Friday, February 26, 2016

கழிஞ்சமலை சமணர் சின்னமும் கல்வெட்டுக்களும்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


​மதுரைக்கு அருகே அரிட்டாபட்டி என அழைக்கப்படும் ஒரு பகுதியில் இளமைநாயகிபுரம் எனும் ஒரு சிற்றூரில் இருக்கும் கழிஞ்சமலை ​மலைப்பகுதியில் இரண்டு தமிழி கல்வெட்டுக்களும், 10ம் நூற்றாண்டு சமணப் பாறைச் சிற்பமும் அதன் கீழ் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளன.

1971ம் ஆண்டில்  பேராசிரியர். கே.வி.ராமன்,  டாக்டர்.​சுப்பராயலு இருவரும் முதல் தமிழி கல்வெட்டினையும் வட்டெழுத்துக் கல்வெட்டினையும் கண்டுபிடித்தனர். அதன் பின்னர் 2003ம் ஆண்டில் ஆய்வாளர்கள் பொ.ராசேந்திரன், சொ.சாந்தலிங்கம் ஆகியோர் இரண்டாவது தமிழி கல்வெட்டினைக் கண்டுபிடித்தனர்.

​இங்கிருக்கும் இரண்டு தமிழி கல்வெட்டுக்களும் கி.மு 3ம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

அதற்கு அடுத்தார்போல சமண தீர்த்தங்கரர் சிற்பமும் வட்டெழுத்தும் பக்திகாலத்திற்க்குப்பின்னர் அதாவது 9, 10ம் நூற்றாண்டில் மீண்டும் சமணம் எழுச்சி பெற்ற காலத்தில் ​பொறிக்கப்பட்டது. சமண மறுமலர்ச்சியை மீண்டும் உண்டாக்கிய ​அச்சணந்தி முனிவர் ​இந்த தீர்த்தங்கரர் உருவத்தை செதுக்க வைத்து அதன் கீழ் இந்தக் கல்வெட்டுனைப் பொறிக்கச் செய்திருக்கின்றார்.  அச்சநந்தி செய்வித்த திருமேனி என்ற குறிப்பும் இந்த மலையின் பெயர் திருப்பிணையன் மலை,  ஊரின் பெயர் பாதிரிக்குடி ஆகிய தகவல்களும் கல்வெட்டாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் வட்டெழுத்து என்பது  தமிழ் பிராமியிலிருந்து (தமிழி) கி.பி3ம் நூற்றாண்டுக்குப் பின்னர் கி.பி 13ம் நூற்றாண்டு வரை   பாண்டிய நாட்டில் மிக அதிகமாக வழக்கில் இருந்தது. ஆனால் சோழர் ஆட்சியில்  தமிழ் எழுத்துக்கள் படிப்படியாக முக்கியத்துவம் பெற்று வளர இந்த வட்டெழுத்து எழுத்து வடிவமோ கேரளப்பகுதியில் பயன்பாட்டில் விரிவடைந்து கிரந்தத்தோடு கலந்து மளையாளமாக உருவெடுத்தது என்ற குறிப்பினை இப்பதிவில் கேட்கலாம்.

தற்சமயம் சமணப் பண்பாட்டு மையம் ஒன்று மதுரையில் உருவாக்கப்பட்டு செயல்படுவதையும், தமிழகத்தின் வட பகுதியிலிருந்து தமிழ்ச்சமணர்கள் மதுரைக்கு  வருவதையும் தங்கள் சமயத்தின் தாயகமாக இவர்கள் மதுரையைக் கருதுவதையும் இப்பதிவில் டாக்டர்.சாந்தலிங்கம் குறிப்பிடுகின்றார்.

ஏறக்குறைய 11 நிமிடப்  பதிவு இது. மிக விரிவாக டாக்டர்.சொ.சொக்கலிங்கம் அவர்கள் கழிஞ்சமலை கல்வெட்டுக்களின் காலம், அதன் சிறப்புக்கள் ஆய்வுகள் என தகவல்கள் வழங்குகின்றார்.

இங்குள்ள தமிழி கல்வெட்டுக்களின் இக்காலத் தமிழ் வடிவம்:
1.
நெல்வெளிஇய் சிழிவன் அதினன் வெளியன் முழாகை
கொடுபிதோன்

2.
இலஞ்சிய் எளம் பேரா அதன் மகன் எமயவன்
இவ்முழ உகைய் கொடுபிதவன்

சிற்பத்தின் கீழ் இருக்கும் வட்டெழுத்து தரும் செய்தி
ஸ்ரீ திருபிணையன் மலை
பொற்கோட்டு கரணத்தார் பேரால்
அச்சணந்தி செய்வித்த திருமேனி
பாதிரிக்குடியார் ரஷை

(கல்வெட்டு குறிப்பு:  மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்)

விழியப் பதிவைக் காண:  
யூடியூபில் காண:    

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்த  தமிழ் கல்வெட்டுக்கள்  பதிவை செய்ய உதவிய நண்பர்கள் மதுமிதா, டாக்டர்.மலர்விழி மங்கை, டாக்டர்.ரேணுகா, டாக்டர்.சொ.சாந்தலிங்கம் ஆகியோருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் மனமார்ந்த நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Sunday, February 14, 2016

மாங்குளம் தமிழி கல்வெட்டுக்கள்.

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


மாங்குளம் தமிழி கல்வெட்டுக்கள்

தமிழகச் சிற்பிகளும் கல்வெட்டுக் கலைஞர்களும் தமிழ் மண்ணில் விட்டுச் சென்றிருக்கும் சான்றுகள் தமிழ் தொடர்பான ஆய்வுகளுக்கு மிக முக்கியமானவையாகத் திகழ்பவை. கி.மு 6 என்ற கால நிலையிலேயே கல்வெட்டு பொறிக்கும் திறன் பெற்றோராகத் தமிழர் தொழிற்கலை அறிவு பெற்றிருந்தார்கள் என்பதற்கு இது சான்றாக அமைவது  என்பதோடு இக்காலத்திற்கு முன்பே தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது பேச்சு, வடிவம், இலக்கணம் என்ற வகையில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு மிக நல்ல சான்றாகவும் அமைகின்றது.

கி.மு.5ம் நூற்றாண்டு வாக்கில் மதுரை  நகரைச் சுற்றியுள்ள குன்றுகளில்  பல சமண முனிவர்கள் தங்கியிருந்தமைக்கானச் சான்றுகளை  இன்றும் பாறைகளில் உள்ள படுக்கைகள், தொல் தமிழ் எழுத்துக்கள் என்பனவற்றிலிருந்து அறியமுடிகின்றது.  இம்முனிவர்களை அச்சயமம் பாண்டி நாட்டை ஆண்ட பாண்டிய மன்னர்கள் ஆதரித்து, இவர்கள் தங்கவும் பள்ளிகள் அமைத்து கல்விச்சேவை புரியவும் உதவி இருக்கின்றனர்.  பொருள் வளம் மிக்க வணிகப்பெருமக்களும்  சமண முனிவர்கள் குன்றுகளின் பாறைப்பகுதிகளில் தங்கியிருக்க  வசதியை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர். அத்தகைய செய்திகளை இப்பாறைகளில் வடிக்கப்பட்டுள்ள தொல் தமிழ் எழுத்துக்களின் வழி அறிந்து  கொள்ள முடிகின்றது.

மாங்குளம், மதுரையிலிருந்து ஏறக்குறைய 20கிமீ.தூரத்தில் இருக்கும் ஊர். ரோவர்ட் சீவல் என்பவர் தாம் 1882ம் ஆண்டில் இங்கிருக்கும் மாங்குளம் கல்வெட்டுக்களைக் கண்டறிந்தவர் என்ற சிறப்பினைப் பெறுபவர். கல்லில் பொறித்த எழுத்துக்களைப் பார்த்து இவை என்ன குறியீடுகளோ என்று அவர் யோசித்திருக்கக்கூடும். ஆயினும் இவை என்ன எழுத்துக்கள் என்பது கடந்த நூற்றாண்டில் தான் உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கிடைக்கக்கூடிய சமண நெறி சார்ந்த  கல்வெட்டுக்களிலேயே இந்த மாங்குளம் கல்வெட்டுக்கள் தாம் மிகப்பழமையானவை என்ற சிறப்பைப் பெறுபவை.

இம்மலையில் ஐந்து குகைப்பகுதிகள் உள்ளன. சற்றே தூரத்தில் இடைவெளி விட்டு இவை அமைந்திருக்கின்றன. கற்படுக்கைகள்  உள்ள பகுதிகளில்  மழை நீர் வடிய உருவாக்கப்படும் காடி வெட்டப்பட்டுள்ளது. அதன் கீழே அல்லது அருகாமையில் கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டுள்ளன. 

நெடுஞ்செழியன் என்ற சங்ககால பாண்டிய மன்னனின் பெயர் இங்குள்ள கல்வெட்டுக்களில் இருமுறை குறிப்பிடப்படுகின்றன.  அதோடு செழியன், வழுதி என்ற பாண்டிய குடிப் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இங்குள்ள கல்வெட்டுக்கள்:

1.
கணிய் நந்தஅ ஸிரிய்இ குவ் அன்கேதம்மம் இத்தாஅ
நெடுஞ்செழியன் பண அன் கடல் அன் வழுத்திப்
கொட்டு பித்தஅ பளிஇய்

2. 
கணிய் நத்திய் கொடிய் அவன்

3. 
கணிய் நந்தஸிரிய் குஅன்தமம் ஈதா நெடுஞ்செழியன்
ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇயபளிய்

4.
கணி இ நதஸிரிய்குவ(ன்) வெள் அறைய் நிகமது காவிதிஇய்
காழிதிக அந்தை அஸீதன் பிணஉ கொடுபிதோன்

5.
சந்தரிதன் கொடுபிதோன்

6.
வெள்அறை நிகமதோர் கொடி ஓர்

(குறிப்பு: பாண்டிய நாட்டு வரலாற்று மைய வெளியீடான  மாமதுரை (ஆசிரியர்கள்- பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம்) என்ற நூலில் உள்ள குறிப்பு மேலே வழங்கப்பட்டுள்ளன.)


தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத எழுத்தும் கலந்த நிலையில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்தின் சிறப்பு எனச் சொல்லப்படும் எழுத்து வெட்டப்பட்ட பழமையான கல்வெட்டு இவைதாம் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றே. 

இப்பகுதியில் 2007ம் ஆண்டில் தமிழக தொல்லியல் துறையினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் செங்கற்களினால் உருவாக்கப்பட்ட கட்டிட கட்டுமானப் பகுதி ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில்  கூறைகளுடன் கூடிய அமைப்பாக இது உருவாக்கப்பட்டமை அறியப்பட்டது. கூறைகளுக்கு இடையே மரத்துளைகள் உருவாக்கி அதனை மரச்சட்டங்களை வைத்து இணைத்து இரும்பினால் ஆன ஆணியை கொண்டு இணைத்து இக்கூறைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். இங்கு கிடைத்த வெவேறு அளவிலான பழங்கால ஆணிகள் இதனை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த மாங்குளம் கல்வெட்டுப் பகுதி இன்று தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் சின்னமாக இருக்கின்றது. மேலே பாறைக்குச் செல்லும் பாதைகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் படுக்கைகள் இருக்கும் பகுதிகளில் இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் பெயர்களை எழுதி,இப்புராதனச் சின்னங்களை சிதைத்து வருகின்றனர் என்பது வேதனைக்குறிய விடயம். 
அருகாமையில் இருக்கும் குடியானவர்களின் ஆடுகள் இப்பகுதியில் மேய்வதால் ஆட்டுப்புழுக்கைகள் நடைபாதையெங்கும் நிறைந்து கிடக்கின்றன.

இப்பகுதியை  சுத்தம் செய்து பாதுகாக்கும் முயற்சி மிக அவசியம்.


ஏறக்குறைய 20 நிமிடப்  பதிவு இது. மிக விரிவாக டாக்டர்.சொ.சொக்கலிங்கம் அவர்கள் மாங்குளம் கல்வெட்டுக்களின் காலம், அதன் சிறப்புக்கள் ஆய்வுகள் என தகவல்கள் வழங்குகின்றார்.


யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=2uH2fyvkLlo&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Monday, November 30, 2015

தமிழகத்திலிருந்து மலேசியா வரை..

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

மலேசியாவிலிருந்து தமிழகம் வரை....
.....நீண்ட பயணத்தின் சுவடுகள்.....


மலேசிய நிலப்பகுதிக்கான தமிழர்களின் புலம்பெயர்வு என்பது பன்னெடுங்காலமாக நிகழ்வது.  2000 ஆண்டுகளுக்கு முன்னான கடல் வணிகம், அதனோடு சேர்ந்த மதம் பரப்புதல் போன்றவை மலேசிய தீபகற்பத்தில் முக்கியத்தடங்களைப் பதித்துள்ளன. 15ம் நூற்றாண்டு வாக்கில் மலாக்கா துறைமுகம் உலக அளவில் கடல் வணிகத்திற்குப் புகழ் பெற்ற பகுதியாக விளங்கிய சமயத்தில் மலாக்கா வந்த தமிழ் வணிகர்கள் பலர் உள்ளூர் மலாய் பெண்களை மணந்து இங்கேயே தங்கி விட மலாக்கா செட்டிகள் என்ற புதிய சமுதாயம் ஒன்று உருவாகியது.  இப்படி பல தொடர்ச்சியான நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

அதில் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னான புலம்பெயர்வு என்பது முக்கியம் வாய்ந்த ஒன்றாக அமைகின்றது.  இந்த விழியப்பதிவு தமிழர்களின் இந்தப் புலம்பெயர்வையும் இக்காலச் சூழலில் மலேசியத் தமிழர்களின் நிலையை விளக்குவதாகவும் உள்ளது.

ஏறக்குறைய 16 நிமிடப்  பதிவு இது.


யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=YZmDynmCu50&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Tuesday, November 17, 2015

சீகன்பால்கின் தமிழ் ஆவணங்கள் - டாக்டர். டேனியல் ஜெயராஜ்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.



தரங்கம்பாடி எனும் பெயரைக் கேட்டால் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிகள் பற்றியும் அதன் தொடர்பில் 18ம் நூற்றாண்டு தொடங்கி தமிழகம் வந்த ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களைப் பற்றிய சிந்தனையும் தோன்றும்.

ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த லூத்தரன் பாதிரிமார்களில் சீகன்பால்க் தனிச் சிறப்பு பெறுபவர். இவரது ஆவணங்களை ஆய்வு செய்தவரும் ஜெர்மனியின் ஹாலெ நிறுவனத்தில் உள்ள தமிழ் நூல்களையும் கையெழுத்துச் சுவடிகளையும் காட்டலோகிங் செய்தவருமான டாக்டர். டேனியல் ஜெயராஜின் பேட்டி இது.

இப்பேட்டியில் டாக்டர்.டேனியல் ஜெயராஜ் அவர்கள் சீகன்பால்க் தமிழ் கற்ற விதம், அவரது தமிழ் மொழி பயற்சிக்கு உதவிய தமிழ் மக்கள், அவரது கையெழுத்து ஆவணங்கள், அவற்றைப் பற்றிய இவரது ஆய்வுகளும் நூல்களும் என்ற வகையில் விரிவான விளக்கத்தை வழங்குகின்றார்.

இதில் முகியமாக சீகன்பால்கின் Genealogy of Malabarian Gods  நூலின் உள்ளடக்கம், அவை பற்றிய விளக்கம், சீகன்பால்க் தயாரித்த இலக்கண நூல்கள் ஆகியன பற்றியும், அவை தொடர்பாக தான் எழுதியிருக்கும் 13 நூல்களைப் பற்றியும் எடுத்துரைக்கின்றார்.

டாக்டர். டேனியல் ஜெயராஜ் தற்சமயம் இங்கிலாந்தின் லிவர்ப்பூல் நகரில் உள்ள லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துவ மத தத்துவத்துவத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.



ஐரோப்பாவில் கோப்பன்ஹாகனின் ஆர்க்கைவிலும், ஜெர்மனியின் ஹாலே ப்ராங்கன் நிறுவனத்திலும் இருக்கும் லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்து ஆவணங்களை ஆராய்ச்சி செய்வ்தன் மூலம் இன்றைக்கு ஏறக்குரைய 300 ஆண்டுகளுக்கு முந்தய தமிழக சமூஅக் சூழலையும் மொழியியல் சூழலையும் நன்கு அறிந்து கொள்ள முடியும் என்ற கருத்தை முன் வைக்கின்றார்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கமாக அமைவது இவ்வகை ஆய்வுகள் பல்கலைக்கழகங்களாலும் அரசினாலும் முன்னெடுத்து செய்யப்பட வேண்டும் என்பதே. அயல்நாடுகளில் இருக்கும் தமிழ் நிலத்தின் வரலாறு சொல்லும் தரவுகளை மின்னாக்கம் செய்வதும் அவற்றை வாசிப்புக்கு உட்படுத்தி ஆய்வு மாணவர்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து அவற்றை பதிப்பிக்க வைத்து சீரிய ஆய்வினைத் தொடங்க வேண்டியதும் காலத்தின் அவசியம். இத்துறைகளில்  ஆய்வுகள் பெருக தமிழக அரசும் பல்கலைக்கழகங்கலும் முன் வரவேண்டும் என்ற கோரிக்கையை இந்த வெளியீட்டின் வழி தமிழ் மரபு அறக்கட்டளை முன் வைக்கின்றது.

ஏறக்குறைய 20 நிமிடப்  பதிவு இது.

யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=h6YGU6jOd3U&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Saturday, November 7, 2015

கோலாட்டம் - தமிழர் பாரம்பரிய நடனம் (பாரீஸ் 2015)

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


தமிழர் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கோலாட்டம் தமிழ் மக்கள் பாரம்பரிய விழாக்களில் ஆடப்படும் ஒரு பழமையான நடனம்.
அண்மையில் ஐரோப்பாவில் (பாரீஸ் நகரில்) நடைபெற்று முடிந்த ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மானாட்டில் மாலை நேர நிகழ்வாக இது அமைந்தது. ப்ரான்சு நாட்டின் பாரீஸ் நகரத்தில் வாழும் தமிழ் மக்களின் இளம் தலைமுறை பெண்கள் இந்த கண்கவரும் நடனத்தை வழங்கினர்.

ஏறக்குறைய  7 நிமிடப்  பதிவு இது.

விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Thursday, October 29, 2015

மண்ணின் குரல்: அக்டோபர் 2015: திருநணா - பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்




வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


"ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மி. தொலைவிலும், சேலத்திலிருந்து 56 கி.மி. தொலைவிலும், பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. . அருகில் உள்ள ரயில் நிலயம் ஈரோடு. சேலம் மற்றும் ஈரோட்டிலிருந்து பேருந்து வசதியும் உண்டு.

திருஞானசம்பந்தப் பெருமான், அருணகிரிநாதர் போன்ற சான்றோர்களால் பாடல் பெற்றத் தலமான, திருநணா எனப்படும் பவானி சங்கமேசுவரர் ஆலயம், சுயம்பு மூர்த்தியாக உருவான சங்கமேசுவரப் பெருமான் உறையும் பழம்பெரும் ஆலயம். காவிரி, பவானி, அமிர்தநதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப் பெறும் இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளதால் இத்திருத்தலத்திற்கு சங்கமேசுவரர் ஆலயம் என்ற பெயர் பெற்றது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாகவும், இரண்டு வாயில்கள் உள்ளதாகவும் அமைந்துள்ளது. வேதங்களுக்கெல்லாம் தலைவியாக விளங்குவதாலும், சதுர் வேதங்களால் பூசை செய்யப் பெற்றதாலும் அம்பாள் வேதநாயகி என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தட்சிண அளகை,தட்சிண கைலாயம், கட்சிணப் பிரயாகை போன்ற சிறப்புப் பெயர்களுடன், மூன்று நதிகளும் கூடுவதால் முக்கூடல் , கூடுதுறை என்றும், பராசர முனிவரால் வழிபடப்பட்டதால் பராசர தலம் என்றும், குபேரனால் வழிபடப்பட்டதால் குபேரபுரி என்றும் வக்கிராசுரன் இறைவனை வழிபட்டதால் வக்கிரபுரி என்றும், விஜய அரசரால் வழிபடப்பட்டதால் விசயபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

வேதகிரி (ஊராட்சிக் கோட்டை மலை), சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோட்டு மலை), மங்களகிரி (பெருமாள் மலை), பதுமகிரி ஆகிய இம்மலைகளுக்கிடையே “பவானி” திருத்தலம் அமைந்துள்ளதால் “பஞ்சகிரி மத்திய பிரதேசம்” என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே ராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் “சேத்திர சங்கமம்” என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகசுவரலிங்கேசுவரர் மற்றும் காயத்ரி லிங்கேசுவரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கிணைந்து உள்ளதால் “மூர்த்தி சங்கமம்” என்றும் வழங்கப்படுகிறது."
-பவளசங்கரி - திருநணா (பவானி)

ஏறக்குறைய 30 நிமிடப்  பதிவு இது.

விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:  

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Saturday, October 24, 2015

மண்ணின் குரல்: அக்டோபர் 2015: இலங்கை தமிழ் நாட்டுக் கூத்து


வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


இலங்கையின் பிரதேச ரீதியான நாட்டுக் கூத்து பல பாணிகளைக் கொண்டது.

  • மட்டக்களப்பு மரபில் வடமோடி தென்மோடி, மகுடிக் கூத்து, வாசாப்பு, வசந்தன்கூத்து ஆகியவை உள்ளன.
  • யாழ்ப்பாணப்பிரதேசத்தில் வடமோடி தென்மோடி, கத்தோலிக்கப் பாங்கு, வசந்தன்கூத்து..
அதுமட்டுமன்று
  • வட்டுக் கோட்டை மரபு
  • காத்தவராயன் மரபு என்பனவும் ..
  • மன்னார் பிரதேசத்தில் வடபாங்கு தென்பாங்கு, மாதோட்டப்பாங்கு, கத்தோலிக்க மரபு, வாசாப்பு என்பன..
  • முல்லைத்தீவு பிரதேசத்தில் முல்லைத்தீவு பாங்கு - கண்ணகி கூத்து, கோவலன் கூத்து ஆகியன முக்கியமாக அமைந்திருக்கின்றன..
  • வன்னிப்பிரதேசத்தில் காத்தவராயன் கூத்து
  • மலையகத்தில் அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர், காமன் கூத்து..

இப்படி
பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபடுகின்றது இலங்கைத் தமிழர் கூத்துக்கலை மரபின் பாணி.

இதனை விளக்கி ஆடிக்காட்டுகின்றனர் லண்டன் நகரில் Tamil Theatre & Visual Arts நிறுனத்தினரின் இயக்குனர்களான ரஜிதா சாம், சாம் ப்ரதீபன் தம்பதியர்.

இந்தக்கூத்து நிகழ்ச்சி கடந்த 10.10.2015 பாரீஸ் நகரிஸ் நடைபெற்ற ஐரோப்பிய தமிழ் மாநட்டில் இடம்பெற்ற நிகழ்ச்சியாகும்

35 நிமிட விழியப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=_uQaYGuqqBc&feature=youtu.be

இப்பதிவில் பிரதேச ரீதியாக உள்ள வேறுபாட்டினை  விவரிக்கும் விதமாக
கட்டியக்காரன் தன்னுடைய பாத்திரப் படைப்பை விளக்கும் வகயில் தொடங்கப்படுகின்றது.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Tuesday, October 13, 2015

பேரா.டாக்டர்.யாரோச்லாவ் வாட்சேக் பேட்டி (Tamil)

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

ஐரோப்பாவின் செக் ரிப்பப்ளிக் நாட்டின் தலைநகரான ப்ராக்-ல் அமைந்துள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயங்கும் தென்கிழக்காசிய, மத்திய கிழக்காசியத்துறையின் தலைவராகப் பணிபுரிந்து தற்சமயம் அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். யாரோச்லாவ் வாட்சேக் அவர்களுடனான பேட்டியை இன்று வெளியிடுவதில் மகிழ்கின்றேன்.

ஐரோப்பாவில் தமிழ் ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படும் ஒரு பல்கலைக்கழகம் இது என்ற பெறுமையையும் இந்தப் பல்கலைக்கழகம் பெறுகின்றது.
தமிழும் சமஸ்கிருதமும் கற்றுக் கொடுப்பதோடு பணி காரணமாக மங்கோலிய மொழியையும் கற்றுக்கொண்டு போதிக்க வேண்டிய சூழ்னிலை காரணத்தால் மங்கோலிய மொழியைக் கற்றுக் கொண்ட இவர் மங்கோலிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு இருக்கின்றது என்ற வகையில் தமது ஆய்வினை கொண்டு செல்கின்றார்.

மிக எளிய வகையில் தமிழ் மொழியில் உரையாடக் கூடிய திறனும் பெற்றவர் இவர்.  அவரை கடந்த 11.10.2015 அன்று பாரீஸ் நகரில் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒரு பேட்டி பதிவு செய்டிருந்தேன்.

ஏறக்குறைய 15 நிமிடப் பதிவு இது.


யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=Ili0mii42U8&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Thursday, October 8, 2015

மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜினாலயம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


தமிழகத்தின் செஞ்சி வட்டம் வல்லம் அருகில் உள்ள மேல்சித்தாமூர் சமண சமயத்தின் தலைமை ஊராக இருந்து வருகின்றது. இங்குள்ள சமண மடம் ஜினகாஞ்சி மடம் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் பழைய சமணப்பள்ளிகளும் கோயில்களும் உள்ளன.

பகவான் பார்சுவநாதர் இக்கோயிலின் மூலவர்.  மடத்தோடு இணைந்தவடிவில் அதன் பக்கவாட்டில்  அமைந்திருக்கின்றது இந்த ஆலயம். கிரந்தத்தில் அமைந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஆலயத்தின் முகப்புப் பகுதியில் அமைந்துள்ளன.


இக்கோயிலில் இடது புறத்தில் நின்ற கோலத்தில் மாதவிக் கொடி கால்களை படர்ந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாகுபலி சிற்பம் உள்ளது.

கோயிலின் ஒரு பக்கத்தில் இருக்கும் தனி அறையில்   கருங்கற்களால் செய்யப்பட்ட சமணப் பெரியோர்களின் பாதச்சுவடுகள் உள்ளன. அதன் அருகில் சமண ஐயனார் உருவச் சிலையும் உள்ளது. இது மிகப் பழமையான ஒரு சிற்பம்.

இங்கு ஒரு தனிப்பகுதியில் சாந்தி நாத தீர்த்தங்கரரின் சிற்பமும் உள்ளது.  சாந்தி நாத தீர்த்தங்கரர் சிற்பத்தின் அடிப்பகுதியில் அவரது சின்னமாகிய மான் வடிவத்தையும் காணலாம்..

இக்கோயிலின் ஒரு தனிப்பகுதியில் ஞ்வாலாமாலினி இயக்கி, பத்மாவதி இயக்கி,  ஸ்ரீஜினவானி அல்லது சரஸ்வதி , ஸ்ரீ கணதரர், பிரம்மதேவர் ஆகியோருக்குத் தனி சன்னிதிகளும் உள்ளன.

கோயிலின் வெளிப்புறத்தில் கல் தேர் ஒன்று உள்ளது. இது தேர் போன்ற வடிவத்தை ஒத்தது. இந்தத் தேரை இழுத்து வரும் யானை வடிவம் கற்பாறையில் செய்யப்பட்டது.  இந்த யானையின் வடிவம் மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் உள்ள மணிகளும் உடலின் ஒவ்வொரு பகுதிகளும் கை தேர்ந்த சிற்பக் கலைஞர்களது ஆற்றலை வெளிபடுத்தும் வகையில் உள்ளன.

ஏறக்குறைய 10 நிமிடப் நேரப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=Y9zTw7fcDLs&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Sunday, October 4, 2015

அக்டோபர் 2015: திரு.மாவை சேனாதிராஜாவுடனான பேட்டி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழ் மக்களிடையே வரவேற்பைப் பெற்று தற்சமயம் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகின்றது. இந்தத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் துணைத்தலைவரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், இலங்கை பாராளுமன்றத்தின் பதில் எதிர்கட்சித் தலைவருமான மதிப்புமிகு திருவாளர் மாவை சேனாதிராஜா அவர்களுடனான பேட்டி இன்று வெளியீடு காண்கின்றது.

இந்தப் பேட்டியில் திருவாளர் மாவை சேனாதிராஜா அவர்கள்
இலங்கைத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த இலங்கைக்கும் நன்மையைத் தரும் வகையில் அமைந்திருக்கின்றதா?
செப்ட் 28 தொடங்கி நடைபெற்ற ஐ.நா மனித உரிமை தீர்மானம் தொடர்பான முடிவுகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நன்மை வழங்கக்கூடிய வகையில் அமையுமா?
தற்சமயம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உடனடி தேவை எவை ?
எவ்வகையில் புணரமைப்பு, மக்கள் மறுவாழ்வு, மீள்குடியேற்றம் ஆகியன மேற்கொள்ளப்பட வேண்டும்?
.. ஆகிய விடயங்கள் தொடர்பாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.


ஏறக்குறைய 50 நிமிடப் நேரப் பதிவு இது.


யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=2h0eRNRixlU&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​