்து ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய களம் இது. தமிழகத்திலே கூட நாட்டார் வழக்காற்றியலைப் பாடமாக வைத்திருக்கும் பல்கலைக்கழகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற நிலையே இருக்கின்றன.

நம் குடும்பங்களில் இன்றும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது இவ்வகைப் பாடல்களைப் பாடுவோர் இருப்பார்கள். அவர்களைப் பாடச் செய்து பதிவுகள் செய்து அப்பாடல்களில் வரும் சொற்களை ஆய்வு செய்வதும், கதை வர்ணனைகளை ஆய்வு செய்வதும் தமிழ் மக்கள் பண்பாட்டினை அறிந்து கொள்ள நாம் செய்யக்கூடிய  மானுடவியல் ஆய்வுகளில் ஒன்றாக அமையும்.  பாடல்களை இட்டுக் கட்டி பாடும் போது நாட்டுப்புறக்கலைஞர்கள் சொல்லும் கதைகள் ஒன்றுக்கொன்று மாறுபடுவதைக் காணலாம். சில பாடல்கள் வழி வழியாய் வந்த செய்திகளைக் கூறும். சில  பாடல்கள் தற்கால நிகழ்வினைக் கூறும். இவை எதுவாகினும், ஒரு செய்தியானது பாடல் வழியாகப் பதியப்படும் நிகழ்வாகவே நாட்டுப்புறப்பாடல்கள் அமைகின்றன.

இத்தகைய ஆய்வுகள் பதியப்படவேண்டும். அவை ஆராயப்பட வேண்டும் என்பதை மனதில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை நாட்டுப்புறப்பாடல்கள் தொகுப்பு ஒன்றினை வெளியிடுகின்றது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த லெட்சுமி அம்மாள் அவர்களும் மதுரையைச் சேர்ந்த பெண்மணிகளும் இணைந்து வழங்கியிருக்கும் நாட்டுப்புறப்பாடல்கள் பதிவு இது.

62 வயது நிரம்பிய லெட்சுமி அம்மாள் அவர்கள்,  பருத்திவீரன் போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கதிர் அறுக்க ஒரு பாட்டு
நாற்று நட ஒரு பாட்டு
தாலாட்டுக்கு ஒரு பாட்டு
ஒப்பாரிக்கு 2 பாட்டுக்கள்
மாரியம்மனுக்கு ஒரு பாட்டு
வள்ளி மேல் காதல் கொண்ட முருகனை நினைத்து ஒரு தெம்மாங்குப் பாட்டு...
இப்படி விதம் விதமான பாடல்களுடன் வெளிவருகின்றது தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்தப் பதிவு.

இந்தப் பதிவிற்கான ஏற்பாட்டில் உதவிய தியாகராசர் கல்லூரி பேராசிரியர் மலர்விழி மங்கைக்கும் முத்தமிழ் நாட்டுப்புறக்கலைக்குழுவினருக்கும் அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளருக்கும் நமது நன்றி.



பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Saturday, April 8, 2017

கொற்கை

வணக்கம்.


பண்டைய காலந்தொட்டு பாண்டி நாட்டுக் கடற்கரையோரத்தில் கொற்கைப் பட்டினமே சிறந்ததோர் துறைமுகப் பட்டினமாகச் சிறப்புற்றுத் திகழ்ந்தது. கிரேக்கத்திலிருந்தும், ரோம் நகரிலிருந்தும், சீனாவிலிருந்தும் நிறைந்த பல வகைப்பொருட்களுடன் மரக்கலங்களுடன் தமிழகத்தின் அன்றைய புகழ்பெற்ற துறைமுகப்பட்டினமாக விளங்கிய கொற்கைக்கு வந்தனர் அயலக  வணிகர்கள்.  தமிழகத்திலிருந்து பட்டு, முத்துக்கள் பொற்கிண்ணங்கள், மிளகு போன்றவற்றை பண்டமாற்றுச் செய்து இவர்கள் திரும்பிச் சென்றனர்.

மதுரை உதயமாவதற்குக் காரணமாக இருந்த நல்லூர் கொற்கை என கல்வெட்டு சான்று பகர்கின்றது.

பண்டைய காலத்தில் பாண்டிய மன்னர்களின் மிக முக்கிய துறைமுகப் பட்டினமாக விளங்கிய கொற்கை இன்று அதன் சிறப்பின் சுவடு தெரியாமல் ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கின்றது.  தற்சமயம் இந்தச் சிற்றூர் கடற்கரையிலிருந்து 9கிமீ தள்ளி இருக்கின்றது.

இந்த ஊரில் நாம் அடையாளம் காணக்கூடிய முக்கியமானச் சின்னங்களாக இருப்பவை இங்குள்ள ஈராயிரம் ஆண்டுகள் பழமையானது என மக்களால்  கூறப்படும்  வன்னி மரம், இங்குள்ள வெற்றிவேல் அம்மன் கோயில் மற்றும்  அக்கசாலை விநாயகர் கோயில் என இப்போது விநாயகர் கோயிலாக மாற்றம் கண்டிருக்கும் பண்டைய அக்கசாலை ஈஸ்வரமுடையார் சிவன் கோயில் ஆகியவையே.

இந்தப் பதிவில் கொற்கையில் தொல்லியல் ஆய்வாளராக  1982 முதல் 1988 வரை 5 ஆண்டுகள்  பணியாற்றிய திரு.சந்திரவானன் அவர்கள் கொற்கை அகழ்வாய்வுகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் விரிவாக நமக்கு விளக்கமளிக்கின்றார்.  இதில் குறிப்பாக


  • கொற்கையில் தொல்லியல் துறையினரின் ஆய்வுகள்
  • அக்கசாலை பற்றிய விளக்கம்
  • கொற்கை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சதிக்கல்
  • கொற்கை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தீர்த்தங்கரர் சிலைகள்
  • கொற்கை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த உடன்கட்டை ஏறியோர் பெயர்களைக் குறிக்கும் கல்வெட்டுக்கள்
  • பிற்காலச்சோழர்காலத்திலும் கொற்கை துறைமுகப்பகுதியாக இருந்திருக்கின்றது
  • அக்கசாலை என்பது பண்டைய காலத்தில் காசுகள் தயாரிக்கும் இடமாக இருந்தது
  • இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முதுமக்கள் தாழி, சங்குகள், சிப்பிகள் பற்றிய செய்திகள்

...என மேலும் பல தகவல்களோடு விளக்குகின்றார்.

கொற்கை நகரம் இன்று வாழை தோப்புக்கள் நிறைந்து காணப்படுகின்றது என்றாலும் குளங்கள் தூர்வாரப்படாமல் வறண்டு கிடப்பதைக் காண்கின்றோம்.

இன்று கொற்கை மூன்று பெரும்பாண்மை சாதி மக்கள் வாழ்கின்ற தெருக்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்று தலித் மக்கள் வாழும் தெரு, ஒன்று பிள்ளைமார் மக்கள் வாழும் தெரு, மற்றொன்று கோணார் சமூகத்தவர் வாழும் தெரு   என்றுமுள்ளதையும் காண்கின்றோம்.



விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:  


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Saturday, April 1, 2017

தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்

வணக்கம்.

மதுரையின் திருப்பரங்குன்றம் மலையில் தெற்கே தென்பரங்குன்றம் பகுதியில் கி.பி.8-9ம் நூற்றாண்டளவில் ஒரு சமணக் குடைவரைக் கோயில் உருவாக்கப்பட்டது. இக்குடைவரைக் கருவரையில் புடைப்புச் சிற்பமாக ஒரு தீர்த்தங்கரரின் உருவமும் செய்விக்கப்பட்டிருந்தது. கி.பி.1223இல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்குடைவரைக் கோயில் ஒரு சிவன் கோயிலாக மாற்றம் கண்டது.


சுந்தர பாண்டிய ஈஸ்வரம் என்று பெயர் மாற்றம் பெற்று அதன் பராமரிப்புக்காகப் புளிங்குன்றூர் என்னும் கிராமத்தை மன்னன் தானமளித்த செய்தி இக்கோயிலிலுள்ள குடைவரையின் கிழக்குச் சுவற்றில் வெட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலைச் சிவன் கோயிலாக மாற்றுவதில் பிரசன்ன தேவர் என்னும் சைவத்துறவி முக்கியப் பங்காற்றியுள்ளார் என்ற செய்தியும் கல்வெட்டின் வழி அறிய முடிகின்றது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் புளிங்குன்றூரை இன்று உள்ள வேடர் புளியங்குளம் என்ற ஊராகக் கொள்ளலாம்.

தற்போது உமையாண்டவர் கோயில் என்ரு இக்கோயில் பெயர் பெற்றுள்ளது. அதற்கு ஏற்ப ஏற்கனவே இருந்த சமணத் தீர்த்தங்கரர் உருவத்தை மாற்றம்  செய்து அர்த்தநாரியின் உருவத்தையும்  அதன் பின் நந்தியின் உருவத்தையும் செய்துக்கியுள்ளனர். அர்த்தநாரியின் தலைக்கு மேலாக அசோக மரத்தின் சுருள் சுருளான கிளைகள் இன்றும் காணப்படுகின்றன.

நன்றி- மாமதுரை,பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம், -  பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வெளியீடு.



பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Sunday, March 26, 2017

திருப்பரங்குன்றம் சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்கா

வணக்கம்.

மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் குன்றின் மேல் இஸ்லாமிய மக்கள் வந்து வழிபட்டுச் செல்லும் ஒரு தர்கா ஒன்று இருக்கின்றது.


தென்பரங்குன்றம் ஸ்ரீ காசிவிசுவநாதர் கோயிலுக்குச் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள படிகளில் ஏறிச் செல்லும் போது மேற்பக்கத்தில் மலைப்பகுதியில் வலது பக்கத்தில் மற்றுமொரு பாதை விரிவதைக் காணலாம். அந்த விரிந்து செல்லும் பாதையில் தொடர்ந்து சென்றால் அங்கே சமமான ஒரு தரைப்பகுதி இருப்பதையும், அதன் அருகிலேயே ஒரு சுனை ஒன்று நீருடன் காட்சி அளிப்பதையும் காணலாம். அங்கிருந்து வடக்கு நோக்கிப் பார்த்தால் இரண்டு சமாதிகள் எழுப்பப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்தச் சமாதி இருக்கும் இடத்திலிருந்து மேலே செல்வதற்கென்று கற்படிகளோ அல்லது வாகனம் செல்லும் சாலையோ இல்லை. ஆனால் மரங்கள் நிறைந்த அப்பகுதியில் மேலே மனிதர்கள் செல்லும் ஒற்றையடிப்பாதை ஒன்று இருப்பதைக் காண முடியும். அந்த ஒற்றையடிப்பாதையில் ஏறி படிப்படியாக ஏறக்குறைய பதினைந்து நிமிடங்கள் நடந்தால் மேலே இருக்கின்ற தர்காவைக் காணமுடியும்.

நான் சென்றது மதிய நேரம். மேலே நான் வந்து சேர்ந்த போது மணி ஏறக்குறைய முற்பகல் பன்னிரண்டு இருக்கும். நான் உள்ளே நுழையும் போது குடும்பங்களாக ஆணும் பெண்ணுமாக இஸ்லாமிய மக்கள் வழிபாடு முடித்து வந்து கொண்டும் தர்காவிற்குள் சென்று கொண்டும் இருந்தனர். வாசலில் சில வயதான பெரியோர் அமர்ந்திருந்தனர். அதில் ஒருவர் தன் பக்கத்தில் மயிலிறகு கட்டு ஒன்றினையும் வைத்திருந்தார். தர்காவிற்கு வருபவர்களுக்கு மந்திரித்து அவர்களுக்குப் புனித நீரைக் கொடுப்பது மற்றும் மயிலிறகுக் கட்டினால் அவர்களின் தலையின் மேல் வைத்து எடுத்து  ஓதிப் பிரார்த்திப்பது என்பது போன்ற சடங்குகளைச் செய்பவர் இவர்.

 சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்கா என்பது இந்த தர்காவின்  பெயர். இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதற்காக ஏறக்குறை எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரேபிய நாட்டிலிருந்து இப்பகுதிக்கு வந்து பின் இங்கே வாழ்ந்து மறைந்தவர் பெயரில் தான் இந்தத் தர்கா வழங்கப்படுகின்றது. அப்போது மதுரையைப் பாண்டிய மன்னர்கள் ஆண்டுகொண்டிருந்த காலம். மன்னருக்கும் ஏனையோருக்கும் நோய் ஏற்படும் போதும், உடல் உபாதைகள் ஏற்படும் போதும் மருத்துவ உதவிகளை குரான் ஓதுதல், மூலிகை மருத்துவம் என்ற வகையில் செய்து பிணி தீர்க்க இங்கு வாழ்ந்த இஸ்லாமிய குருமார்கள் உதவியிருக்கின்றனர். இதன் அடிப்படையில் இந்த குருமார்களுக்குப் பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் அருகாமையில் இருந்த கிராமங்களில் வாழ்வதற்கான இடங்கள் வழங்கப்பட்டன. சுல்தான், மற்றும் அவருடன் வந்த மந்திரிகள், மத குருமார்கள், மந்திரியாக இருந்து வைத்திய சாத்திரம் படித்த இஸ்லாமிய மருத்துவர் ஆகியோர் சமாதிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இங்குள்ள ஐதீகத்தின் படி, இந்தச் சுல்தான் தன் வயோதிக வயதில் இந்தக் குன்று இருக்கும் பகுதியில் மறைந்தார் என நம்புகின்றனர்.

சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் அவர்களின் சமாதி இந்தத் தர்காவின் உட்புறத்தில் அமைந்துள்ளது. இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையில் பின்புறமாக இந்தச் சமாதி எழுப்பப்பட்டுள்ளது. குடைவரை கோயில் போன்ற அமைப்பு உள்ளே இருக்கின்றது. அந்தச் சமாதியின் மேல் பக்கம் பச்சை நிறத்திலான துணி போர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சமாதிக்கு முன் புறத்தில் மேலும் ஒரு சமாதி ஒன்றும் உள்ளது. இது சுல்தானுடன் வந்த மந்திரியின் சமாதி. இந்தச் சமாதிக்கு முன்னர் மிக வித்தியாசமான தோற்றத்தில் அமைந்த வெண்கல குத்து விளக்குகளை வரிசையாக வைத்திருக்கின்றனர். இந்தச் சமாதி பிரத்தியேகமாக ஒரு இரும்புக் கம்பி போட்டு பாதுகாக்கப் படுகின்றது. சுல்தான் மட்டுமல்லாது இந்த மந்திரியும் மருத்துவத்தில் திறமை பெற்றவராக இருந்திருக்கின்றார். அவர்கள் வந்து சேர்ந்த இப்பகுதியில், காடுகளில் கிடைத்த மூலிகைகளைக் கொண்டு நோய்வாய்ப்பட்டு வாடும் மக்களுக்கு உதவும் சேவையை இவர்கள் செய்திருக்கின்றனர். இந்த மந்திரியின் பெயர் லுக்மான் ஹகீம் என்பது.


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Saturday, March 18, 2017

தென்பரங்குன்றம் கன்னிமார் கோயில் குலதெய்வங்கள் வழிபாடு

வணக்கம்.


மதுரை மாநகரில் ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலைப் பற்றி பெரும்பாலோர் அறிந்திருப்போம். அங்கே தென்பரங்குன்றம் என ஒரு பகுதியும் உள்ளது. திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வரும் வழியில், அதாவது மலையின் நேர் பின் பக்கத்தில் இந்தத் தென்பரங்குன்றம் அமைந்துள்ளது. தென்பரங்குன்ற மலையின் சமணர் குடை வரை கோவில் ஒன்று உள்ளது. தற்போது உமையாண்டார் கோயில் என இக்கோயில் அழைக்கப்படுகின்றது.  இந்தக் கோயில் அமைந்திருக்கும் பகுதிக்குக் கீழே உள்ள காட்டுப்பகுதியில் ஆங்காங்கே மரங்களின் கீழ் வராகி, நாகர், முனியாண்டி சாமி என நாட்டார் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் பண்டைய பாரம்பரியத்தின் வழிபாட்டுக் கூரான குலதெய்வ வழிபாடு என்பது இப்பகுதியில் சிறப்புப் பெற்றுள்ளது. இங்கே மூலைக்கு மூலை அமைந்திருக்கும் சிலைகளை மக்கள் ஒவ்வொரு சிறப்பு நாட்களிலும் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இங்குள்ள குடைவரைக் கோயிலில் பாதுகாவலராக இருக்கும் பெரியவர் ஒருவர் என் உடன் வந்து இந்தக் குலதெய்வ சாமிகள் இருக்கும் இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்று ஒவ்வொரு தெய்வத்தைப் பற்றியும்  விளக்கம் அளித்தார். இதே பகுதியில் சற்றே உயரமான ஒரு குன்று பகுதியில் சப்த கன்னிமார்  கோயில் அமைந்துள்ளது. இங்கே கருப்புசாமி, விநாயகர், நாகம்மா ஆகிய தெய்வங்களும் வழிபாட்டில் இடம்பெறுகின்றன.

அருகிலேயே  ஒரு சிறு கூடாரத்திற்குள் சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது.  சிவலிங்கத்திற்குப் பால் சுனை கண்ட சிவபெருமான் என்பது பெயர். இங்கு பஞ்சலிங்க சன்னிதி ஒன்றும் அமைந்திருக்கின்றது.

இந்தப் பகுதி அழகிய வனம் சூழ்ந்து இயற்கை எழிலுடன் அமைந்திருக்கின்றது. குலதெய்வ வழிபாடு இன்றும் மிகச்சிறப்புடன் நடத்தப்படுகின்ற ஒரு பகுதியாக இது திகழ்கின்றது.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Sunday, March 12, 2017

கோரிப்பாளையம் தர்கா, மதுரை

வணக்கம்.



தமிழகத்தின் மதுரையில் வைகையாற்றின் வடகரையில் உள்ள நகர்ப்பகுதிக்கு முகமது கோரியின் நினைவாக, அல்லது கோரியின் படைகள் வந்திறங்கிய இடம் என்ற பொருளில் கோரிப்பாளையம் என்ற பெயர் வழங்கி வருகின்றது. இங்கே ஒரு தர்காவும், பள்ளிவாசலும் உள்ளன. இங்குள்ள தர்காவில் சுல்தான் அலாவுதீன் உதௌஜி அவர்களும், அவரது மருமகனான குத்புதீன் பிரோம் ஷாக்குஸ் அவர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தர்க்காவின் உட்புறம் நடைவழியில் உள்ள மதுரை நாயக்க மன்னன் வீரப்பநாயக்கர் காலக் கல்வெட்டு (கி.பி.1573) தில்லி ஒரு கோல் சுல்தானென்று குறிப்பிடுகின்றது. வாரங்கல் என்பது இக்கல்வெட்டில் ஒரு கோல் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்களிடையே ஒரு கருத்தும் நிலவுகின்றது..

இப்பள்ளிவாசலுக்கு கூன் பாண்டியன் காலத்தில் 14 ஆயிரம் பொன் அளிக்கப்பட்டுள்ளதென்றும் அதனைக் கொண்டு ஆறு  சிற்றூர்கள் வாங்கப்பட்டு இப்பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டது என்றும் வீரப்ப நாயக்கன் காலக்கல்வெட்டிலிருந்து அறிய முடிகின்றது.

பாண்டிய மன்னர்களுக்குத் தேவையான குதிரைகளை அரேபியாவிலிருந்து தருவித்த போது, குதிரை வணிகத்தை ஒட்டி அரேபிய நாட்டைச் சேர்ந்த இசுலாமியர் பலர் மதுரைக்கு வந்தனர் என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விசயமாகின்றது.

நன்றி: மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.



பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Sunday, March 5, 2017

சமணமலை - மதுரை

வணக்கம்.

மதுரை நகரின் தெற்கே தேனி செல்லும் சாலையில் நாகமலைப் புதுக்கோட்டைக்குத் தெற்கில் அமைந்துள்ளது சமண மலை. இங்கு இயற்கையான பாறை ஒன்று அமைந்துள்ளது. இதில் சுமார் ஆறு அடி உயரமுள்ள அமர்ந்த நிலையில் காணப்படும் மகாவீரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.


இச்சிற்பத்தை உருவாக்கக்காரணமான குறண்டி திருக்காட்டாம் பள்ளியின் மாணாக்கர்கள் பெயர் இங்கே வட்டெழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1.வெண்புநாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக நந்திப்ப
2.டாரர் அபினந்தபடார் அவர் மாணாக்கர் அரிமண்டலப்ப டார்அ
3.பினந்தனப்படார் செய்வித்த திருமேனி

என்பது இக்கல்வெட்டு குறிப்பிடும் செய்தியாகும்.

இதற்கடுத்து இங்குள்ள குகையில் ஐந்து புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. முக்குடை அண்ணல்கள் அமர்ந்திருக்க  ஒரு இயக்கி சிம்மத்தின் மீது அமர்ந்து யானை மீது அமர்ந்துள்ள அசுரனோடு வீராவேசமாகப் போரிடுவது போல செதுக்கப்பட்டுள்ளது. வலது ஓரம் அம்பிகா இயக்கியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சிற்பங்களின் கீழ் வட்டெழுத்தில் இவற்றைச் செய்வித்தோர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

முதல்கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளிவுடையகு
2.ணசேனதேவர் சட்டன் தெய்வ
3.பலதேவர் செய்விச்ச திருமேனி


அடுத்த கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டி
2. த் திருக்காட்டாம்பள்ளிக்
3. குணசேனதேவர் மாணாக்கர் வ
4. ர்தமானப் பண்டிதர் மாணாக்
5. கர் குணசேனப் பெரிய
6. டிகள் செய்வித்த தி
7. ருமேனி

என்றும்

மூன்றாம் கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி ஆள்
2. கின்ற குணசேனதேவர் சட்டன்
3. அந்தலையான் களக்குடி தன்னை
4. ச் சார்த்தி செய்வித்த திரு
5. மேனி

என்றும் வழங்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுக்கள் தரும் செய்திகளின் வழி இச்சமணப்பள்ளிக்கு நெடுங்காலம் பொறுப்பு வகித்தவர் குணசேனதேவர் என்பது அவரது சீடர்கள் இப்பள்ளியை நிர்வகித்து இச்சிற்பங்களைப் பாதுகாத்தனர் என்றும் அறியலாம். மதுரைப்பகுதியிலேயே மிகப்பெரிய பள்ளியாக இது திகழ்ந்தது.

நன்றி: மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.




அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Sunday, February 26, 2017

திருக்குறள் ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் - முனைவர்.க.சுபாஷிணி

வணக்கம்.

11.02.2017 சனிக்கிழமை வட  அமெரிக்காவின் டால்லஸ் நகரில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் திருக்குறள் விழா நடைபெற்றது. அதில் காலையில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் மூன்று சொற்பொழிவுகள் இடம் பெற்றன. அதில் திருக்குறள் - ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் என்ற சொற்பொழிவின் பதிவு இன்று வெளியிடப்படுகின்றது.

சொற்பொழிவாலர். முனைவர்.க.சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.



நன்றி. இப்பதிவை நமக்காக செய்து வழங்கிய திரு.அருண்குமார் (Frisco, Texas) அவர்களுக்கும் சாஸ்தா அறக்கட்டளை நிறுவனர்கள் திரு.வேலு திருமதி விசாலாட்சி ஆகியோருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரத்தியேகமான நன்றியைப் பதிகின்றோம்.!



அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Wednesday, February 22, 2017

பறையிசை நடனம்

வணக்கம்.


பறையிசை நடனம் பண்டைய தமிழர் மரபு சார்ந்த கலைகளில் ஒன்று. இவ்வாண்டு ஜனவரி 4ம் தேதி ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியில் நடைபெற்ற  தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையம் தொடக்க விழாவில் கல்லூரி மாணவர்கள் வழங்கிய பறையிசை நடனம் இது.

மிக நேர்த்தியாக பறையிசைக்கருவியை வாசித்துக் கொண்டு இளைஞர்கள் நடனம் ஆடுவது பார்ப்போரை கவரும் வகையில் அமைந்திருக்கின்றது


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Saturday, February 4, 2017

மதுரை அமெரிக்கன் கல்லூரி கல்வெட்டு பயிற்சி - தொடக்கவிழா மற்றும் கண்காட்சி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

21.12.2016 வெள்ளிக்கிழமை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஒரு நாள் கல்வெட்டு அறிமுகப் பயிற்சி நடைபெற்றது. தமிழ் மரபு அறக்கட்டளை திட்டமிட, இந்த நிகழ்ச்சியை நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்கியிருந்தது  மதுரை அமெரிக்கன் கல்லூரி. அந்த நாளில் இக்கல்லூரியில் உள்ள அரிய ஆவணங்கள், சேகரிப்புக்கள் ஆகியனவற்றை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஒரு கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இந்த நிகழ்வின் தொடக்கவிழா உரைகளை இன்று வெளியிடுகின்றோம்.  வரவேற்புரைக்குப் பிறகு நோக்க உரையும், வரவேற்புரையும் அதன் தொடர்ச்சியாக கண்காட்சி திறந்து வைத்துப் பொது மக்கள் பார்வையிடுதலும் இப்பதிவில் அடங்குகின்றன.

1:12 நிமிடம் - கல்லூரி முதல்வர் முனைவர் ம.தவமணி கிறிஸ்டபர் -  தொடக்க உரை
11:54 நிமிடம் - முனைவர்.சுபாஷிணி - நோக்க உரை
26:41 நிமிடம் - முனைவர்.மோனிக்கா - வரவேற்புரை
35:10 நிமிடம் - கண்காட்சி திறப்பு விழா, முனைவர்.பாண்டியராஜா திறந்து வைக்கும் காட்சியும் கண்காட்சியும்



நன்றி. இக்கருத்தரங்கஈ ஏற்பாடு செய்வதில் மிகவும் உறுதுணையாக இருந்த கல்லூரி நூலகர் முனைவர்.வசந்தகுமார் அவர்களுக்கும் நண்பர் செல்வம் ராமசாமி அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரத்தியேகமான நன்றியைப் பதிகின்றோம்.!

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​