Sunday, September 25, 2016

குறத்தியாறும் குறத்தி அம்மனும்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

தமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூரிலும் எத்தனை எத்தனையோ  கோயில்கள். அவற்றுள் பல, மக்களோடு மக்களாக  வாழ்ந்து ஏதாவது ஒரு வகையில் மக்கள் மனத்தில் நிலைத்து  நிற்பவர்களால் எழுப்பப்படுபவையாக இருக்கின்றன. கடவுள்கள் நித்தம் நித்தம் உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். அந்தக் கடவுளர்களுக்குப் புராணக் கதைகளும் இணைந்தே அமைந்துவிடுகின்றன.  

எத்தனை எத்தனை கதை சொல்லிகள் இந்த உலகில் தோன்றி மறைந்து விட்டார்கள். ஒரு மையப் புள்ளியை வைத்து தனது கற்பனைத்திறனைக் கொண்டு ஒரு உலகத்தையே படைத்து விடும் திறன் கொண்டவர்கள் தான் கதை  சொல்லிகள்.   கதைகளை  சிருஷ்டிப்பவர்கள்  மறைந்து விட்டாலும் கூட சொன்னவர்கள் சொல்லிச் சென்ற கதைகள் மேலும் தன்னை வியாபித்துக் கொண்டு,  சலிக்காமல் ஆனால் இன்னும் வெவ்வேறு இணைக்கதைகளையும் உட்புகுத்திக் கொண்டு வளர்ந்து வருவதைத்தான் உலகம் முழுவதும் காண்கின்றோம்.

உலகப் பெரும் நாகரிகங்க​ள் ​அனைத்திலும் ​​என்ணற்​ற​ ​புராணக்கதைகள் ​ தோன்றின​.​ ​ இந்திய சூழலில் மட்டுமல்ல. மெசபட்டோமிய, அசிரிய, எகிப்திய, சுமேரிய, கிரேக்க, ரோமானிய, கெல்ட்​ என பழமைவாய்ந்த​ ​ பல்வேறு பண்டைய ​சமூகத்தி​லும் புராணக்கதைகள் தவிர்க்கப்படமுடியாதனவாக இருக்கின்றன. ​பொதுவாகவே புராணக்கதைகள்​ என்பன​ மனிதர்களை மையக் கதாமாந்தர்களாகக் கொண்டனவாக இருந்தாலும் அதில் முக்கியத்துவம் பெறுவதாக அமைவது மாயாஜாலங்கள் தாம். புராணங்கள் வழி புதுப்புது கடவுளர்கள் படைக்கப்பட்டார்கள். படைக்கப்பட்ட கடவுளர்களுக்கு உருவங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்குத் தனித்தனி தன்மைகள் வழங்கப்பட்டன. புராணங்களில் படைக்கப்பட்ட அக்கடவுளர்களிலேயே நல்லவர்களும் இருந்தார்கள், தீமை செய்யும் அசுரர்களும் இருந்தார்கள்.

​அது மட்டுமல்ல. ​புராண அவதாரங்கள்​.​ சில வேளைகளில் தவறுகள் செய்து, அதனால் அவர்கள் தண்டனை பெறப்படும் நிகழ்வுகளையும் கதை சொல்லிகள் புராணங்களில் சேர்த்துக் கொண்டார்கள்.  தவறுகள் செய்வது, தண்டனை பெறுவது அல்லது சாபம் பெறுவது, பின்னர் பெற்ற சாபத்திலிருந்து மீள்வதற்காகப் பிராயச்சித்தம் செய்வது, பின்னர் அப்புராண கதாமந்தர்கள் தங்கள் செயல்களால் கடவுளர்களாக மக்கள் மனதில் நிலைபெறுவது​,​ என்ப​ன வழி வழியாக உலகம் முழுவதும் எல்லா நாகரிகங்களிளும் நிகழ்ந்திருக்கின்றது.

மனிதரின் கற்பனைக்கு  எல்லை இல்லை. யாராலும் தடை செய்ய இயலாத,  அசுர சக்தி ஒரு தனி மனிதரின் கற்பனைக்கு உண்டு. அதற்குச் சுதந்திரம் கொடுத்து கற்பனையை வளர விட்டால் அது  இயற்கையில் இல்லாதவையை இருப்பதாக்கிக் காட்டும். கதைசொல்லிகள் என்போர் காலம் காலமாகச் சொல்லிய  கதைகளால் தான் சமயங்கள் வளர்ந்தன; கருத்துருவாக்கங்கள் வளர்ந்தன. கதைகளை நம்புவோரும் இருந்தனர்; அதே வேளை கதைகள் தோற்றுவிக்கும் மாய ஜாலத்தை எதிர்த்துப் போராடும் எதிர்மறை கருத்து சித்தாந்தகளும் பிறந்தன.​

தமிழக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஏராளமான புனைக்கதைகளையும், புராணங்களையும் தன்னிடத்தே கொண்ட வளமானதொரு களம். தமிழகத்தின் ஒவ்வொரு கிராமமும் தன்னிடத்தே ஆயிரமாயிரம் கதைகளைப் புதைத்து வைத்திருக்கின்றது. காலங்காலமாக மக்கள் சொல்லி வரும் கதைகள் சில வேலைகளில் அச்சு அசல் மாறாது தொடரும் வகையிலும் கிடைக்கின்றன. சில வேளைகளில் அக்கதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அடிப்படைகள் திரிக்கப்பட்டு புது வடிவமெடுக்கும் கதைகளும் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் கதைகளும் நமக்குக்  கதையின் மையப் புள்ளியாக இருக்கும் சாமிகளும் ஒவ்வொரு ஊருக்கும்   அடையாளச்சின்னங்களாக அமைந்து விடுகின்றன. இந்தக் காரணத்தால், இப்புனைக்கதைகளும் புராணங்களும் அந்த  கிராமத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாத சொத்துக்களாக அமைந்து விடுகின்றன.

குறத்தியாறு, இப்படி ஒரு கதை சொல்லியின் முயற்சியில் வெளிவந்திருக்கும் ஒரு  காப்பியம். எழுத்தாளர் கௌதம சன்னாவின் எழுத்தில்  வடிக்கப்பட்ட ஒரு ஆற்றின் கதை.

இந்த நாவலை நான் வாசிக்க நேர்ந்த போது நாட்டார்வழக்காற்றியல் வகையிலான ஒரு வரலாற்றுப் பதிவிற்கு ஒரு நல்ல சான்றாக இந்த நாவல் அமைந்திருப்பதை உணர்ந்தேன்.

இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம் குறத்தியாறு தான். வட சென்னையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தின்  மொன்னேட்டுச் சேரியே இந்த நாவல் நடக்கும் கதைக்களம். குறத்தி நதிக்கான புதிய புராணம் அங்கேயே  அதே ஊரில் பிறந்து வளர்ந்து அந்த கிராமத்திலேயே வழி வழியாக சொல்லப்பட்ட  கதைகளை கேட்டு வளர்ந்த ஒரு கதாசிரியரால் வடிவமைக்கப்பட்டுள்ளது  .  கிராமத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும், இயற்கையின் அசைவுகளையும், வயல் வெளிகளையும், ஆற்று மணலின் தன்மையை விளக்குவதிலேயும் அங்கேயே பிறந்து வளர்ந்து ஒவ்வொரு நொடிப்பொழுதையும் தன் மனதில் குறித்து வைத்து,  வழி வழிச் செய்திகளின் அடுக்கில்  தன் சிந்தனைகளை நாவலாசிரியர் பதிந்திருக்கின்றார்.

​இந்த நாவலில் வரும் செய்திகள் வழிவழியாக மக்களால் கதைகளாகச் சொல்லப்பட்டு மக்கள் மனதில் நிலைத்து விட்ட சம்பவங்களே. அன்று குறத்தியாக உருவகப்படுத்தப்பட்ட பெண் இன்று அந்தச் சிறிய கிராமத்தில் குறத்தி அம்மனாக வழிபடப்படுகின்றாள். இன்று  அங்காளபரமேஸ்வரி  என்ற கூடுதல் பெயரையும் இந்த அம்மனுக்குக் கிராம மக்கள் வழங்கியிருக்கின்றனர்.

சாமிகள்  உருவாக்கப்படுவது தமிழர் பண்பாட்டில் காலம் காலமாக இருக்கும் நிகழ்வு தான். அந்தச் சாமிகளைச் சிறப்பிக்க அவர்களுக்கென்று சிறப்பு வழிபாடுகள், ஆண்டு விழா என்பன தோற்றுவிக்கப்பட்டு  கோயிலும், கோயிலைச் சார்ந்த நிகழ்வுகளும் என்ற வகையில் தமிழகத்தின்  ஒவ்வொரு கிராமங்களிலும் பல  சடங்குகள் நிறைந்திருக்கின்றன.

வழிவழியாக மக்கள் மனதில் கதையாக நிலைத்திருந்த ஒரு பெண் இன்று குறத்தியம்மனாக, அங்காளபரமேஸ்வரியாக பரிணாமம் பெற்று கிராம மக்கள் வாழ்வில் அவர்களைக்காக்கும் அன்னையாக அமர்ந்திருக்கின்றாள். கோயில் பூசாரியும் குறத்தியாறு நாவலின் ஆசிரியர் திரு.கௌதம சன்னாவும் அவரது நண்பர்களும் குறத்தி அம்மன் பற்றியும் கோயிலில் நடைபெறும் சடங்குகள் பூஜைகள் திருவிழாக்கள் பற்றியும் இந்தப் பதிவில் விவரிக்கின்றார்கள்.

புராணங்கள் இன்றும் பிறக்கின்றன. புராணக்கதாமாந்தர்கள் இன்றும் அவதாரம் எடுக்கின்றனர். மனித குலம் உள்ள மட்டும் புராணக்கதைகள் உருவாக்கம் என்பது தொடர் நிகழ்வாக நிச்சயம் இருக்கும்.

​இந்த நாவல், தமிழ் எழுத்துலகிற்கு பழமையும், புதுமையும், நிஜங்களும் கற்பனைகளும் கலந்ததொரு வித்தியாசப் படைப்பு.  ஒரு கிராமத்து நிகழ்வு கதையாகப் புனையப்பட்டு வழிவழியாக மக்கள் மனதில் நம்பிக்கையாகப் பதியப்பட்டு, வண ங்கப்பட்டு வரும்   நிகழ்வை மிக உன்னதமாக இந்த நாவலில் புதுமைப்படைப்பாக வழங்கியிருக்கின்றார் திரு.கௌதம சன்னா.

இத்தகை படைப்புக்கள் தமிழ் இலக்கிய உலகிற்கு மட்டுமல்லாது வரலாற்றுப்பதிவாகவும் வளம் சேர்க்கும் . தொடரட்டும்!

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

1 comments:

gowthama sannah said...

வணக்கம்..

குறத்தியாறு என்ற தலைப்பில் நான் எழுதிய காப்பிய புதினத்தைப் படித்து அதன் மீது உருவான ஈர்ப்பினால் முனைவர் சுபா அவர்கள் புதினத்தின் கதைக் களத்தினை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தபோது எனக்கு ஆச்சர்யம் உண்டானது. ஆனால் அதை விரைவிலேயே உண்மையாக்கினார் என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். சுபா அவர்களின் கடுமையான பணிகளுக்கு மத்தியில் அதற்கான நேரம் ஒதுக்கி கதைக்களத்திற்கு வந்த நோக்கம் உன்னதமானது. அது போன்ற தீவிரத்தை தமிழகத்தில் என்னால் காண முடியவில்லை என்பது துரதிட்டமே.

தமிழகத்தின் தொண்டை மண்டலத்திற்கு சிறப்புப் பெயர் •சான்றோர் உடைத்து• என்பது. ஆனால் அண்மைக்காலமாக தொண்டை மண்டலத்தில் கலை மற்றும் இலக்கிய மரபுகள் அவ்வளவாக பேணப்படவில்லை. அந்த வகையில் மிக நீண்ட காலத்திற்கு பிறகு உருவான கலைப்படைப்பாக குறத்தியாறு காப்பிய புதினத்தை எடுத்துக் கொள்ள முடியும். ஒரு காலத்தில் பாலாறு என ஓடிக்கொண்டிருந்த ஆறு கால ஒட்டத்தில் திசைமாறி செங்கல் பட்டிற்கு அருகே போய் கல்பாக்கத்திற்கு அருகில் கடலில் கலந்தது. பழைய பாலாறு தற்போது எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது. அதன் தற்போதைய பெயர் கொற்றலை அல்லது கொசஸ்த்தலை ஆறு. அந்த ஆற்றிற்க்கு உள்ள தொண்மக் கதைகளினால் அதற்கு குறத்தியாறு என்று பெயரும் உண்டானது. ஆனால் அது அவ்வளவு வழக்கத்தில் இல்லை. இந்த நுண்மையாக விசயத்தில் முக்கியத்துவத்தை முனைவர் சுபா உணர்ந்துக் கொண்டத்தில் விளைவாகத்தான் குறத்தியாறு பயணம் அமைந்ததென நினைக்கிறேன். இந்தியாவில் உள்ள நதிகளுக்கு எதாவது ஒரு வகையில் காப்பிய அந்தஸ்த்து கிட்டி உள்ளது. ஆனால் அந்த தகுதி கிட்டாமல் இருந்த நதிகளுள் ஒன்று கொற்றலையாறு. குறத்தியறு காப்பிய புதினத்தின் மூலம் அது ஓரளவிற்கு நிறைவேறியுள்ளது. அந்த நம்பிக்கையை வீச்சாக கொண்டு சேர்த்ததில் முனைவர் சுபா அவர்களின் பங்கு முக்கியமானதாக கருதுகிறேன். எதிர் வரும் காலங்களில் சுபாவின் இந்த விழியப்பதிவு அதற்கான ஆவணமாகவும் சான்றாகவும் இருக்கும்.

நன்றி முனைவர் சுபா

அன்புடன்
சன்னா