Thursday, October 2, 2014

மலேசியத் தமிழர்களின் வாழ்வியல்: 20ம் நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் நிலை - பகுதி 1

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கடந்த 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்தவர்கள் பலர் மலேசியாவின் பல மாநிலங்களில் தங்கி தங்களின் புதிய வாழ்க்கையைத் தொடர்ந்தனர். ஆயினும் பலர் இன்னமும் தமிழகத்துடன் தொடர்பு வைத்திருப்பதை நன்கு காண்கின்றோம். இத்தகைய விஷயங்களையும் பதிவு செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விழியப் பதிவு முயற்சிதான் இது.


இந்தியாவில் பெண் எடுத்து மலேசிய மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைப்பர் இக்காலத்தில் ஆனால் 1960களிலும், 70களிலும் மலேசியாவிற்கு வந்த இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட  சிலர் இந்தியாவிற்குப் பெண்ணை திருமணம் முடித்து அனுப்பி வைத்தனர்.

அப்படி ஒரு அனுபவத்தைக் கொண்டவர் தான் திருமதி.வசந்தா. இவர் இந்தியாவில் திருவாரூரில் பிறந்து மிக இளம் பிராயத்தில் மலேசிய பினாங்கு மானிலத்தில் வளர்ந்து அங்கே கல்வி கற்று பின்னர் பெற்றோர் விருப்பத்தின் பேரில் இந்தியாவில் தஞ்சையில் ஒரு கிராமத்து அதிகாரிக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டவர். அங்கிருந்த இவர் 25 ஆண்டுகள் இணைந்திருந்த அவ்வாழ்க்கையில் அவரது கணவர் மற்றொரு பெண்ணை மணம் முடிக்க விரும்பவும் அதற்கு உற்றார் உறவினர் சமாதானம் சொல்லி  இவரிடம் சம்மதம் பெறவும் முயற்சி செய்த போது மனம் உடைந்து  தனது 50வது வயதில் தஞ்சையிலிருந்து வெளியேறி பினாங்கிற்குத் தனியாக வந்து சேர்ந்தார்.

புது வாழ்க்கையை மீண்டும் தனது 50ம் வயதில் பினாங்கில் தொடங்கினார். இப்போது பினாங்கிலேயே உத்தியோகம் பார்த்துக் கொண்டு உறவினரோடு இருந்து சமூகத்  தொண்டும் செய்து வருபவர் இவர். 64 வயது பெண்மணி.

சென்ற ஆண்டு நான் கேரித் தீவிற்குச் சென்ற போது என்னுடன் எனது பேட்டியில் உதவுவதற்காக வந்தவரை அவர் கதையைச் சொல்லச் செய்து பேட்டி செய்தேன்.

இயல்பான பேச்சில் அமைந்தது இப்பதிவு. மக்கள் வாழ்க்கையும் சரித்திரம் தானே.   தனது அனுபவங்களைச் சொல்கின்றார்.  அதிலும் குறிப்பாக இந்த முதல் பதிவில் தனது இளம் பிராயத்து மலேசியாவில் பினாங்குத் தீவில் தனது பள்ளிக்கூட அனுபவங்களைச் சொல்கின்றார். இவை 1960களில் நடந்த விஷயங்கள். கேட்டுப் பாருங்கள்.


யூடியூபில் இப்பதிவைக் காண:  

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.


இப்பதிவினைக் கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Wednesday, September 17, 2014

கேரித் தீவில் தமிழர் குடியேற்றம்

வணக்கம்.

தமிழகத்தின் நாமக்கல்லிலிருந்து புலம்பெயர்ந்து சென்று மலேசியாவின் கேரித்தீவில் வசிக்கும் திரு முனுசாமி-காளியம்மாள் தம்பதியினரின் பேட்டி இன்றைய வெளியீட்டில் இடம் பெறுகின்றது.

1930ம் ஆண்டில் தமக்கு 1 வயதாக இருக்கும் போது ரஜூலா கப்பலில் மலாயா வந்தமை பற்றியும் அக்கால மலேசிய தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றியும் சுவாரஸியமாக பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள் இத்தம்பதியினர். அவர்களோடு இவரது தம்பி மகள் காந்தியும் உடன் வருகின்றார்.

கப்பலில் சென்னையிலிருந்து பயணித்து பின்னர் நாகபட்டினம் வந்து அங்கும் மக்களை ஏற்றிக் கொண்டும் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டும் வரும் கப்பல் மலேசியாவின் பினாங்குக்கு வந்து ஆட்களையும் பொருட்களையும் இறக்கிய பின்னர் போர்ட் க்ளேங் துரைமுகத்தில் நிறுத்தி பயணத்தை முடித்துக் கொள்ளுமாம். 5 நாட்கள் பயணமாக கடலில் இந்தப் பயணம் இருந்திருக்கின்றது.

கல்வி பெறுவது என்பதை விட தோட்டத்தில் காடுகளை அழிக்கும் தொழில் செய்வதும் பின்னர் செம்பனைகளை நட்டு அங்கு பணி புரிவதுமே கனவாக அக்காலத்தில் இங்கு வந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இருந்திருக்கின்றது. ஆயினும் கால மாற்றத்தில் இவர்களது குழந்தைகள் கல்வி கற்று உத்தியோகத்திற்குச் சென்று விட்ட நிலையில் இவர்களது வாழ்க்கை மலேசிய சூழலுடனேயே ஐக்கியப்பட்டு விட்டது. ஆயினும் தமிழகத்திற்கான இவர்களது தொடர்புகள் இன்னமும் உறுதியாகவே இருக்கின்றன.

இவர்களோடு தஞ்சாவூரைச் சேர்ந்த திருமதி வசந்தாவும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார். இவர்களும் இவர்களது குடும்பத்தினர் அனைவருமே இந்தியாவிலிருந்து கப்பல் பயணம் மேற்கொண்டு மலாயா வந்தவர்கள்.



யூடியூபில் இப்பதிவைக் காண:    https://www.youtube.com/watch?v=AXXVvu26PLE&feature=youtu.be


இப்பதிவு ஏறக்குறைய 23நிமிடங்கள் கொண்டது.


இப்பதிவினைக் கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, September 10, 2014

மலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

புலம்பெயர்வு என்பது தொடர்ந்து நிகழ்வது. மலேசியாவில் இருக்கும் கேரித் தீவில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செம்பனைத்தோட்டங்களில் பணி புரிய வந்த நாமக்கல் பகுதி தமிழர்களின் குடியேற்றம் பற்றி சில செய்தியும் கோயில் வழிபாடு செய்யும் அம்மையாரைப் பற்றியும் சென்ற வாரம் ஒரு விழியப் பதிவு வெளியீடு செய்தேன்.இன்று மேலும் ஒரு விழியம் வெளியீடு காண்கின்றது. கேரித்தீவில் சுற்றுப் பயணம் செய்து அங்கு மக்கள் வாழ்வியல், இந்தத் தீவில் உள்ள மிகப்பெரிய செம்பனை ஆலையான  Sime Darby, கோயில்கள், தமிழ் பள்ளிகள், மருத்துவமனை ஆகியனவற்றைப் பதிந்துள்ள விழியம் இது.

தமிழிலும் சாலை பெயர் உள்ள மலேசிய தீவு இது என்பது கூடுதல் விஷயம்,

இன்றும் தமிழர்களே இத்தீவின் அதிகப் பெரும்பாண்மையினராக இருக்கின்றனர் என்பதுவும் ஒரு கூடுதல் செய்தி. அத்தோடு இங்கு வாழும் பழங்குடியினரும் மலாய் மக்களும் கூட தமிழ் பேசுகின்றனர். அதே போல தமிழ் மக்கள் மலாய் மொழியோடு பழங்குடியினர் மொழியையும் பேசுகின்றனர்.

பசுமை நிறைந்த இக்கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம். வாருங்கள்.


யூடியூபில் இப்பதிவைக் காண:    https://www.youtube.com/watch?v=QXEoQcxzpMY&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 12 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Wednesday, September 3, 2014

மலேசியாவில் கிராமப்புர ஆலய பெண் பூசாரி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

இறைவழிபாட்டு முறை என்பது பல்வகைப் படுகின்றது. தமிழகத்து சூழலில் ஒரு வகை என்றால் தமிழகத்தைக் கடந்து அயல்நாடுகளுக்குப் புலம் பெயரும் தமிழர்களின் நிலை சில மாறுபாடுகளை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது.

மலேசியாவில் 1920லிருந்து 1940வரை ரப்பர் தோட்டங்களிலும் செம்பனை தோட்டங்களை உருவாக்கவும் தமிழகத்தின் தென் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் கப்பலில் நாகப்பட்டினம் வழியாக அழைத்து வரப்பட்டனர். நாமக்கல் பகுதியிலிருந்து வந்தவர்களில் பலர் கேரித் தீவில் தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கினர்.

அப்படி வந்தவர்களில் பலர் இன்னமும் கேரித் தீவிலேயே தங்கி வாழ்கின்றனர். இங்கு வாழும் ஒரு பெண்மணி கோயில் ஒன்றினை தமது குடும்பத்தார் உதவியுடன் அமைத்து அதற்கு தாமே பூசாரியாகவும் இருந்து செயல்படுகின்றார்.

பூசை மந்திரங்கள் ஏதும் அறியாதவர். ஆனால் காலை மாலை கோயிலை சுத்தம் செய்து பூசை செய்து வழிபாடு இந்த ஸ்ரீ ராஜமுனீஸ்வரர் ஆலயத்தில் நிகழ்வதை பார்த்துக் கொள்கின்றார். அருகாமையிலேயே அவரது இல்லமும் இருக்கின்றது.

எழுதப் படிக்கத் தெரியாதவர். ஆனால் கற்பனையிலேயே பாடல் பாடக் கூடியவர். அவரது கோயில் பூசையையும் கற்பனை திறத்தில் அவர் பாடும் மக்கள் நலன் நாட்டுப் பாடல் ஒன்றையும் காட்டும் விழியப் பதிவே இன்று வெளியிடப் படுகின்றது.


யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=9gGCE08n7O4

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Sunday, August 31, 2014

சிகாகோ தமிழ்ச்சங்க விழா

அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!
கடந்த மே மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் சிகாகோ தமிழ்ச்சங்கம் தன்னுடைய 45ஆவது ஆண்டு தொடக்க விழாவையும், சிகாகோவில் இயங்கிவரும் தமிழ்நாடு அறக்கட்டளை(TNF) தன்னுடைய 40ஆவது ஆண்டு விழாவையும் ஒன்றிணைந்து நடத்தின.
அவ்விழாவிற்கு இந்தியாவிலிருந்து அறிஞர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். திரு. லேனா தமிழ்வாணன், திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் மகுடேஸ்வரன் முதலியோர் கலந்துகொண்டும், உரையாற்றியும் சிறப்பித்தனர். அவ்விழாவில் பேசுகின்ற அரிய வாய்ப்பை என் தந்தைக்கும், எனக்கும் சிகாகோ தமிழ்ச்சங்க நண்பர்கள் அளித்திருந்தனர்.

அமெரிக்கவாழ் தமிழ் உடன்பிறப்புக்கள் பலரையும் ஒன்றாய்க் காணுகின்ற நல்வாய்ப்பை அத் தமிழ்விழா எங்களுக்கு வழங்கியது எனில் மிகையன்று!
”திரைப்படம் சார்ந்த தலைப்புக்களில் பேசுங்கள்” என்ற கோரிக்கை எங்கள்முன் வைக்கப்பட்டதால், என்ன பேசுவது? என்று ஓரிரு நாட்கள் ரூம் போட்டு(வீட்டிலேயேதான் :-)) யோசித்தோம். ”தொடக்ககாலத் தமிழ்த் திரையுலகம்” பற்றி நான் பேசுகிறேன்; ”கண்ணதாசன் பாடல்களில் இலக்கிய நயம்” குறித்து நீ பேசு” என்றார் என் தந்தை.

”சரிதான்” என்று முடிவு செய்து சிகாகோ நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து எங்கள் தலைப்புக்கள் குறித்துத் தெரிவித்தேன். ”நல்ல தலைப்புகள்!” என்று கூறிய அவர்கள் ”கண்ணதாசன் பாடல்கள் குறித்துப் பேசுவதோடு வேறு சில கவிஞர்களையும் அப்படியே தொட்டுக் காட்டிவிடுங்கள்; அத்தோடு இன்னொரு வேண்டுகோள்; திரைப்படப் பாடல் வரிகள் சிலவற்றையும் முடிந்தால் பாடிக் காட்டிவிடுங்கள்!” என்று கூறி என்னைத் திகைக்க வைத்தனர்.

”இது ஏதடா சிகாகோவிற்கு (என்னால்) வந்த சோதனை!” என்று எண்ணிக்கொண்டு, ”சரி பாடுகிறேன்(!) ஆனால் வந்திருக்கும் கூட்டம் ஓட்டம் பிடித்தால் என்னிடம் கோபித்துக்கொள்ளக் கூடாது!” என்று சொன்னேன் கவலையோடு. ”உங்கள் உரையைக் கேட்க அமர்ந்திருக்கும் மக்களை இருக்கையிலேயே கட்டிப்போட்டு விடுகிறோம்…அவர்கள் எங்கும் ஓட முடியாது….கவலையை விடுங்கள்!” என்று எனக்கு அவர்கள் தைரியம் அளித்ததன் பேரில் பாடல் வரிகள் சிலவற்றைப் பாடச் சம்மதித்தேன். :-))
இவ்வாறு பல்வேறு முன்னேற்பாடுகளுடன் நடைபெற்ற அந்தத் தமிழ்விழா உண்மையிலேயே மிகச் சிறப்பாக நடந்தேறியது என்றுதான் கூறவேண்டும். அவ்விழாவை வெற்றி விழாவாக்கிய சிகாகோ தமிழ்ச்சங்கத் தலைவர், நண்பர் திரு. சோமு, தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர், நண்பர் திரு. அறவாழி (வள்ளுவத்திலிருந்த ஈடுபாடு காரணமாக அவர் தந்தையார் வைத்த பெயராம்!) ஆகியோருக்கு இத்தருணத்தில் மீண்டும் என் நன்றிகள்!
இனி, என் தந்தையின் உரையும், என்னுரையும் அடங்கிய காணொளிகள் உங்கள் கவனத்திற்கு…

திரு.ராமமூர்த்தி

மேகலா ராமமூர்த்தி


அன்புடன்,
மேகலா

Tuesday, August 26, 2014

சென்னை அரசு அருங்காட்சியகம்

எழும்பூர் மியூஸியம் என்று எல்லோராலும் சாதாரணமாக குறிப்பிடப்படும் சென்னை அரசு அருங்காட்சியகம், ஆசிய நாடுகளின் மிகப் பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று.  இந்தியாவின் கல்கத்தா அருங்காட்சியகத்து அடுத்து இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் என்ற பெருமையையும் பெருவது இந்த அருங்காட்சியகம்.


1 மணி நேர பதிவாக இந்த விழியப் பதிவு அமைந்திருக்கின்றது. ஆக நன்கு நேரம் எடுத்துக் கொண்டு அமர்ந்து பார்த்து ரசிக்கலாம். இந்தப் பதிவில் அருங்காட்சியக கல்வித்துறை தலைவர் டாக்டர். பாலசுப்ரமணியம் மிக விரிவான விளக்கத்தை தமிழில் வழங்குகின்றார். இந்த விளக்கங்கள் குறிப்பாக

  • அருங்காட்சியகத்தின் ஆரம்ப கால நிலை
  • இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு சேகரிப்புக்கள்.
  • அருங்கலைச்சிற்பங்கள் தொகுப்பின் போது நிகழ்ந்த சிக்கல்கள்
  • இந்த அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் 
  • இங்கு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டதால் இங்கிலாந்தின் லண்டன் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்படாமல் தமிழகத்திலேயே இருக்கும் நிலை அமைந்த விஷயங்கள்
  • கால நிலைகளில் சிற்ப வடிவங்கள் - பல்லவர், சாளுக்கியர், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், நாயக்கர் கால சிற்பங்கள், தற்கால சிற்பங்கள்
  • யட்ஷி, தாந்திரீகம் பற்றிய தகவல்கள்
  • வெங்கலச் சிலை செய்யப்படும் விதம்
  • வெங்கலச் சிற்பங்கள் சேகரிப்புக்கூடம்
  • சைவம், வைஷ்ணவம் வெண்கலச் சிலைகளின் கூடம்
  • காசுகள், சின்னங்கள்
  • சிலைகள் பஞ்ச லோகத்தில் சிலை செய்யப்படுவதன் காரணம்

ஆகிய விஷயங்கள் பேசப்படுகின்றன.


யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=2c01fmD1d88&feature=youtu.be




அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

நெல்லூர் ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் கோயில்

ஆந்திர மாநிலத்திலிருக்கும் நெல்லூர் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட வைணவத்தலம். 11ம் நூற்றாண்டில் ஸ்ரீராமானுஜ மாமுனி ஏற்படுத்திய கோயில் முறைமைகளை இன்றளவும் கடைப்பிடிக்கும் கோயில் இது. ஆந்திர மாநிலத்தில் அமைந்தாலும் இக்கோயிலில் செந்தமிழ்ப் பாசுரம் கருவறையில் ஒலிக்கிறது, இராப்பத்து, பகல் பத்து உற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆழ்வார் பாசுரங்களை இமயம்வரை ஒலிக்கச் செய்த எம்பெருமானார் நினைவு போற்றுதற்குரியது.

Thursday, August 14, 2014

First audio London Internet TV - மகரந்த சிதரல்கள் பேட்டி









Wednesday, August 6, 2014

குன்னண்டார் குடைவரை கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

தமிழ் நாட்டின் கோயிற்கலையில் பிரமிக்க வைக்கும் தன்மையுடையன குடைவரை கோயில்கள். அந்த வரிசையில் இன்றைய வெளியீடாக மலர்வது புதுக்கோட்டைக்கு 35 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் குன்னண்டார் கோயில்.


பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு,  பின்னர் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தின் வரலாறுகளையும் கொண்டு, முத்தரையர்களின் ஆட்சியிலும் இருந்து பின்னர் நாயக்க மன்னர்களின் காலத்தில் மேலும் விரிவடைந்த ஒரு கோயில் இது. ஆலயத்தின் மூர்த்தி திருக்குன்றக்குடி மாதேவர் அல்லது திருக்குன்றக்குடி நாயனார் என்ற குறிப்பு இந்த ஆலயத்தில் உள்ள ராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கின்றது. இக்கோயிலுக்குத் தேவரடியார்கள் செய்த தொண்டுகளை விவரிக்கும் கல்வெட்டுக்களும் இக்கோயிலின் பல பகுதிகளிலும் மண்டபத்திலும் இடம் பெருகின்றன.

கோயில் முழுமைக்கும் 37 கல்வெட்டுக்கள் பல்வேறு காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை.

விழியப் பதிவைக் காண:   

யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=BeuNSWcvVT0&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 8 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Wednesday, July 16, 2014

இந்தோனீசியாவில் தொன்மையானதொரு இந்துக்கோயில்

சமீபத்தில் நடந்த தினமணிக் கருத்தரங்களிலும், பிற சமயங்களிலும் நான் தொடர்ந்து சொல்லிவரும் கருத்து இந்தியா தன் கூர்மையான பார்வையை கிழக்கு நோக்கித் திருப்ப வேண்டும் என்பதே!

தமிழனின் சரிதம் ஆழப்பதிந்த இடம் தென்னாசியா. அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மில் அதிர்வலைகளை உருவாக்க வேண்டும்.

ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இந்துக் கோயில் இந்தோனீசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நூலகம் கட்ட மண்ணைத்தோண்டியபோது ஒரு முழுக்கோயிலே புதையுண்டு கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது!

Hindu Temple in Indonesia

இங்கு சோழர்களின் கைரேகை எவ்வளவு உள்ளது என்று நம் ஆய்வாளர்கள் அங்கு போய் ஆய்ந்து சொல்ல வேண்டும். தமிழக அரசு விரைவில் தென்னாசிய, தூரக்கிழக்கு ஆசிய ஆய்வு மையத்தைத் தொடங்கி இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

மலேசியா போல் இல்லாமல், இந்தோனீசிய அரசு தனது இந்துத்தொன்மையை மறைப்பதில்லை. 10 நூற்றாண்டில் கொற்கை தொடங்கி வியட்நாம்வரை ஒரு மாபெரும் இந்துப் பரப்பு இருந்திருக்கிறது! அதன் பல்வேறு கூறுகள் பற்றி நாம் அறிந்து கொள்ள இத்தகைய ஆய்வுகள் அவசியம்.