Sunday, August 11, 2019

தொல்லியல் அறிஞர் டாக்டர்.நாகசாமியின் அண்மைய தமிழ் எதிர்ப்பு கருத்துகள் பற்றி டாக்டர்.ராஜவேலு

அண்மைய காலத்தில் தமிழகத் தொல்லியல் துறையில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் நாகசாமியின் கருத்துக்கள் தமிழ் ஆய்வுலகில் சர்ச்சையை எழுப்பியிருப்பதை நாம் மறுக்கமுடியாது.  இவர்   தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கண, இலக்கியங்கள் வடமொழி நூல்களை அடிப்படையாகக் கொண்டு கையாளப்பட்டவை  என்ற கருத்தில் 'Mirror of Tamil and Sanskrit' என்ற ஆங்கில நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். அதில்,  பரத நாட்டிய சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்கள் இவை என இந்த நூலில் குறிப்பிடுகின்றார்.  அண்மையில்  அவர் எழுதி வெளியிட்ட  ‘Thirukkural - An Abridgement of Sastras’ என்னும் நூலில்  திருவள்ளுர்  தர்மசாத்திரம், அர்த்த சாத்திரம், நாட்டிய சாத்திரம், காம சாத்திரம் ஆகிய வைதீக சாத்திர வேதமரபின் நூல்களின் அடிப்படையில்  ஆய்வு செய்துள்ளார் என்றும், திருக்குறள்  நால் வருண முறையை அடிப்படையாகக் கொண்டது என்றும்,  பிராமணர்களை வள்ளுவர் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றுகிறார் என்றும் குறிப்பிடுகின்றார். அது மட்டுமன்றி பண்டைய தமிழ் தொல் எழுத்துக்கள் வட மொழி பிராமியிலிருந்து பெறப்பட்டவை என்றும்  கி.மு. முதல் நூற்றாண்டில் தான் அவை தமிழகத்தில் வழக்கத்திற்கு வந்தன என்றும் உண்மைக்கு எதிரான கருத்துக்களைk குறிப்பிடுகின்றார். இது தொடர்பாக தொல்லியல் அறிஞர் டாக்டர்.சாந்தலிங்கம், முனைவர் தமிழண்ணல், முனைவர் நடன காசிநாதன்; முனைவர். க. நெடுஞ்செழியன் போன்றோர் கண்டனங்களை பல்வேறு வகையில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் தொடர்ச்சியாக தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த  டாக்டர்.ராஜவேலு தனது கருத்துக்களைப் பதிகின்றார்.


  • டாக்டர் நாகசாமியின் ஆரம்ப கால ஆய்வுகளுக்கும் தற்கால கருத்துக்களுக்கும் உள்ள முரண்பாடு
  • வேதங்கள் அமைந்த மொழி எது
  • தமிழ் எழுத்துக்களுக்கு முன்னர் சமஸ்கிருதம் தோன்றியதற்கான கல்வெட்டுச் சான்றுகள் இல்லை
  • வடமொழி இலக்கியங்களிலிருந்து தமிழ் இலக்கியங்கள் தோன்றின என்னும்  அவரது கருத்துக்கள்
  • சமஸ்கிருதம் எப்போது எந்த காலகட்டத்தில் தமிழகத்தில் புகுத்தப்படுகின்றது
  • பிரம்மசத்திரியர்கள் எனப்படுவோருக்கும் பிராகிருதம் சமஸ்கிருதத்திற்குமான தொடர்பு


இப்படி பல தகவல்களோடு வருகின்றது இப்பதிவு.




இப்பேட்டியை நமக்காக வழங்கிய தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த  டாக்டர்.ராஜவேலு அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. 

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]